title


சாதிகள் இல்லையடி



நாம் கற்றுத்தேரும் மதிப்பெண்களை அடிப்படியாகக் கொண்ட கல்வியால் நல்ல Xerox machineகளை அல்லது நடமாடும் Storage deviceகளை உருவாக்க முடியுமேயன்றி, ஒருபோதும் அறிவுசார் சமூகத்தை உண்டாக்கவே முடியாது என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

.

கல்லூரிக்காலங்களில் விடுதியில் கொஞ்சம் நெருங்கிப்பழகிய நண்பர்களுக்கிடையே பொதுப்பிரச்சனையை முன்னிறுத்தி வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த தனிப்பட்ட உரையாடல்களின் உணர்ச்சிமேலிடும் தருணங்களில், சிலர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் பிற ஜாதி / மதத்தினர் மீதான வன்மம் வெளிப்பட்டிருக்கிறது. அத்தருணங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் கல்லூரி மறைந்து, அணிந்திருக்கும் பகட்டான ஆடைகள் மறைந்து, அவர்களின் சுயம் தெரியவந்திருக்கிறது. மெத்தப்படித்திருந்தாலும், நுனி நாக்கு ஆங்கிலம் வசப்பட்டாலும், ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்கினாலும் கிட்டத்தட்ட அதே மனநிலையை, இப்போது IT துறையிலும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன்.
.
“படிக்காம உங்கப்பன் ஆத்தாதான் வீணாப்போய்ட்டாங்க நீயாவது படிச்சு முன்னேறு”


“நல்ல படிங்கடா அப்பத்தான் வாழ்க்கைல முன்னேறலாம்”


போன்ற அறிவுரைகளை நம் பள்ளிக்காலங்களிலும் கல்லூரிக்காலங்களிலும் நிச்சயமாய் கடந்து வந்திருப்போம். அந்த சொற்றொடர்களில் உள்ள முன்னேற்றம் எனும் வார்த்தை வெறுமனே சம்பளத்தையோ அல்லது வயிறு சார்ந்த வாழ்க்கையையோ மட்டும் குறிப்பிடுபவை அல்ல. அவை வாழ்க்கை முறையையும் அறிதலையும் சேர்த்ததுதான்.

.

மனிதர்களை அவர்கள் கருத்தை, உணர்வை சமமாய் பார்க்கும் எளிய உண்மையை கற்றுக்கொடுக்கும் அறிவு, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து பெரும்புகழ் கொண்ட IIT வரை இல்லையென்பது ஆகப்பெரிய சோகம்….


ஜாதி / மதம் / இனம் மறப்போம்; மனிதம் நினைப்போம்..


நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்…- பாரதி.

லீவு மாமே...



பொதுவா நமக்கு அர நாளு லீவு வுட்டா, அதுக்கு ஆயிரம் வேல லைன் கட்டி நிக்கும். இது தீவாளி, பொங்கலுக்கும் பொருந்தும், சாதாரண சனி, ஞாயிறுக்கும் பொருந்தும். சமயத்துல திங்கள் to வெள்ளி ஆபிசுல செய்யுற வேலைய விட விடுமுறை நாட்களின் வேலை அதிகமாயிடும்.

.

ஆனா, இந்த Onsite லீவு இருக்கே, என்னதான் அவிங்க லீவுன்னாலும் கொண்டாட்டம் நம்மளுக்கும் சேத்தித்தான். பொதுவா மாலை 6-7 மணியளவில் இருக்கும் onsite calls ம், இருக்கோ இல்லையோ அனுப்பவேண்டிய update mailsம் தேவையில்லைங்கறதே நெம்மப் பெரிய நிம்மதிங்க. எப்பயும் போல அரக்கப்பரக்க ஆபீசுக்கு கிளம்புறமாதிரி ஊட்ல சீன் போட்டுட்டு (மனசுக்குள்ள ஒரு லல்லல்லா பாட்டு ஓடிட்டு இருக்கும்கறது வேற விசயம்) ஆபீசுக்கு வந்துட்டா போதும். நம்மள மாதிரியே அம்புட்டு பயலுகளும் ஒரு தினுசா திரியறத பாக்குறதே ஒரு கொடுப்பினை. எத்தனை மணிக்கு கடய தொறக்கறோம்கறதும், ஷட்டர் எத்தனை மணிக்கு க்ளோஸ் ஆகுதுங்கறதும் தனி கணக்குதான்.
.
இன்னிக்கு அப்படியொரு நன்னாள்ங்கறதால 7 மணிக்கே ஆபீச விட்டு கெளம்பியாச்சு (எங்கணக்குக்கு இது அரை நாள்தான் பாத்துக்கங்க). கீரணத்தம் கிராமம் வழி கோவில்பாளையம் அடைந்து, அங்கிருந்து கருவலூருக்கு கிராமங்கள் வழி செல்லும் மனம் கவர்ந்த பாதையில், மெல்லிய இசையுடன் ஒரு அழகான பைக் டிரைவ். கூடடையும்போது மணி 8. குழந்தைகளுடன் ஒரு சின்ன விளையாட்டு கூடவே இரவுணவு. 9 மணியளவில் திரைப்படத்துக்கு செல்லலாம் என திடீரென முடிவெடுத்து, அப்பா, அம்மா, அருணா, கார்த்திக், கிருத்திகா என குடும்பமே சென்றது “தொண்டன்” படத்துக்கு.
.
படம் முடிந்து வரும்போது அம்மாவும் கிருத்திகாவும் சொன்ன review தான் Top. எழுத்துப்போடும் போதே இருவரும் தூங்கி விட்டார்கள். அவ்வப்போது முழிப்புவந்து படம் பார்த்த அம்மா சொன்னது “சரியான சண்டைப்படம்”; எதற்கும் அசையாமல் கருமமே கண்ணாய் இறுதிவரை தூங்கிய கிருத்திகாவின் கருத்து “சூப்பர் படம்”.
படம் கொஞ்சம் சுமார்தான்; ஆனால் இன்றைய நாள் வெகு சூப்பர் 
.
பேசாம நம்ம லீவ பூராம் பத்திவுட்டுட்டு, அதுக்கும் சேத்து ஆன்சைட் லீவா வச்சுக்கலாம் :)

துளிர்



எனக்கு “யாக்கை திரி, காதல் சுடர்” ரீதியிலான அதிரடிப்பாடல்கள் எவ்வளவு போதை தருமோ, அதற்கிணையாக… இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக “மலர்கள் கேட்டேன்; வனமே தந்தனை” என மனம் வருடும் பாடல்கள் மிகவும் நிறைவைத் தரும்.

