title


பெரு வலி

அனல் வீசும் கோடையில்
சிறகெரிந்த பறவைக்கு அடைக்கலமானது
ஆதிரா வரைந்த மரம்…
அகம் மகிழ்ந்து
அவள் கைகளில் அணிவிக்கப்பட்டன
தங்க வளையல்கள் !
*
பின்பொரு வாடைக்காற்றில்
உயிர் நடுக்கம் போக்கியது
ஆதிரா உயிர்ப்பித்த ஆதவன்…
தங்கக் கொலுசு இரண்டை
அவள் பாதத்தில் அணிவித்து
செலுத்தப்பட்டது காணிக்கை !
*
அழுது கொண்டிருந்த குழந்தையை
ஆதிராவின் தூரிகைத்தாய்
தாலாட்டிய நன்நாளில்
அவள்தான் கலையரசி என்று
சூட்டப்பட்டது பொற் கிரீடம்.
*
தன் கலையை மறந்துபோக
காரணங்கள் கிடைத்த நாளில்
விலங்காய் மாறின
வளையல்களும் கொலுசுகளும்
முள் முடியானது பொற் கிரீடம்
*
இறுதியாய் அவள் வரைந்த
அன்னை மேரி கண்களில்
இன்னமும் வழிந்து கொண்டிருக்கிறது
ரத்தக் கண்ணீர் !

No comments: