title


பள்ளிகொண்டபுரம்

 உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது.

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

*

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார்.

.

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது.

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம்.

#வாசிப்பு_2020

#பிடித்த_புத்தகங்கள்

நீலகண்டப் பறவையைத் தேடி

எதிரிலிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகள் அனைத்துமே, ஒரு நொடியில் பறவைகளாக உருமாற்றமடைந்தன. மறுநொடியில் மீண்டும் இலைகளாக. இம்முறை இலைகளின் இடைவெளியில் போர்வீரர்கள் தோன்றலாயினர். தொடர்ந்து சம்பந்தமில்லாத மனிதர்களும் சம்பவங்களும். ஒரு மாபெரும் மந்திரவெளியில் இருப்பதான பயம் பீடித்தது. நல்லவேளையாக அம்மா என் எண்ணவோட்டத்தைக் கலைத்தாள். கடும் காய்ச்சலால் முணங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது 13-14 வயதிருக்கும். காய்ச்சலுக்கு மந்திரிக்க (கொங்கு வட்டார மொழியில் சொல்வதானால் ”செரவடிக்க”), நந்தகுமார் அண்ணன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது கிடைத்த அனுபவம் மேற்சொன்னது. பால்யத்தின் எண்ணற்ற அனுபவங்களுக்கு மத்தியில் இவ்வனுபவம் நிலைத்து நிற்க தன் அமானுஷ்த்தன்மையும் அந்தக் கனவுவெளியும் ஒரு முக்கியமான காரணம் என இப்போது தோன்றுகிறது. 

.

அவ்வனுபவத்துக்கிணையான கனவுத்தன்மையில் சஞ்சரிக்க வைத்தது “நீலகண்டப் பறவைத் தேடி” நாவல் (வங்க மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய; தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). 1971ல் எழுதப்பட்ட இந்நாவல், சுதந்திரத்துக்கு முந்தைய, தேசப் பிரிவினை எண்ணம் துளிர்விடத் துவங்கிய காலகட்டத்தைச் சித்தரிக்கின்றது. ஒரு குடும்பத்தையோ அல்லது தனி நபரையோ மையப்படுத்தாமல், கிழக்கு வங்காளத்தில் பாயும் “ஸோனாலி பாலி” நதியையும், அதன் கரையிலிருக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் பேசு பொருளாகக் கொண்டுள்ளது. நதிக்கரையில் வாழும் வசதி மிக்க இந்துக்கள், அவர்களிடம் பணி செய்யும் ஏழைகளான இஸ்லாமியர்கள். இவ்விரு மக்களிடையே நிலவும் இணக்கமும் பிணைப்பும், மாறிவரும் அரசியல் சூழல், அது அம்மக்களின் வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் என ஒரு தளத்தில் கதை கூறப்பட்டாலும், மற்றொரு தளத்தில் இந்நாவல் காட்டும் விவரணைகள் நம்மை அந்நிலப்பரப்புக்குள், அந்த நதியில், வானில் திளைக்கச்செய்கின்றன.

*

இந்நாவலின் முக்கியக் கதாப்பாத்திரம், ஊரின் மிகப் பெரிய டாகூர் குடும்பத்தின் மூத்த பிள்ளை மணீந்தரநாத். உடலளவிலும் மனதளவிலும் பழுதற அமைந்தவர். எவரும் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு குறை கூட இல்லாதவர். அப்படியொரு முழுமையான மனிதர், நம்மைப் போல சாதாரணமாக உண்டு, களித்து, உறங்கி மடிந்தால் பின்னர் ”விதி” என்ற சொல்லுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்? சிறுவயதிலேயே மணீந்தரநாத்தின் கண்ணைப் பார்த்து அவர் பைத்தியமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது எனக் கூறிகிறார் ஒரு பீர். அவர் வாக்கு பொய்த்துப்போகாமல் காத்த பெருமை வெளிநாட்டுப் பெண் ”பாலின்” உடனான மணீந்தரநாத்தின் காதலுக்குக் கிடைக்கிறது. கூடவே, மகனின் ஆசையை நிறைவேற்றாமல், அவன் மனப்பிறழவுக்கு தானே காரணம் என மகேந்திரநாத் வருந்தவும் அதுவே வழிவகுக்கிறது. இந்நாவல் முழுவதிலும் தான் இழந்தவொன்றை தேடி அலையும் மணீந்தரநாத்தின் சித்தரிப்புகள் அனைத்துமே கனவுத்தன்மை கொண்டவை. மணீந்தரநாத்தின், சாயலுள்ளவன் என நாவலில் சொல்லப்படும் சோனா, அவரது தம்பி மகன். தன் பெரியப்பா உடனான சோனாவின் நெருக்கமும், அவனது அலைக்கழிப்புகளும் அவன் இன்னொரு “பைத்தியகார டாகூராக” மாறுவதற்கான சாத்தியங்களைக் காட்டுகின்றன. இதை மணீந்தரநாத்தே, சோனாவிடம் கூறும் காட்சி, இந்நாவலின் உச்சதருணங்களுல் ஒன்று.   

*

ஊரில் இருக்கும் வயதான முஸ்லீம்கள் பெரும்பாலும் தங்கள் இந்து எஜமானர்கள் மீது எவ்வித வருத்தமுமற்றவர்கள். நிலச்சொந்தக்காரங்கள் பசியின் சுவடே அறியாதிருக்க, விளைச்சலைக் காவல் காத்துக்கொண்டு கொடும் பசியை எதிர்கொள்ள நேரும் போதும் தங்கள் எஜமானர்களின் பெருந்தன்மை மீது எவ்வித சந்தேகமும் அற்றவர்கள். மாறிவரும் அரசியல் களம், பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் இவை எதுவும், இக்கிராம மக்களை பெரிதும் பாதிப்பதில்லை. இந்நாவல் காட்சிப்படுத்தும் காலகட்டம் பிரிவினை எண்ணம் முளைவிட்ட சமயம் என்பதால், இவ்விரிசல் பொது மக்களிடையே பெரிதாகத் தென்படுவதில்லை என எண்ணுகிறேன். என்னதான் மதத்தின் பெயரிலான வேறுபாடுகளை பரப்பினாலும், தானறிந்த சமூகத்தைக் கொண்டே அதைக் கடக்கும் மனநிலை இருபக்கத்திலும் இருக்கிறது. டாக்கா கலவரத்தில் மாண்டுபோன மனிதர்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்), குறித்து மனம் வருந்தும் ஆபேத் அலி, தன் உள்ளூர் இந்து மக்களின் தாராள மனப்பான்மையை எண்ணி அமைதியடைகிறார். கிட்டத்தட்ட இதைப்போன்ற ஒரு அணுகுமுறையே, அவ்வூரின் முந்தைய தலைமுறை முஸ்லீம் பெரியவர்களிடமும் இருக்கிறது. அதைப்போலவே, தன்னுடைய கணவனை டாக்கா கலவரத்தில் பலிகொடுத்த இந்துப் பெண் மாலதி, தன் பால்ய சிநேகிதர்களான உள்ளூர் இஸ்லாமிய நண்பர்கள் மீது எவ்வித காழ்ப்பும் கொள்வதில்லை. 

பொதுவில் வைக்கப்படும் பிரச்சாரங்களை, தானறிந்த சமூகம் மூலம் எதிர்கொள்ளும் இம்மனநிலைக்கான உச்சகட்ட உதாரணமாக கொள்ளத்தக்கவர் ஆசம். டாகூர் குடும்பம் மீதான அவருடைய விசுவாசத்தை, எஜமான் குடும்ப உறுப்பினர்கள் மீது அவர் கொண்டுள்ள உரிமையை எந்தப் பிரச்சாரமும் சிதைப்பதில்லை. வீட்டில் உள்ளோர் பேச்சையும் மீறி சோனாவை திருவிழாவுக்கு அழைத்துப் போவதில் அவர் காட்டும் உரிமையும், எதிர்பாராத கலவரத்தால் குழந்தைகளைத் தொலைத்துவிடும் சமயத்தில் ஈசத்தின் தவிப்பும் அவரது மனநிலைக்கான சான்றுகள். ஈசத்தின் இந்தப் பதைபதைப்பு, பீரின் தர்க்காவில் சோனாவைத் தவறவிட்டு பின்னர் கண்டுபிடித்த மணீந்தரநாத்தின் பதைபதைப்புக்கு சற்றும் சளைத்தில்லை என எண்ணத் தோன்றுகிறது.

