title


M.R.ராதாயணம்

பொதுவாகவே தமிழ் சினிமா கதாநாயகர்களின் ஆதிக்கம் நிரம்பியது. ஒரு படத்தின் வெற்றி / தோல்வி பெருமளவில் பாதிப்பது அப்படத்தின் நாயகனைத்தான். கதாநாயகியின் எல்லை பெரும்பாலும் சில காதல் வசனங்களும், பாடல்களும் மட்டுமே. வில்லன்களின் நிலையும் அப்படியே. விவகாரமான வசனங்கள், வெடிச்சிரிப்பு, முடிவில் நாயகன் கையால் மரணம் அல்லது சிறைவாசம். தமிழ் சினிமாவின் இப்போக்கு நாயகனைத் தெய்வமாக்கியது. அனைத்து கைதட்டல்களும் நாயகனைச் சென்றடைய, வில்லன்களுக்கோ திட்டுக்கள் மட்டுமே பாராட்டுக்களாகின. நானறிந்தவரை இந்த போக்கினை மாற்றியமைத்து, கைதட்டல் வாங்கிய, ரசிக்கப்பட்ட, கைதட்டல் வாங்கிய முதல் (திரை)வில்லன் திரு.M.R.ராதா அவர்கள்.

”M.R.ராதாயணம்” எனும் இந்த வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுவது நாம் பெரும்பாலும் அறிந்திராத ராதாவின் அசல் முகம்



தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களால் கவரப்பட்டு, வலிமையான திரைப்பட ஊடகத்தை புரட்சிக் கருத்துக்கள் பரப்பும் தளமாக மாற்றியதில் திரு.N.S.கிருஷ்ணன் மற்றும் திரு.M.R.ராதா அவர்களின் பங்களிப்பு அபாரமானது. நாடகம் மூலமாக தன் கலைவாழ்வைத்துவக்கிய திரு.M.R.ராதா அவர்கள் தான் இறப்பதற்கு முன்னால் வரை நாடகங்கள் நடத்திவந்துள்ளார். மற்றவர் படும் துயரங்களுக்கும், தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கும் தன்னால் இயன்றதை செய்தும், இயலாத நிலையில் நாடகம் நடத்தி அந்த வருமானத்தைத் தந்தும் வேதனையைப் போக்கிய ஒரு நிஜ நாயகன் திரு.M.R.ராதா அவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தன் மனதுக்கு சரி என்று பட்டதை எவ்வித சமரசமும் இன்றி செய்துவந்திருக்கின்றார். அது எம்.ஜி.ஆர் ஆனாலும் சரி தந்தை பெரியாரானாலும் சரி.

தன் வாழ்நாளெல்லாம் சிறந்த வில்லனாக அறியப்பட்ட ஒரு நிஜ நாயகனின் வாழ்க்கை வரலாறு ”M.R.ராதாயணம்”. திரு.முகில் அவர்களால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்.

நூல் : M.R.ராதாயணம் (வாழ்க்கை வரலாறு)
எழுத்தாளர் : முகில்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 196
விலை : 100 ரூபாய்