title


நாளை நீ

சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்
என் நேற்றைய மற்றும் நாளைய
நண்பர்கள்...

என்னை குறிவைத்து
எறியப்படுகின்றன
கேலிக்கணைகள்...

குத்திக் கிழித்து
குருதி சிந்தவைக்கும்
கேலிக்கணைமழை...

என்னை மறைத்தபடி
ஏராள ஏமாற்றங்கள்
எண்ண விடுவதில்லை
எதைப்பற்றியும்...

என்னை காட்சிப்பொருளாக்கி
கழித்திடும் நண்பர்களே
நான் மீண்டுவரும் நாள்
வெகு தொலைவிலில்லை...

அதுவரை நன்கு சிரித்துக்கொள்ளுங்கள்
அதன்பின் அவஸ்த்தைகளும்
ஆச்சர்யங்களும் மட்டுமே
உங்களுக்கு...

அழுகையும் வலியும்
வேதனையும் புறக்கணிப்பும்
மரணம் போன்றவை...

இன்று நான்...

நாளை நீ...!

இழப்பும் பேரிழப்பும்

இன்னும் தீர்ந்துவிடவில்லை
என் வாழ்க்கை

சகியே மீதமிருக்கின்றன
நான் கடக்கவேண்டிய தொலைவுகள்...

கண்ணீருடன் வந்தாலும்
புன்னகை ஒன்றும்
நீர்த்துப்போகவில்லை...

உன் துணை இழந்தபோதும்
தொலைந்து போகவில்லை
பாதைகள்...

உன் வாசம் இல்லாதபோதும்
ஆக்சிஜனோடு அனுசரிக்க
கற்றுவிட்டேன்...

உன்சாயல் போனபின்னும்
மழையும் வானும்
அழகாய்த்தான் உள்ளன...

உதறிய உன்னால்
சிதறிய நெஞ்சம்
சீரடையும் ஓர்நாள்...

இறுதியாய் ஒன்று
தோழியே....
என்னுடையது இழப்பு...
உன்னுடையது பேரிழப்பு...

வேற்றுகிரகவாசி

மழை
மழலை
மலர்
வானம்
தண்ணீர்
காற்று
நிலம்
நெருப்பு
கவிதை
மொழி
.
.
.
.
இப்படி எல்லாவற்றிலும்
உன் சாயல் கண்டே
பழகிவிட்டேன்...

இனி நீயின்றி வாழ்வதற்கு
வேறுகிரகம் வேண்டுமெனக்கு...

அதே மழை நாள்

சுழன்று கொண்டேயிருக்கின்றது
எப்போதும் போல பூமி...

சாலைகளில் மெதுவாய்
எறும்பைப் போல
ஊர்கிறது வெயில்

துவங்கி விட்டது
மற்றுமொரு நாள்..

உடல் உணர்கிறது
யாவையும்....

மனம் நங்கூரமடித்து
நிற்கிறது...

நீ விட்டுப் போன
அதே மழை நாளில்...

மழை

ஆயிரம் யானை
ஊர்வலம் போல
மேகம் நடக்கிறது
வானில் மேகம் நடக்கிறது...

கோடி மேளங்கள்
கூடி இசைத்திடும்
ஒலியும் கேட்கிறது
இடி ஒலியும் கேட்கிறது...

வெள்ளி மலையொன்று
உருகி வழிகின்ற
ஒளியும் தெரிகிறது
விண்ணில் மின்னல் தெறிக்கிறது...

கண்ணீர் திறக்கும்
ஆறுதல் மொழியாய்
காற்றும் வருகிறது
மேகம் மழையாய் மாறியது...

காய்ந்து கிடக்கின்ற
நிலமெல்லாம் மழையை
வாரி அணைக்கிறது
நீராடை உடுத்தியது...










இலங்கை

நான்கு புறமும்
நீரிருந்தும்...
அணைக்க முடியவில்லை
யுத்த நெருப்பை!

முரண்

மென்பொருள் கற்றவள்...

மனம் மட்டும்
வன்பொருளாய் !

வேண்டுதல்

எவ்வளவு தூரம்
கடந்தாலும் வளர்ந்தாலும்
தொடர்கின்றன நினைவுகள்
நிழலைப் போல...