விரிசல் விடத்தொடங்கிவிட்டால், சாதாரண நிகழ்வுகள் கூட அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தமுடியும். உதாரணங்களாக, இந்நாவலில் வரும் இரு சம்பவங்களைக் கூறமுடியும். டாக்காவிலிருந்து ”ஷாஹாபுத்தீன் சாகேப்” வருவதை முன்னிட்டு, லீக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யானையில் பவனி வரும் பெரிய டாகுர் ”மணீந்தரநாத்தால்” குளறுபடி உண்டாகிறது. இதை திட்டமிட்ட சதியாக எண்ணும் சாம்சுதீன் சின்ன டாகுர் ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கூட்டத்தில், தாங்களும் இதைப்போலவே பிரச்சனை செய்யலாம் என எண்ணுகிறான். இது தற்செயலான ஒரு விபத்தை திட்டமிட்ட சதியாக பார்க்கும் மனநிலையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் பெரிய டாகூரின் மனநிலைப்பிறழ்வு அந்த ஊருக்கே நன்றாக தெரிந்த ஒன்றுதான். இதைப்போலவே தனி நபர் பிரச்சனைகளால் பெரும் கலவரம் உண்டாகும் நிகழ்வையும் சொல்லலாம். இந்துப் பெண்களை வேற்று சமூக ஆண்கள் கிண்டல் செய்ய, அதைத் தட்டிக்கேட்டதால் திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது. விளைவாக, பிரச்சனையில் எவ்வித தொடர்பும் அற்ற இருதரப்பினருக்கும் அப்பாவிகளுக்கும் சேதாரம் விளைகிறது.

இந்நாவலின் முக்கியமான இணைகதாப்பாத்திரங்கள் இஸ்லாமியப் பெண்ணான ஜோட்டனும், இந்துப் பெண்ணான மாலதியும். நான்காவது திருமணத்துக்கு காத்திருக்கும் இஸ்லாமியப்பெண் ஜோட்டனும், கணவனை டாக்கா கலவரத்தில் இழந்த இந்துப்பெண் மாலதியும் சந்திப்பது உடல் சார்ந்த தேவையை. ஜோட்டனைப் பொருத்தமட்டில் உடலென்பது நிலம் போல அதில் அல்லாவுக்கு வரி தருவதே தனக்கு விதிக்கப்பட்ட கடன் என எண்ணுகிறாள். அதன் பொருட்டு அவள் செய்துகொள்ளும் மறுமணங்களை மிக இயல்பான ஒன்றாக அவளால் கடக்க முடிகிறது. மறுபுறம் மாலதி, தான் வளர்ந்த கலாச்சாரப் பின்னணியால், தன்னுடைய ஆசைகளை மறுதலிக்க, சமூகத்தால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறாள். மட்டுமல்ல, அவளது தேவைகள் கூட வெளிப்படையாக பெரிய அளவில் காட்டப்படுவதில்லை. பழைய நினைவுகளாகவோ, கனவாகவோதான் மாலதியின் எண்ணவோட்டத்தை நாம் காணமுடிகிறது. 

*

இரண்டு எதிரெதிர் கலாச்சாரப் பிண்ணனி கொண்டவர்கள் என்றபோதும், மக்களின் ஆழ்மனதில் இம்மண்ணின் மரபின் ஒரு துளியாவது தங்கிவிடுகிறது. பக்கிரி சாயிபு, ஜோட்டனை அழைத்துக்கொண்டு தன்னுடைய குடிசைக்கு முதன்முறை செல்லும் போது, ”பாபா லோக்நாத் பிரம்மச்சாரி”யின் ஆசிரமத்துக்குச் சென்று அவரை தரிசிக்க எண்ணும் சம்பவம் அத்தகைய ஒன்று. போலவே, மானபங்கப்படுத்தப்பட்ட, மாலதியை ஜோட்டனும் பக்கிரி சாயிபும் காணும்போது, மாலதியின் கால் அவர்களுக்கு துர்க்கையம்மனைத்தான் நினைவுறுத்துகிறது. லீக்கில் சேரவிருக்கும் ஜப்பாரால், மாலதிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, தன் கையறு நிலையை நொந்துகொண்டு, ஊரை விட்டுக்கிளம்பும் சாம்சுத்தீனுக்கு கூட, கார்த்திக் விழாவுக்கு அம்மனுக்குப் படைப்பதற்கு சிறிய கதிர்கள் போதாது எனும் எண்ணம் எழுகிறது. “லட்சுமி அம்மனுக்கு இத்தணூண்டு கறிதானா” என தன் அதிருப்தியை வெளிப்படுத்தி பெரிய கதிர்களை பறித்துக்கொடுக்கும் மனநிலையே அவனுக்கும் வாய்க்கிறது. 

*

சுதேசி இயக்கத்துக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ரஞ்சித்துக்கும், லீக்குக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சாம்சுத்தீனுக்கும் ஆற்றங்கரையில் நிலவொளியில் நடக்கும் உரையாடல் மிகச்சிக்கனமான வார்த்தைகளில் சொல்லப்பட்ட ஒன்று. அவர்கள் இருவரும், தங்கள் முரண்களை மறந்து பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி துயர்மிக்கதாக இருந்தது. தன் மகனின் பிறழ்வு தான் எதிர்பாரா ஒன்று எனவும், தெரிந்தே, அவளது வாழ்க்கையை தான் சிதைக்கவில்லை என்றும் மகேந்திரநாத் தன் மருமகளிடம் சொல்லும் இடமும், மிகப்பெரிய உணர்வுகள், மிகக் குறைவான வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டதன் இன்னொரு உதாரணம். 

*

நாவலில் ஒரு காட்சியில், யானை மீது ஏறி ஊரைப் பவனி வரும் பெரிய டாகூர் பற்றிய சித்திரம் வருகிறது, சொல்லப்போனால், மானசீகமாக, அந்த யானையை சவாரி போலத்தான் பெரிய டாகூரின் அலைக்கழிப்புகள் இருக்கின்றன. தனக்கு கீழிருப்பவர்கள் எவரையும் அவர் பொருட்படுத்துவதில்லை. அல்லிக்கிழங்கு பறிக்கப்போய் தண்ணீரில் மூழ்கி இறக்கும் ஜாலாலியை அனைவரும் தேடிக்கொண்டிருக்க, ஆற்றில் குதித்து அவள் சடலத்தை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் உட்பட மணீந்தரநாத்தின் செயல்களில் பெரும்பாலும் ஒரு நாட்டார்கதைத்தன்மை காணக்கிடைக்கிறது.

*

ஒட்டுமொத்தமாக ”நீலகண்டப் பறவையைத் தேடி” நாவலை, அதன் பரப்பை நான் அதன் கதாப்பாத்திரங்களுடன் இணைத்து பின்வருமாறு தொகுத்துக்கொள்கிறேன்.

பெருகியோடும் ஆற்றின் கரையில் நின்று அதை ஏங்கிப் பார்க்கும் மாலதி. அவளுக்கு தன் வாழ்வும் தேவையும் அந்த ஆறாகவும், அதை அவள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகவும் அமைகிறது. மாலதி இறங்கத் தயங்கும், சமூகத்தின் பெயரில் அவளுக்கு மறுக்கப்படும் ஆற்றில் அதே சலுகையால் நீந்தித் திளைக்கும் ஜோட்டன். இன்னொருபுறம் ஆற்றில் மூழ்கி மடியும் ஜாலாலி போன்றவர்களுக்கு மீளமுடியாத சுழலாக அமையும் பசி. இவை அனைத்தையும் கடந்து, கரையோரங்களிலும், நதியின் ஆழத்திலும், வான் நோக்கியும் தனக்காக தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் “மணீந்தரநாத்”க்கோ அனைத்தும் ஒன்றே ”கேத்சோரத்சாலா” 

 

புத்துயிர்ப்பு

அன்னா கரீனினா, போரும் அமைதியும் ஆகிய மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப் பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில் “புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”. அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள், ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல் தொலைவுகொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல் எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும், வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும், இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. 

*

ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றோயர்களுல் ஒருவராக வரும் கோமகன் நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம் மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார். அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச் செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின் மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஸ்லூதவ். தொடர்ந்து நாவல் முழுவதிலும் நெஹ்லூதவ்வின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக் கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதவ்வின் பயணம் என்பதாகவும் இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.

இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள், செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின் மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான் விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை, குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகாரவர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும் அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம், மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும் நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை. தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை அச்சாகக் கொண்டு அமைகின்றது.

*

நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன் செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன. தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும் விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர் அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம் நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும் நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றோயர்களின் கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல, சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.

நெஹ்லூதவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில் மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும் தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின் பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக் கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும், சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக் கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம் உயர்த்தப்பட்டதன் விளைவுகளே. 

இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும் உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றோயர்களில் ஒருவராக வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத் தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும், அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது. 

மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும் மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன் நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது அதற்கொரு நல்ல உதாரணம்.

நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள். இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ் முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில் ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.

நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க உதவியாய் இருக்கின்றன.          

ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ, பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல் கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும் இருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல் படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது. 


பின்குறிப்பு:

இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை, அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135


கொற்றவை

சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர்.

*

சிலப்பதிகாரம் என்றவுடனே நமக்கு பொதுவாக நினைவுக்கு வரும் விசயங்கள் என்னென்ன ? கண்ணகி, கோவலன், மாதவி, நெறி பிறழ்ந்த பாண்டிய மன்னன், எரிக்கிரையான மதுரை, இளங்கோ, சேரமான். பின்பு, இவர்களின் வாழ்வினூடே தமிழர் பெருமையை, கற்பை, மாண்பை கூடவே அறம் கூற்றாகும் உண்மையை சொல்லிச்செல்லும் கதை. உண்மையில் கொற்றவை நாவலை துவங்கும் போது எனக்கும் அப்படியொரு எண்ணம்தான். கூடவே, மேற்சொன்ன களத்தை ஆசான் திரு.ஜெயமோகன் எப்படி எழுதியிருப்பார் எனும் ஆவலும். ஒரு வாசகனாக என்னுடைய எதிர்பார்ப்பை நாவல் கடந்து சென்றுவிட்டது. நாவல் அல்ல. இது புதுக்காப்பியம். வெறுமனே பெயரளவில் காப்பியம் என்றல்ல. உண்மையில் கையாண்ட மொழியில் கூடி வந்திருக்கிறது அக்காப்பியத்தன்மை.

காப்பியம் பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐம்பகுதிகளாகப் பஞ்சபூதங்களை நினைவுறுத்தும்படி பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு வெறுமனே பாகம் பிரிப்பதாயன்றி, காப்பியத்தின் நடைக்கு வலுசேக்கும் படி அமைந்திருக்கிறது.

1.   நீர்

”புன்னகைக்கும் கருமையே நீலம்” முதல் பத்தியில் வரும் இவ்வரிகளில் துவங்கிய மொழியில் வசீகரத்தில் ஆழ்ந்த என்னுடைய திளைப்பு நாவல் முழுவதுமே தொடந்து வந்தது. ஆதியில் புழங்கி வந்த பல மனிதர்கள், அவர்தம் நகரங்கள், காவல் தெய்வமாயமைந்த முக்கண்ணன் மற்றும் அன்னையர். கடல்கோள் நிகழ்ந்து ஆழத்தில் அவர்கள் உறைதல் என இப்பகுதி பேசுவது பண்டைய காலம். கூடவே ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவர்தம் பெயர் துலங்கி வந்த காரணம். இவை பேசும் பொருளைத் தாண்டி குறிப்பிடத்தக்க அம்சம் அது சொல்லப்பட்ட விதம். உதாரணமாக சொல்வதென்றால், சீவங்களின் தலைவன் சிவனென்றாதல், மதுரை என்றான மதில் நிரை, எல்லை மீது கடல் அலை பரவும் அலைவாய், பழையோனும் பண்டையோனும் மருவி பாண்டியனாதல், அகத்திலிருந்து வந்த அகத்தவன், அதுவும் மருவி அகத்தியனாதல் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விவரணைகளின் உட்சமாக எனக்குத் தோன்றியது “தன்னை இமிழும் மொழியானாதால் அது தமிழானது”. தமிழில் புழங்கிவரும் சொற்கள்/பெயர்கள் உருவான விதம் அழகு என்றால், மொழிக்கு தமிழ் எனப்பெயர் வந்த இடம் பேரழகு.

2.   காற்று

கண்ணகி பிறப்பு, கோவலனுடனான திருமணம், கோவலனுக்கு மாதவியுடன் காதல், பின் ஊடல், கண்ணகியுடன் மதுரை செல்லுதல். போலவே, மோகூர்ப் பழையன் குட்டுவன் மகள், தென்னவன் பாண்டியனின் கோப்பெருந்தேவியாதல் என நானறிந்த சிலப்பதிகாரத்தின் துவக்கப்பகுதிகள் அனைத்தும் நிகழ்வது “காற்று” எனும் இப்பிரிவில். கண்ணை அன்னையில் வடிவமென கண்ணகியும், கொற்றவையின் வடிவமென கோப்பெருந்தேவியும் அவரவர் குலங்களால் சீராட்டப்படுகின்றன. அவ்வன்னைகளின் காற்சிலம்புகளின் ஒரு நகலே இவர்களிடமும் இருக்கிறது. வணிகக்குடியில் பிறந்த கோவலனின் யாழ் இசை ஆர்வம் வரும் பகுதிகள் அவன் தடம் மாறியதற்கான காரணத்தை சுட்டுகின்றன. இப்பகுதிகளும், போலவே ஒரு நள்ளிரவில் வணிகம் மறந்து மூடப்பட்ட தன் கடைமுன் நின்று கோவலன் வருந்துமிடமும், உணர்வுப்பூர்வமானவை. இத்தகைய விவரிப்புகள் எப்பாத்திரத்தையும் ஒற்றைத்தன்மையுடன் அணுகாமல் அவர்தம் நிலையையும் உணர வழிவகுக்கின்றன.

3.   நிலம்

மாதவியுடனான ஊடலுக்குப் பின்னர், கண்ணகியும் கோவலனும் மதுரை செல்கிறார்கள். ஐவகை நிலங்களைக் கடந்து மதுரையை அவர்கள் அடைவது வரை நிலம் என பகுக்கப்பட்டுள்ளது. கவுந்தி அடிகளாக மதுரை வரை துணைவரும் நீலிக்கும் கண்ணகிக்குமான உரையாடல்கள் இப்பகுதியின் அற்புதங்கள். கட்டற்ற நீலியை அஞ்சும் கண்ணகி, ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு விதமாக அன்னை வெளிப்படும் தருணங்கள், நீலியுடனான கண்ணகியின் உரையாடல்கள், அவ்வுரையாடல்களினூடே, பயணம் நீள நீள அதற்கேற்ப கண்ணகி அடையும் மாற்றங்கள், ஒவ்வொரு வகை நிலத்தின் சிறப்பியல்புகளையும் அந்நிலத்துக்குரிய கண்களைக் கொண்டு கண்ணகியை (நம்மையும்) காணவைக்கும் நீலி என இப்பகுதியில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் பல. ”வருபவர்களுக்கும் நீங்குபவர்களுக்கும் நடுவே துலாக்கோலென அசைகிறது இந்நகர்” என சுட்டப்படும் மதுரையின் துணைவாயிலில் வழியே கண்ணகியும் கோவனும் நுழைகிறார்கள்.

4.   எரி

மதுரையில் கண்ணகி-கோவலன் வாழ்வும், சிலம்பு விற்கச்சென்ற கோவலன் அநீதியால் கொல்லப்படுவதும், சினந்தெழுந்த கண்ணகியால் மதுரை எரிக்கப்படுவது என எரி பகுதி பகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி சுருக்கிச் சொல்லி விட முடியாத வண்ணம் இருக்கிறது கதை நகர்வு. மனைவிக்கு அஞ்சியோ அல்லது அவள் மீதான காதலாலோ மதுரையை அவள் பிறந்த மறவர் குலம் மறைமுகமாக ஆள, கண்டும் காணாமலும் இருக்கிறான் மன்னன், அதனாலேயே அறம் பிழைத்தது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அத்தனை பிழைக்குமான மொத்தப் பிழையீடாக தன் உயிரை நிகர் செய்கிறான் பாண்டியன். மன்னவன் கொஞ்சம் சிந்திக்கும் தருணத்திலும் “மறவர் இட்டதே மண்ணில் அறம்” என அல்லவை சொன்ன கோப்பெருந்தேவிக்கும் மெய்யறமே கூற்றாகிறது. ஒவ்வொரு முறையும் மறவர் குடித் தலைவன் பழையன் குட்டுவனின் அடாத பேச்சுக்களால் சினம் கொள்ளும் எண் குடித்தலைவர்களின், அம்மக்களின் உள நெருப்பும் மதுரையை எரித்த பெரு நெருப்பினுள் சிறு துகள்களாகவேனும் அமைந்திருக்கக்கூடும்.    

5.   வான்

விண்ணேகிய கண்ணகியின் தடங்கள், மலைமக்கள் மூலம் அதை அறியவரும் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகளான ஐய்யப்பனின் கதை, மலையேறிச்சென்று அன்னையில் அடிகளை பார்க்கும் தருணம், சேரமான் செல்லும் வழியில் சந்திக்கும் பல்வேறு மக்கள், அவர்தம் சடங்குகள், எங்கும் மாறாத ஒன்றாய் தொடர்ந்து வரும் பேரன்னை, கண்ணகி சென்ற வழியில் தானும் செல்லும் பெருந்தோழி, இளங்கோ என இப்பகுதி பகுக்கப்பட்டுள்ளபடியே உச்சம். பல இடங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாந்தர் தம் மெய்மையின் மூன்று நிலைகளை அரசவையில், படிவர் தாமரையைக் கொண்டு விளக்கும் (முகிழ்த்தாமரை, ஓரிதழ் விரிந்தது, முற்றிலும் விரிந்தது) இடமும், கொடுங்கோளூர் (கோள் ஓயா ஊர் ) பெயர் வந்திருக்கக்கூடிய விதமும், அறிவுக்கும் அறியாமைக்குமான ஒப்பீடும் (உதாரணம் : அறிவு என்பது அறியவொண்ணாமையின் வான் முன் எழுந்த குன்று) மிகவும் அற்புதமான விவரிப்புகள்.  

*

அன்னையர் மறைய, அன்னையர் பிறக்க, தாய்மை மட்டும் அழியாமல் இம்மண்ணில் வாழ்கிறதென்று கொள்க – என இக்காப்பியத்தில் ஒரு வரி வருகிறது. நான் எண்ணியிருந்தது போல, இக்காப்பியம் கண்ணகியின் கதையல்ல, மண்ணில் யுக யுகமாய் வாழ்ந்து வரும் அன்னைகளின் கதை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாய் அமைந்த பேரன்னையின் கதை.

*

”உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க” இது காப்பியம் குறிந்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது; இவ்வரிக்கு மிகச்சிறந்த உதாரணமாக “கொற்றவை” எனும் புதுக்காப்பியம் அமைகிறது.

பின்குறிப்பு :

நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்றன ஆசிரியரின் கன்னியாகுமரி பயண நினைவுகள். அதுவரை பஞ்சபூதங்கள், ஐவகை நிலங்கள் ஊடே வரலாற்றில் முன்னும் பின்னுமாக இந்நாவலில் திளைத்த நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தரும் பகுதி அது. எப்போதுமே அபுனைவுகள் என்றாலும் கூட, ஆசிரியர் திரு. ஜெயமோகனுக்குள்ளிருந்து ஒரு வசீகர கதைசொல்லி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பார். இப்பகுதி அதற்கான சரியான உதாரணம். இப்பகுதியை வாசிக்கும்போதே என்னுள் தோன்றிய இன்னொரு புத்தகம் “ஜெ சைதன்யாவின் சிந்தனைமரபுகள்”. அதன் ஒரு (அல்லது முதல் ?) கட்டுரையில் இதே அனுபவம் வேறொரு கோணத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

இறுதிப்பகுதியில் வரும் இன்னொரு சம்பவம் – வெறியாட்டு கொண்டெழுந்து ஆடும் பெண்ணின் கணவனை (மாணிக்கம்) அவளின் பார்வையிலிருந்து வெளியேறும்படி அனைவரும் சொல்லுமிடம். கிட்டத்தட்ட இதே சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு, திரு.ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான சிறுகதை நினைவுக்கு வருகிறது. (சிறுகதையின் தலைப்போ, சுட்டியோ கிடைத்தால் பகிர்கிறேன்).

உறைப்புளி

மொத்தம் பத்து கட்டுரைகள் கொண்ட ஒரு நூல். எழுத்தாளரின் முந்தைய நூல்கள் மிக இலகுவான வாசிப்பு நடை கொண்டவை. எழுத்தும் வெகு சுவாரசியமானது. ஆகவே, அவ்வனுபவத்தால், இந்நூலையும் ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடும் என் எண்ணத்திற்கு சவால் விட்டது அந்நூலின் ஆறாவது கட்டுரை. முதல்முறை அக்கட்டுரையை படித்து முடித்தவுடன், மேற்கொண்டு ஒரு எழுத்தைக் கூட என்னால் படிக்கமுடியவில்லை. அக்கட்டுரையின் தாக்கம் அப்படிப்பட்டது. முதல்முறை மட்டுமல்ல, தொடர்ந்து வந்த சில தினங்களிலும், அந்நூலை வாசிக்க கிண்டிலை எடுத்தாலே, விரல் தானாக அக்கட்டுரையை சொடுக்கலானது. வாசித்த ஒவ்வொரு முறையும் சில துளிகள் கண்ணீரில்லாது முடிக்க முடியாத அளவுக்கு நெகிழ வைத்தது அக்கட்டுரை. அனைவருக்குமான எழுத்தையும், நெருங்கிப் பழகினவர்கள் மனதில் நீக்க முடியாத நினைவுகளையும் தந்துவிட்டுப்போன ஒரு கலைஞனைப் பற்றிய கட்டுரை. முன்னரே அவரைப் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை படித்திருந்தாலும், இக்கட்டுரை எழுதப்பட்டுள்ள கோணம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரின் நினைவை நம்முள் கிளர்த்தும் அக்கட்டுரையின் தலைப்பும், திரு. க.சீ.சி.யின் நண்பர்களின் குறிப்புகள் வாயிலாக எனக்குக் கிடைத்த அவரைப் பற்றிய “இனித்துக் கிடக்கும்” பிம்பமும், இந்நூலில் தலைப்பும் ஒன்றுதான். உறைப்புளி.
*
இலக்கியம், தொழில் முனைவோருக்கான சொற்கள், சூழியல், மிஷ்கின், கவிதை ரசனை, மாணவர் மீதான அக்கறை என அனைத்தும் கலந்த ஒரு தொகுப்பு உறைப்புளி. செல்வேந்திரன் அண்ணன் பாஷையில் சொல்வதானால் சகல காய்கறிகளும் கலந்த சாம்பார்.
*
ஊருக்கெல்லாம் சேவை செய்பவர்களைப் பற்றி நாளிதழ்களில் சில வரிகளேனும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், நாளிதழ்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் பேப்பர் போடுபவர்களின் கடமை உணர்ச்சி எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஒரு நல்ல நாளு கெழமைல கூட ஊட்ல உக்காரமுடியாத ஒரு பொழப்பு என, நாம் அறிந்த மனிதர்களின் அறியா வாழ்வைப் பேசும் “சார் பேப்பர்!” கட்டுரை இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளுல் ஒன்று. ஊட்டியில் நிலச்சரிவின் போதும் கடமை தவறாமல் நாளிதழ்களை கொண்டு சேர்ப்பித்த, சிக்கன் குனியா காலத்திலும் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு (ஊர்ந்து) சென்று பேப்பர் போட்ட உள்ளூர் மனிதர்களில் துவங்கி, உலக அளவில் பிரபலங்கள் நாளிதழுக்கும் அதை மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் “பேப்பர் பாய்”களுக்கும் தரும் முக்கியத்துவம் வரை பல புதிய செய்திகளை விவரிக்கிறது இக்கட்டுரை.
*
”நீயெல்லாம் என்னத்துக்கு படிக்கற ?”, “இல்ல, படிச்சு படிச்சு என்ன ஆவப்போகுது?”, “இப்புடி படிச்சுகிட்டே இருக்கறது நல்லதுக்கில்ல” என நாம் எதிர்கொள்ளும் ”எதுக்கு வாசிப்பு” ரக கேள்விகளுக்கு தன் வாழ்க்கையையே சாட்சியாகக் காட்டும் ”இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்” கட்டுரை நம்மால் எளிதில் கடந்துவிட முடியாதது. குறிப்பாக, ”6 மாசம் ஆச்சு சாமி…. இன்னிக்குத்தான் சாமி சிரிக்கிறேன்” என எழுதப்பட்டிருக்கும் வரிகளை படிக்கும்போதே ஐயருக்கு முன்பாகவே என்னுடைய கண்கள் பொங்கின.