ஆனால்...
நிழலைப் போலல்ல நினைவுகள்
தொடர்கின்றன இரவிலும்...

பகலும் இரவும்
முழுவதும் சூழ்ந்து
இயக்கம் மறக்கடிக்கின்றன
இரக்கமற்று...

பேச்சொலிகளாலும் சிரிப்பினாலும்
இன்னபிற ஆசை
கனவுகளாலும் நிரம்பியிருந்ததது
கடந்துபோன காலம்...

ஒன்றுமேயில்லாத
நிகழ்காலம் தன்னிச்சையாய்
கடந்து கொண்டிருக்கிறது
வெறுமையை சுமந்துகொண்டு...

வறண்டு வெடித்த வெம்பரப்பில்
விழும் துளி நீர்போல
எழும் சிறு மகிழ்வும்
உறிஞ்சப்படும் உடனடியாக...

உறக்கமோ மரணமோ
இல்லை வேறுஏதாவதோ
அமைதி வேண்டுமெனக்கு...

கூடவே
நிறைய மறதியும்...

நீயும் காலமும்

கண்களிலிருந்து இன்னமும்
வழிகின்றது கண்ணீர்...

கவிதை எழுதி சுகித்த
கைகளின் வழியே கவலை...

மாறிக்கொண்டேயிருக்கும் உன்திசை
நாடும் கால்களில் களைப்பு...

எதைப் பற்றிய
கவலையுமின்றி
கடந்து போனது காலம்
உன்னைப் போலவே !

எப்படி மறப்பேன் ? !

காணும் பொழுதெல்லாம்
என்னை விடுத்து
உன் நலம் விசாரிக்கும்
நண்பர்களே அதிகமெனக்கு

எப்படி மறப்பேன்
உன்னை....

தரிசனம்


மூலவர் திரையால்

மறைக்கப்பட்டிருந்த போதிலும்.....


கருவறை முன்பு

பறந்து கொண்டிருந்தன

வெண்புறாக்கள் !

தூண்களை நாவால்

நக்கி ஆடிக்கொண்டிருந்தன

குழந்தைகள் !



திரைச்சீலையை கலைத்து

தீண்டிப் போனது

தென்றல் !


தள்ளாத வயதினரை

தாங்கி அமர வைக்கும்

பல பேர் !


எது மறைக்கப்பட்டிருந்ததோ

அதுவே மறையாததுவும் ஆகும் !

மழை....

விண்ணிலிருந்து
இடைவிடாது
எய்யப்படுகின்றது
மழை அம்பு !

அமைதியாய்
ஏற்றுக்கொள்ளும்
மண்ணில்
தேங்கும் நீர்
கொப்பளிக்கும் குருதி !

உயிர் குடிக்க
வருவதுதான் அம்பு...
என்றாலும்
உயிர் தரவே
தைக்கும் மழை !

அஞ்சலி - விஜயகுமார் D


24/9/2008 புதன் காலை விஜய் இறந்து விட்டானாம், அதுவும் தற்கொலை செய்து கொண்டானாம், புதன் மாலை நண்பர்கள் வாயிலாக நான் அறிந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.

நானும் அவனும் ஒரே கால கட்டத்தில் கோவை PSG பொறியியல் கல்லூரியில் வேறு வேறு பிரிவுகளில் படித்த போதிலும், அவன் எங்களுடன் நெருக்கமானது " TCS ILP @ NOIDA" வில் தன். (ILP - டாடா குழுமம் தன் புதிய பணியாளர்களுக்கு நடத்தும் 2 மாத பயிற்சி முகாம்). ஒரு சின்ன சிரிப்பில் துவங்கிய உறவு, பின்பு சிரிப்பாய் தொடர்ந்தது. எங்கள் குழுவிலேயே இளையவன் விஜய் தான். அவனை நாங்கள் என்னதான் ஓட்டினாலும் மனதில் தம்பி என்ற உணர்வே இருந்தது.எவ்வளவு ஓட்டினாலும் என்னதான் திட்டினாலும் முகம் கோணாமல் சிரித்துக்கொண்டே இருப்பான். எங்களுல் அரிதாக கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் மனதறிந்து யாரும் யாரையும் காயப்படுத்தியதில்லை.