இதைப் போலவே, வாசிப்பின் இன்னொரு கோணத்தை, நம்முடைய அன்றாடத்திலும் அது செலுத்தும் ஆதிக்கத்தை எளிமையாகப் புரியவைக்கிறது “மொக்கை” கட்டுரை. ஒரு கல்லூரியில் பேசப்பட்ட அந்த உரை பகிரப்பட்டபோத மிகப்பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
*
”போடா இந்தப்படம் போனா இன்னொன்னு” என கர்வத்தில் கொப்பளிக்கும் மிஷ்கின் கொஞ்சம் நெருங்கிப் பழகின உடனே ”அவன் என தம்பி” உருகவும் செய்வார். ”கத்தாழை கண்ணால” காலம் தொட்டே மிஷ்கினின் பல பேச்சுகளில் வெளிப்பட்ட அவரது “madness”ன் ரசிகன் நான். மிஷ்கின் எனும் கலைஞனுக்குள் இருக்கும் மாமனிதன் வெளிப்பட்ட முக்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கட்டுரை “மிஷ்கின் எனும் சைக்கோ!”. ”நந்தலாலா” காலகட்டத்தில் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்டு பின்னர் “தேகம்” சர்ச்சையில் அதே அளவுக்கு கிழித்துத் தொங்கவிடப்பட்ட அழுத்தத்தை “ரைட்டருக்கு அந்த ரைட்ஸ் இருக்கு சார்” எனக்கடந்து போகும் மிஷ்கின் என்ற கலைஞனை நாம் சிறுமைப்படுத்த இயலாது.
*
நம் வீட்டுப் பொங்கல் நினைவுகளைக் கிளர்த்தும் (இன்பம் பொங்கும் எங்கள் இந்தியப் பொங்கல்) கட்டுரை, பெரியதாகத் திட்டமிடு சிறிதாகத் தொடங்கு என அக்கறையோடு தொழில் முனைவோரிடம் சொல்லும் கட்டுரை, பாவப்பட்ட பழந்தின்னி வவ்வால், திரைப்பட தோசத்தால் உயிரிழந்த சாரைப் பாம்புகள், இவற்றுக்காகவேனும் சூழலியல் சொற்களில் கவனம் செலுத்தவேண்டியதன் தேவை (வெல்லும் சொல்), தனிப்பட்ட தன் கவிதை ரசனை, அதனூடாக கவிதைகளின் போக்கு, நவீன கவிதையின் தாக்கம் பற்றிப் பேசும் (மறவோம்) கட்டுரை என இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையுமே அதனதன் தளத்தில் முக்கியத்துவம் மிக்கவை. கூடவே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “நகுமோ, லேய் பயலே” என நமக்கு சிரிப்பாணி காட்டும் தருணங்களுக்கும் குறைவில்லை.
*
எவ்வளவு கடினமான விசயமாக இருந்தாலும், அதையும் கொஞ்சம் கூட போரடிக்காமல் மிக இலகுவாக எழுதமுடியும் என்பதற்கான உதாரணம் இந்நூல்.
*
உறைப்புளி - செல்வேந்திரன்-அமேசான் மின்நூல்.

சுட்டி :
https://www.amazon.in/%E0%AE%89%E0%AE%B1%E0%A…/…/ref=sr_1_1…

#வாசிப்பு_2020
#பிடித்த_புத்தகங்கள்

கொடுங்கோளூர் கண்ணகி

“ரொம்ப முக்கியமான புக் கிடைச்சதுடா. இப்ப ப்ரிண்ட்ல இல்ல. ஜெராக்ஸ் எடுத்துட்டு கொடுக்கணும். நீ ப்ரீயா இருந்தா சொல்லு, போலாம்” அழைத்தது நரேன். அவருடன் சென்று அப்புத்தகத்தின் ஒரு நகலை நானும் எடுத்துவந்தேன். கிட்டத்தட்ட 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது. இடைப்பட்ட தருணங்களில் அப்புத்தகத்தைப் பற்றி நான் மறந்தே போனேன். சமீபத்தில் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய புதுக்காப்பியமான கொற்றவையின் முன்னுரையில், கொற்றவையுடன் இணைத்துப் படிக்க வேண்டிய முக்கிய நூல் என அப்புத்தகத்தை குறிப்பிட்டிருந்த பின்னர்தான், அப்புத்தகம் என்னிடம் இருக்கும் நினைவே வந்தது. கொற்றவை படித்து முடித்த பின்னர் அப்புத்தகத்தையும் படித்தேன். ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதை வாசிக்கவேண்டிய ஒரு தருணம் அமையும் என நான் நம்புவதுண்டு. முனைவர். திரு. வி.ஆர்.சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு, ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட “கொடுங்கோளூர் கண்ணகி” எனும் ஆய்வு நூலை அப்படி அமைந்த ஒரு சரியான தருணத்தில்தான் நான் வாசித்திருக்கிறேன். . ஏறத்தாழ 110 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய ஆய்வு நூல், ஆலய வரலாறு, பதிட்டைகள், திருவிழாக்கள், மீனபரணி திருவிழா என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐதீகங்கள், விளக்கக் குறிப்புகள், திருவஞ்சிக் குள கோவில் வரலாறு ஆகிய பகுதிகள் பிற்சேர்க்கைகளாகவும் இணைப்புகளாகவும் தரப்பட்டுள்ளன. பொதுவாக, கேரள வரலாற்றின் தவிர்க்கமுடியாத தமிழ்ப் பின்புலமும், போலவே தமிழ் ஆய்வுகள் கேரளப் பண்பாட்டை கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியமும் முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளன. . கேரள கோவில்களில் பகவதி வழிபாடு, கொடுக்கோளூர் கோவிலின் புராதனத்தன்மை, கொடுங்கோளூர் கோவில் உருவாக்கம் சம்பந்தமான ஐதீகங்கள், யூகங்கள் ஆகியவை மிகச்சுருக்கமான வகையில் ”ஆலய வரலாறு” பகுதியில் கூறப்பட்டுள்ளன. கூடவே, இவ்வாலயத்தின் பழங்கால நாட்டார் வழிபாடு, திராவிடர்கள் மீதான ஆரிய ஆதிக்கம் நிகழந்தபோது, படிப்படியாக ஆரியமயமாக்கப்பட்டிருக்கலாம் என்பதும், அந்த மேலாதிக்கத்தினால், பூஜை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இப்பகுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. . கோவில் அமைப்புகள், பல்வேறு பதிட்டைகள், பலமுறை மாற்றப்பட்ட மூலச்சிலை, அப்படி இருந்தும் தொடர்ந்துவரும் சிலம்பு, மரத்தாலான மூலச்சிலை கெடாமலிருக்கும் பொருட்டு செய்யப்படும் சாந்தாடுதல் ஆகியவை ”பதிட்டைகள்” பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விசயங்கள், கோவிலில் மனோதரி எனும் நாட்டார் தெய்வம் வசூரிமாலாவாக மாறிய நிகழ்வும், கோவில்களில் நரபலி இருந்ததற்கான ஆதாரங்களும், அதன் தற்போதைய குறியீட்டு / மாற்றப்பட்ட வடிவமும் ஆகும். மேலும் இப்பகுதியில் கோவில் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ள விதமும், கோவிலைச் சுற்றிலும் காணப்படும் பல்வேறு பதிட்டைகள் பற்றிய தகவல்களும், கற்பனையில் கோவிலைக் காண வழிவகுக்கின்றன. . திருவிழாக்கள் பகுதியில் நவராத்திரி திருவிழா, தாலப்பொலித் திருவிழா என விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சடங்குகள், ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கும் உரிமைகள், அதனூடாக இன்று தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் சாதியினர் பண்டைய காலத்தில் அரசாண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் (உதாரணம் : புலையர்), கோவில் பூசாரியாய் இருந்தபோதும் (பூசாரிக்கு) தேவி மீது எள்ளல் நிலவியிருக்கக்கூடிய நகைமுரண், தேவதாசி முறை மற்றும் அதன் மாற்றங்கள் என திருவிழாக்களை விவரிப்பதனூடே பல வரலாற்று சம்பவங்களை நாம் அறியவருகிறோம். . நான்காவதும், மிகவும் முக்கியமானதுமானதுமான பகுதி “மீனபரணி திருவிழா”. கொடுங்கோளூர் கண்ணகி கோவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா மீன மாதத்தின் பரணி விழா. இத்திருவிழாவின் கொடியேற்றலில் துவங்கி ஒவ்வொரு சடங்கும் இப்பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளன. சடங்குகளின் நோக்கம், அச்சடங்கைச் செய்ய உரிமையுள்ள சமூகங்கள், கூடவே அவ்வுரிமை கிடைக்கப்பெற்றதன் வரலாற்றுப் பின்புலம் என ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இவ்விவரிப்புகளினூடே, கோவிலுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடைப்பட்ட தொடர்பும் நமக்கு விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் முக்கிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது மாறுபட்ட வடிவங்களாகவோ இச்சடங்குகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது (உதாரணம் : வெளிச்சப்பாடு). போலவே, தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான பண்பாட்டுத் தொடர்பை விளக்கும் பல குறிப்புகள் (இப்பகுதியில் மட்டுமல்ல, நூல் முழுவதிலுமே) காணக்கிடைக்கின்றன. கேரள மண்ணில் நிகழும் “வேலனும் வெறியாட்டும்” நிகழ்வு, கொடுங்கோளூர் கோவிலில் பூசை செய்பவர்கள் “அடிகள்” என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுதல் என பல சான்றுகளை இந்நூல் நமக்குச் சுட்டுகிறது. * பொதுவாகவே ஆய்வுநூல்கள்கள் ஒரு இறுக்கமான எழுத்து நடையைக் கொண்டிருக்கும். அதனாலேயே, ஒரு வாசகனாக நாம் செலவளிக்கும் உழைப்பு இருமடங்காகிவிடும். ஆனால், இந்நூலினை வாசிப்பு சார்ந்து எவ்வித தடையுமின்றி இலகுவாக அணுகமுடிகிறது. ஆசான் திரு.ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு அதற்கொரு முக்கியமான காரணம். அதைப் போலவே, மூல நூலில் இல்லாத / தவற விட்ட மேலதிக விசயங்களை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளாக தந்திருப்பதும் மிகச்சிறப்பு. தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்றின் மீதும் குறிப்பாக சிலப்பதிகாரத்தின் மீது ஆவல் கொண்டவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. * கொடுங்கோளூர் கண்ணகி (முனைவர். வி.ஆர்.சந்திரன் – தமிழில் ஜெயமோகன்). #வாசிப்பு_2020 #பிடித்த_புத்தகங்கள்