அங்கிருந்த 2 மாதங்களும் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியை நாங்கள் (விஜய், அருண், பரத், ப்ரனேஷ், சதிஷ், நான், அண்ணாமலை, சேது மற்றும் டேஃப்) அனைவரும் இணைந்தே கழித்திருக்கிறோம். பயிற்சியில் இரு நபருக்கு ஒரு கணினி என ஒதுக்கப்பட்ட போதெல்லாம் நானும் அவனுமே பெரும்பாலும் இணைந்திருக்கிறோம். அதில் நான் இசை கேட்பேன் அவன் நண்பர்களுடன் "சாட்" செய்வான். இடையிடையே அவனை நான் தொந்தரவு செய்த போது அவன் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள், அவன் ஆங்கிலத்தில் உரையாடுவதை "வாட் யா?" , "டெல் யா?" என ஓட்டியது இப்படி எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றது. அவனை நாங்கள் விஜய் என்று அழைத்த தருணங்கள் மிக குறைவு. "மாமா" என்று தான் அழைப்போம். மொழியறியாத வட இந்திய நண்பர்களும் மாமா என்று அழைத்ததும் நினைவிலிருக்கிறது.

2 மாதம் கழிந்து விஜய் மட்டும் புவனேஸ்வர் செல்ல நாங்கள் சென்னை திரும்பினோம். டெல்லி - சென்னை வந்த அந்த 36 மணி நேரங்களும் அவனை முன்னெப்போதும் இல்லாத படி அதிக முறை நினைத்திருப்போம். அவனில்லாத வெறுமையை உணரும் வண்ணம் 2 மாதமும் இணைந்திருந்தான் விஜய். நாங்கள் சென்னை வந்த 2 மாதம் கழித்து விஜயும் சென்னைக்கு மாற்றலாகி வந்தான். அதன் பின் சில முறை நேரில் சந்தித்திருக்கிறேன். குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல் என பல வழிகளிலும் மிகச் சில முறைகள் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவன் வலிகளை பகிர்ந்ததாக நினைவில்லை.

திருமணமான எங்கள் நண்பன் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் அவனை கடைசியாக பார்த்தேன் அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தான். அவன் எங்களுடன் பழகத் துவங்கி ஒரு வருடம் முற்றுப் பெற்ற நிலையில் அவன் வாழ்வை முடித்துக் கொண்டான். இது தான் காரணம் என எதுவும் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் விஜய் நல்லவன் , மிக நல்லவன். இந்த முட்டாள்த் தனத்தினால் அவன் வேண்டுமானால் பிரச்சனைகளில் இருந்து தப்பி இருக்கலாம் ஆனால் அவன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் எல்லாம் என்ன செய்வது? குழப்பம் தான் எஞ்சுகிறது. என்றாலும் இதுதான் காரணம் என எதுவும் தெரியாமல் இதில் எதை சொல்ல...எதை விட...

அன்பு நண்பனுக்கு எங்கள் அஞ்சலி...
(Batch D08, TCS ILP @ NOIDA)

வன்மம்

மனதுள் வரைமுறையில்லாது
வன்மம் கட்டவிழ்ந்து
கொண்டேயிருக்கிறது !

என்ன மூலம்?
எவரெவர் பயனாளி?
எதுவும் எண்ணாது !

எது துவக்கப்புள்ளி ?
எப்படி முடிவுறும் ?
வரையறுக்கவியலாத
காட்டாறு போல்
பெருகி ஓடுகிறது !

அடிபட்ட பாம்பின்
சீற்றமா?
அணையப்போகும் விளக்கின்
பிரகாசமா?
வன்மத்தின் வரலாறு
வார்த்தைகளுல் அடங்காது!

பாலையின் சூறைக்காற்றென
மணல் மூடி மழுங்கடிக்கப்பட்டது
மனம் !

அறிவிற்கும் மனதுக்குமிடையே
ஆயிரமாயிரம் தர்க்கங்கள்
தர்க்கத்தில் தோற்றுப்போய்
சூதால் கவ்வப்படுகிறதென்
வாழ்க்கை !

நினைவிருந்த போதும்
வன்மத்தால் நிரம்பி
வழிகிறதென் மனம் !

அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சாகும்....
நஞ்சு அமுதாகுமோ?

விடையறிந்த காலதேவன்
விளையாட்டை தொடருகின்றான் !