நகுமோ லேய் பயலே

2007ல் துவங்கி ஒரு நான்கு வருடங்கள் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களாவது சொந்த ஊருக்கு பஸ் ஏறிடுவேன். பஸ் என்றால் முன்பதிவு செய்து பின் சாயும் வசதியுள்ள பஸ்களல்ல. பயண நேரம் முன்பின் ஆனாலும் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொள்ளும் வசதி படைத்த சாதாரண கட்டண அரசுப்பேருந்துகள். வெள்ளி இரவில் சென்னை To சேலமும், திரும்ப ஞாயிறு இரவில் சேலம் To சென்னையும் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு கண்டக்டர் போலத் திரிந்தேன். அப்படிப்பட்ட ஒரு ஞாயிறு இரவு அது. வழக்கம்போல அடித்துப்பிடித்து ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்தால், இருவர் மட்டுமே அமரும் அந்த இருக்கையில் நமக்கருகே வாய்த்தது நடுத்தரவயதுடைய ஒரு ஜென்டில்மேன். பஸ் கிளம்பும்வரை ஒரு பிரச்சனையுமில்லை. பின்னர் சம்பிரதாயமான சொற்றொடர்களுடன் பேச்சைத் துவங்கினார். அப்போதுதான் ஒரு விசயம் எனக்குப் புரிந்தது. ஜென்டில்மேன் மட்டும் தனியாக வரவில்லை துணைக்கு பக்கத்தில் இருப்பவனும் உளறுமளவுக்கு சரக்கும், அறிந்தவன் ஓடுமளவுக்கு ஆங்கிலமும் கைக்கொண்டிருந்தார். என் பணியைப் பற்றி விசாரிக்கும்போதே புத்தியுள்ளவனாயிருந்தால் தூங்குவதுபோல் நடித்திருக்கவாவது வேண்டும். நமக்கு IT வேலை என்பது பெரும் மதிப்பை ஈட்டித்தந்த காலம் அது. சொன்னேன். அந்த ஜம்பம் அவரிடம் பலிக்கவில்லை. பில் கேட்ஸ்லில் துவங்கி அவருக்குத் தெரிந்த எலி மருந்து வியாபாரி வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிணியுடன் சம்மந்தப்பட்டவர்களின் பெருமையை அடுக்கலானார். அதுவும் பஸ்ஸில் இருப்பவர்கள் என்னை பரிதாபமாகப் பார்க்கும் வண்ணம் கணீர்க்குரலில். கடவுளின் கருணையினாலோ அல்லது கவர்மெண்டின் புண்ணியத்தாலோ அடுத்த அரைமணி நேரங்களில் தூங்கிப்போனார். அன்றைக்கு என்னை கிட்டத்தட்ட அழ வைத்துவிட்ட அச்சம்பவம் பின்னெப்போது நினைவில் வந்தாலும் சிரிக்கவைக்கும். எனக்கிணையாக அல்லது கொஞ்சம் என்னைவிட கொஞ்சம் சுமாரான ஆங்கில அறிஞரை நான் சந்தித்த முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் அது.
.
நீண்ட நாட்கள் கழிந்து அந்த இரவுப் பயணத்தின் நினைவுகள் என்னுள் எழக் காரணம் அதேபோன்ற ஒரு இரவின் பேருந்துப்பயணம் கூடவே குடிமகன்களின் சலம்பல் நினைவுகள். ”நகுமோ, லேய் பயலே” என கேட்டபடி என்னிடம் அச்சுவாரசிய சம்பவத்தை, தன் புத்தகம் வாயிலாக பகிர்ந்து கொண்டிருந்தவர் அண்ணன் செல்வேந்திரன்.
.
பால்யத்தில் கிரிக்கெட் விளையாடாத மக்களின் எண்ணிக்கையை ஒரு ஓவருக்குள் அடக்கிவிடலாம். அவ்விளையாட்டின் சுவாரசியத்துக்கு சற்றும் சளைத்ததல்ல மைதானத்தில் நிகழும் சம்பவங்கள். ஓரளவுக்காவது விளையாடுவான் என்பதைத் தவிர மற்றெல்லா காரணங்களும் துணை நிற்க, அணித்தலைமையேற்று துவக்க வீரராகவும் களம் காணும் நாயகர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள்தானே. யார்க்கருக்கும் தூஸ்ராவுக்கும் புது விளக்கம் சொல்கிறது “தூஸ்ரா” கட்டுரை. இக்கட்டுரையை படிக்கும்போது நினைவில் வந்த இன்னொரு கட்டுரை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது (ஸ்ரீரங்கத்து தேவதைகள் - கிரிக்கெட்டும் பகடியும் கலந்தது அக்கட்டுரை).
.
பேருந்துப் பயணங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல ரயில் பயணங்கள். “ரயில் பயணங்களில்” என் தனித்தொகுப்பே போடுமளவுக்கு, ஆசான் திரு.ஜெயமோகன் துவங்கி திரு. நெல்லை கண்ணன் வரை “இடுக்கண் வருங்கால் நகுக்க” வைத்த அனுபவங்களை படித்திருக்கிறேன். ஆனாலும், இந்த “நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்” காட்டும் குத்தவைச்சாசனங்களும், கரண்டு பில் மிச்சம் பிடிக்கும் கண்ணியவான்களும் நம் சிரித்தே தீரவேண்டிய கதைகள்.
.
பள்ளியில் தமிழ் கற்றுத்தரும் சில ஆசிரியர்களின் தமிழ்ப்புலமை மீதல்ல, தமிழ் ஆர்வம் மீது கூட நாம் சந்தேகம் கொள்ளத்தேவையிருக்காது. ஐயந்திரிபற ஆசிரியர்கள் சரியாக தமிழ் என எழுதுவதற்கே குறைந்தபட்சம் மூன்றுமுறையாவது முயல வேண்டும். அத்தகைய ஒரு அறிவுச்சூழலில் ஆங்கில இதழ்களை சலுகை விலையில் விற்கச் சென்ற எழுத்தாளர் மீது காலம் கொஞ்சம் சலுகை காட்டியிருக்க வேண்டுமல்லவா (அறிவினில் உறைதல்).
.
திரு. நாஞ்சில் நாடனின் “கும்பமுனி” அவதாரம் எனக்கெல்லாம் ஒரு Stress Buster. இரவு 10 மணிக்கு, (வல்விருந்து தொகுப்பை படித்துக்கொண்டு) கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தவன், பஸ் என்பதை மறந்து கெக்கெ பிக்கே என நான் சிரித்து வைக்க பஸ்ஸில் இருந்த பத்து பேரும் தவசிப்பிள்ளையாக மாறி தலையிலடித்துக் கொண்ட சம்பவம் ஒன்று போதும் உதாரணத்துக்கு. அவ்வகையில் பி.மாசானமுத்து கும்பமுனிக்கு ஒன்றுவிட்ட அண்ணனோ தம்பியோ எனச்சொல்லலாம். புத்தகத்தில் மாசானமுத்து வரும் கட்டுரைகளில் (மோடி வரட்டும் சாடி, இலக்கிய மேற்கோள்கள், பொன்மொழிகள், கவிதைகள், ட்வீடுகள்) எல்லாம் “விசில்” சத்தம் காதைப் பிளக்காதது ஒன்றுதான் குறை.
.
இன்கிரிமெண்ட் பெற இனிய வழிகள், இலக்கிய வாசகனின் பாவனைகள், பத்தாயிரம் புத்தகங்கள் விற்பனையாக என கட்டளைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள், கொரோனா கவிதைகளுக்கு சவால் கொடுக்கும் பாடல்கள் (கேட்டிருக்கீர்களா?), “டானென்று” வீட்டுக்குப் போய்விட நேரும் டானின் கவிதை, இலக்கிய வாசகனின் பாவனைகள், மாசனமுத்துவின் ட்வீட்ஸ் பகுதியில் வரும் எஸ்ரா பவுண்ட் பெயர் ஆராய்ச்சி முடிவு, மொழிக்கொடை வரிசை (அய்யோக்கியன், இழகி) என எண்ணிச் சிரிக்கும் தருணங்கள் ஏராளம்.
.
பகடிக் கட்டுரைகள் எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. ஒன்று உண்மையிலேயே நகைக்க வைக்கும் அனுபவங்களை மிகச்சரியாக நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது நாம் எழுதியிருப்பது நகைச்சுவை இரு பத்திகளுக்கு ஒருமுறையாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் சிரத்தையோடு அனைத்தையும் வாசித்துமுடித்த பின்னர் ஆமா எங்க அந்த பகடிக்கட்டுரை என ஒரு அப்பாவி வாசகன் கேட்டுவிட நேரிடும். ஆனால், இத்தடையை தனது “தூஸ்ரா” கலந்த “யார்க்கரால்” அற்புதமாக தகர்த்திருக்கிறார் திரு. செல்வேந்திரன்.

நகுமோ, லேய் பயலே - மின்னூல் வாங்க சுட்டி :
https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%95%E0%A…/…/ref=sr_1_1…

#வாசிப்பு_2020
#பிடித்த_புத்தகங்கள்

வாசிப்பது எப்படி

”வாசிப்பதனால் ஆய பயனென்கொல் வரவன்
போறவனெல்லாம் கழுவியூற்றா விடில்”

என ஒரு புதுக்குறளே எழுதிவிடலாம். அந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை ஏதோ வேற்றுகிரகவாசி போல ஒதுக்குவது அல்லது படிச்சவரைக்கும் போதும் ரகத்தில் அறிவுரை மழை பொழிவது என சங்கடத்துக்குள்ளாக்குவதில் நமக்கு நிகர் நாமே. உண்மையில் வாசிப்பு ஒருவனது வாழ்க்கையில் நிகழ்த்தும் அற்புதங்களை இந்தச் சமூகம் வெறுக்கிறது. வெறுமனே வாட்ஸப் பார்வேர்டுகளை நம்பிக்கொண்டு, கூடவே அனைத்தையும் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்துக்கேற்ப பேசிக்கொண்டு வாழ்வதில் இருக்கும் சுகம் வாசிப்பவனால் தடைபடக்கூடும் என்பதும் அந்த வெறுப்புக்கு ஒரு முக்கியமான காரணம். ஏன் வாசிப்பு ஒரு சமூகத்துக்கு தேவைப்படுகிறது என்பதை மிக எளிமையாக அதே சமயம் அழுத்தமாக பதிவுசெய்யும் கட்டுரைகளுடன் துவங்குகிறது "எப்படி வாசிப்பது ?" எனும் நூல்.

வாசிப்பு என்பதை இலக்கிய வாசிப்பு என சுருக்கிக்கொள்ளாமல் பொதுவாகவே வாசிப்பதனால் வரும் நன்மைகளின் பட்டியல் மிகப்பெரியது. அன்றாடம், குறைந்தபட்சம் ஒரு நாளிதழாவது வாசிக்கும் பழக்கம் உள்ளவன் பதின்ம வயதில் துவங்கி பல் போகும் வயதுவரை செய்யும் செயல்களிலும் செல்லும் இடத்திலும் தனித்துவம் பெறுவான் என்னும் உண்மை மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

வாசிக்க விரும்பும் ஒருவரின் ஆர்வத்தை குறைக்கக்கூடிய காரணிகளின் பட்டியலும் நீண்டதுதான். வாசிக்கும் ஆர்வத்தை நீர்த்துப் போகச் செய்யும் முக்கிய விசயங்களான சுவாரசியமில்லா எழுத்து நடையையும், அதே சமயம் வெகு சுவாரசியமாக எழுதப்படும் மேம்போக்கான கட்டுரைகளின் போதாமையையும், தொடர் வாசிப்பைத் தடை செய்யும்  டிவைஸ்களையும் நாம் கையாள வேண்டிய வித்தையை இந்நூல் நமக்குக் கற்றுத்தருகிறது. தொடர்ச்சியாக வாசித்தல், வாசிப்புக்கான மனநிலை, வாசிக்கும் நண்பர்கள், நமக்கான ஒரு வாசிப்புப் பழக்கம் / அட்டவணையின் தேவை, வாசிக்கும் போது குறிப்புகளின் தேவை, அதே போல் வாசித்த பின்னர் அப்புத்தகம் பற்றிய ஒரு சின்ன பகிர்தல் என ஒரு எளிய வாசகன் தன்னுடைய வாசிப்பை மேபடுத்திக்கொள்ளும் வழிமுறைகளை இப்புத்தகம் சுருக்கமாக அதேசமயம் தெளிவாகப் பேசுகிறது.

பொதுவாக வாசிப்பின் வரையறைக்குள் அதிகம் பேசப்படாதவை நாளிதழ்கள். ஒரு நல்ல நாளிதழுக்கான அடையாளங்களையும், அன்றாடம் நாளிதழ் வாசிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், நாளிதழ் வாசிப்புக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்வதற்கான எளிய வழிமுறைகளையும் இந்நூல் கவனப்படுத்துகிறது. புத்தகங்களை / இலக்கிய ஆக்கங்களைப் படிக்கும்போது அதன் வகைமை தெரிந்துகொண்டு படிப்பது அப்புத்தகத்திலிருந்து நாம் எதைக் கண்டடையலாம் எனும் தெளிவைத் தரும். கூடவே மதிப்பற்ற நூல்களை படித்து கால விரயம் செய்யாமல் வாசிக்கும் நண்பர்கள், விமர்சகர்கள் /ஆளுமைகளின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் தரலாம். நான் நாஞ்சில் நாடன் எனும் பேராளுமையை கண்டறிந்தது, அவரது ”இடலாக்குடி ராசா” எனும் கதையைப் பற்றிய திரு.பாலா அவர்களின் பதிவின் மூலமே (”இவன்தான் பாலா” -விகடன் பிரசுரம்).  எல்லாவற்றையும் கடந்து வாசிப்பு வெறுமனே ஒரு பொழுதுபோக்கோ அல்லது தூக்கம் தருவிக்கும் மருந்தோ இல்லை என்பதை நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு வாசகனுக்கு, இப்போது கொட்டிக்கிடக்கும் வாசிப்பு சார்ந்த வசதிகள் பெரும் வரம். நூலகங்கள், எழுத்தாளர்களின் தளங்கள், சிறுகதைகள் என பலவும் இணையத்தில் இலவசமாகவே கொட்டிக்கிடக்கும் காலம் இது. வாசிக்கும் ஆசைக்கு பணவசதி தடைபோடுவதை ஓரவுளுக்கு இல்லாமலே ஆக்கிவிடலாம். இந்த அனுகூலங்களை இந்நூல் பட்டியலிடுகிறது. ஏற்கனவே வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள், தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு சின்ன உரையாடலின் மூலமே கூட சிலரையாவது வாசிப்பின் பக்கம் கரையேற்ற இயலும்.

இந்தப் புத்தகம் மிக அழுத்தமான விசயங்களைப் பற்றி பேசினாலும் எழுத்து நடை மிகவும் அற்புதம். வாசிப்பின் பக்கம் மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான காரணி சுவாரசியம். அதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது பேசுபொருள் கூடவே பேசுபொருளின் மீதான எழுத்தாளரின் பாண்டித்யம். இவை அனைத்தையுமே இப்புத்தகம் உள்ளடக்கியது என தயங்காமல் சொல்லுவேன்.
*
வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - அமேஸான் கிண்டில் பதிப்பு.

சுட்டி -- https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-vasippathu-eppadi-Tamil-ebook/dp/B086HPBW13/ref=sr_1_1?crid=1PVYGT6XILHRB&dchild=1&keywords=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&qid=1586616023&sprefix=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%2Caps%2C380&sr=8-1

சுதந்திரத்தின் நிறம்


சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக அவிநாசி கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் நின்று கொண்டிருந்தேன். பில்லிங் கவுண்டருக்கு பக்கமிருந்த ஒரு புத்தக அலமாரியில்தான் முதன்முதல் அந்தப்புத்தகத்தைப் பார்த்தேன். அட்டை கொஞ்சம் சேதமடைந்திருந்தாலும் பக்கங்கள் பழுதின்றி இருந்தன. அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல, அப்புத்தகத்தில் பேசப்பட்டிருந்தவர்களின் பெயர்களையும் நான் அப்போதுதான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். ஓரிரு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த நண்பன், படித்துவிட்டு தருகிறேன் என்று அப்புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றவன் இன்னும் தந்துகொண்டே இருப்பதால், அப்புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லை. அதன்பின்னர், அப்புத்தகத்தின் நாயகர்களைப் பற்றி சில செய்திகளிலும் கட்டுரைகளிலும் (குறிப்பாக ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களின் தளம் வாயிலாக) அடிக்கடி வாசிக்கலானேன். அந்தப் புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருந்த லாரா கோப்பாவால் எழுதப்பட்ட, “கத்தியின்றி ரத்தமின்றி”.
*
அந்தப் புத்தகத்தை படிக்காத குறைசுதந்திரத்தின் நிறம்புத்தகத்தைப் படித்ததன் வாயிலாக தீர்ந்தது. இந்தப் புத்தகமேகூட கத்தியின்றி ரத்தமின்றி புத்தகத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன். இப்புத்தகம் காந்தியர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சார்ந்த லாரா கோப்பா அவர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் இருவரையும் பேட்டி கண்டு, அதை புத்தகமாக இத்தாலி மொழியில் வெளியிட அப்புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் “The Color of freedom” எனும் பெயரில் வெளியானது. அதன் தமிழாக்கமேசுதந்திரத்தின் நிறம்”.  
.
காந்தியவாதிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு காலகட்டத்தின் வரலாற்றையே சொல்லும். குறிப்பாக காந்திய வழிமுறைகளை அதன் சாத்தியக்கூறுகளை, சாதனைகள் மற்றும் எல்லைகளை. இந்தப் புத்தகத்திலும் அத்தகைய வரலாறு உண்டு. என்றாலும் இதில் நான் அறிந்தது இதுவரை வெறுமனே ஒரு பெயராக மட்டுமே தெரிந்துவைத்திருந்தபூதான இயக்கம்பற்றி. கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவருமே இந்திய அளவிலான பூதான இயக்கத்தின் களப்பணியாளர்கள் என்பதும் தமிழக அளவில் பூதான இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் என்பதும் அவ்வியக்கத்தை நாம் தெளிவாக அறிந்துகொள்ள உதவுகின்றன. உண்மையில் பூதான இயக்கத்தின் வெற்றி என்பது பெரும் நிலக்கிழார்களாக இருந்தவர்களின் மனசாட்சியுடன் நேரடியாக அன்பின் மொழியில் உரையாடியதுதான். அப்பெரும்பணியை வினோபா பாவே போன்ற ஆன்மபலம் மிக்க தலைவர் எப்படி செய்தார் என்பதை நாம் அறிந்துகொள்ளும் அதே வேளையில், நடைமுறை சார்ந்த திட்டமிடல்களில் உள்ள போதாமையே அவ்வியக்கத்தின் குறைபாடாகவும் மாறிவிடும் தகவலும் இப்புத்தகத்தில் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடைமுறை சார்ந்த அணுகுமுறையையே காந்தி கைக்கொண்டிருப்பார் என்பதும் தெரியவருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தானாக முன்வந்து நிலங்களை தானம் தந்த சம்பவங்களை கண்கலங்காமல் என்னால் கடக்க முடியவில்லை. குறிப்பாக ராமகிருஷ்ண ரெட்டி எனும் மாமனிதனை. உண்மையான ஒரு காந்தியவாதியால் மட்டுமே செய்யமுடிந்த செயல்கள் அவருடையது.
.
நம் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பெயர் கீழ்வெண்மணி. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடத்துவங்கி, 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதத்தின் மீதான தீராக்கறை. சில ஆண்டுகள் கழித்து அதே கிராமத்தில் 74 குடும்பங்களுக்கு சொந்த நிலம் பெற்றுத் தந்தது காந்தியத்தின் மூலம் சாத்தியமானதையும், வைக்கம் சத்யாகிரகம் போலவே நிகழ்ந்த ”வலிவலம் சத்யாகிரகத்தை”யும் இப்புத்தகத்தில்தான் நான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன்.
.
இப்புத்தகம் கவனப்படுத்தும் இன்னொரு முக்கிய பிரச்சனை சூழியல் சார்ந்தது. வளமிக்க நிலத்தை அழித்து உருவாக்கப்படும் இறால் பண்ணைகளால் விளையும் சூழியல் கேடுகள், அதனால் விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அழிதல், ஒருமுறை இறால் பண்ணையாக்கப்பட்ட நிலம் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பமுடியாத சிக்கல், கடல் வாழ் உயிரினங்கள் சந்திக்கும் ஆபத்து என இத்தனை பாதகங்கள் இருந்தும் அதிகாரத்தின் துணையோடு நடந்துவந்த இறால் பண்ணைகளை, பன்னாட்டு நிறுவனங்களை, ஒரு சாமானிய காந்தியவாதி எதிர்த்து நின்ற நம் சமகால வரலாறும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
*
திருமதி.கிருஷ்ணம்மாள் மற்றும் திரு.ஜெகந்நாதன் இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நம்முடைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளும், அதன் தீர்வுகளுமே பெருமளவில் பதிவாகியுள்ளது. படிக்க மிக சுவாரசியமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கையில், ஒரு உண்மை காந்தியவாதிக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருப்பதற்கான சாத்தியமே இல்லை எனும் என் எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது.
*
ஒடுக்கப்படும் மக்களின் பக்கமே எப்போதும் நின்ற, வெறுப்புக்கும் பதிலாக அன்பையே கைக்கொண்ட, வெறும் பெயராகக் கூட நாம் அறிந்துகொள்ளாத ஆயிரமாயிரம் காந்தியவாதிகளையும், அத்தகைய பெருமனிதர்கள் நெஞ்சில் காந்தியம் என்னும் விளக்கை ஏற்றிச்சென்ற அந்த மாமனிதனையும் மீண்டும் மீண்டும் நன்றியுடன் நினைக்க வைத்தது இப்புத்தகம்.
**
சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா
தமிழில் : B.R.மகாதேவன்
தன்னறம் பதிப்பகம்.