*

அக்கா வீட்டில் நடைபெறும் ஒரு விசேசத்துக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க இன்று பொள்ளாச்சி சென்றிருந்தோம். காலை 10 மணியளவில் பூண்டியில் இருந்து கிளம்பி, காரணம்பேட்டை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியிலும் அதன் அருகிலும் பல உறவினர் வீடுகளை அழைத்து முடிக்கையில் மணி மாலை 5 இருக்கும். அடுத்து என் பெரியப்பா ஒருவரை அழைப்பதற்காக உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள ”கோமங்கலம் புதூர்”க்கு செல்வதாக திட்டம். பொள்ளாச்சி சுங்கத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு 15 கி.மீ சென்றபின் “கோமங்கலம்புதூர்” என வழிகாட்டப்பட்டிருந்த இடத்தில் இடப்புறமாக திரும்பி செல்லத்துவங்கினோம். கிராமங்களுக்கிடையே செல்லும் பாதை அது. ஒரு பேருந்து மட்டுமே செல்லுமளவு அகலம் கொண்ட அப்பாதை நீண்டது சற்றேறக்குறைய 8 கி.மீ.கள்.
.
சமீப காலங்களில் செல்லும் பயணங்களில் எல்லாம் நிறைந்திருக்கும் ஒரு பொதுவான அம்சம், நிலத்தில்.. செல்லும் இடங்களில் கண்ணுறும் வெம்மையும் வெறுமையும். அதன் பாதிப்பு மனதில் ஏற்படுத்தும் சலனங்களை, சமன்படுத்தும் விதமாக மழையோ, மழலையோ, நண்பர்களோ குறைந்தபட்சம் பாடல்களோ அந்தந்தப் பயணங்களில் அமைந்துவிடுவது என் நல்லூழ். இந்தப்பயணம் அப்படியல்ல, அவற்றைகாட்டிலும் மேம்பட்டது. மேற்சொன்ன 8 கி.மீ.களும் நாங்கள் மட்டும் பயணப்படவில்லை. எங்களுடன் பயணப்பட்டது பசுமை. சாலையின் இருமருங்கிலும் பெரும்பாலும் இருந்தவை தென்னைமரங்கள். தென்னைமரங்கள் குறையும் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவை கொய்யா மரங்கள், எள்ளுச்செடி மற்றும் தானியப் பயிர்கள்.
.
மொத்தத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருந்தது பசுமை. கடந்த ஓரிரு வாரங்களாக பொள்ளாச்சியின் சுற்றுப்புறங்களில் (மாலையில்) பெய்யும் நல்ல மழையின் தானம் இந்தப்பசுமை.
அகலம் குறைவான சாலையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மிக மெதுவாகத்தான் அந்த 8 கி.மீ.களும் கார் ஓட்டினேன். வேகமாக கார் ஓட்டும்போது கிடைப்பது ஒரு போதை; ஆனால் இன்று அமைந்தது போன்ற நிறைவான பாதைகளில் / தருணங்களில் கார் தானே ஓடுவதுபோல் மெதுவாக ஓட, மனம் லயிக்கும் பயணம் தருவது நிறைவு.
*
வறட்சி பற்றிய செய்திகளாலும், வெடித்துக்கிடக்கும் நீர் நிலைகளாலும் நிரம்பிய சமீப நாட்களின் சோகம் கொஞ்சம் மாற, இன்றைய பயணம் நம்பிக்கை விதைத்தது.


”நம்பிக்கையே நல்லது; எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது”

(“அகரம் இப்போ சிகரம் ஆச்சு” பாடல் வரிகள் – வைரமுத்து – படம்: சிகரம்)


:)

Walking with ...



ஐந்து வருட கோவை வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சிகளுல் ஒன்று பேருந்துப்பயணம். ஒரு நாளில், ஏறத்தாழ இரண்டரை மணி நேரங்களை பயணத்தில் செலவளிப்பது எனக்கு ஒருவகையில் இலகுவானது. பெரும்பாலும் மனதுக்குகந்த செயல்களை பயணத்தில் செய்வது வழக்கம். புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, படங்கள் என இப்படி ஏதாவது ஒன்று; மனம் இவை எதிலும் லயிக்காத நாட்களும் உண்டு. பயணம் என்பதே மனதுக்குகந்த விசயமென்பதால், அந்நாட்களும் வேடிக்கை பார்ப்பதில் நிறையும். இப்போது மட்டுமல்ல, எப்பவுமே பயணம் எனக்கு மிகப்பிடித்த விசயம், அதிலும் வெறுமனே பயணியாக நம்மை ஓட்டுனர் கையில் ஒப்புக்கொடுக்கும் பேருந்துப்பயணங்கள் தனி சுகம்; அது பெங்களூர் நாட்களோ, சென்னை நாட்களோ பெரும்பாலும் மாதம் நான்கு முறை (அதை எல்லா சனி ஞாயிறுன்னும் சொல்லலாம்) திருப்பூருக்கு வந்த சாதாரண பேருந்து பயணங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் படிப்பு, பாட்டு, படம் என கழிவதால், நள்ளிரவுகளிலோ அல்லது அதிகாலையிலேயோதான் பயணத்தில் உறக்கம் வரும். அந்த உறக்கம் தரும் போதை ஒரு அற்புதம். அப்படி ஒரு அற்புத தூக்க நாள் கொஞ்சம் துக்க நாளாக மாறின சம்பவம் ஒண்றுண்டு.
.
அந்த சம்பவத்தின் வயது கிட்டத்தட்ட 7 வருடங்கள். சென்னையில் இருந்து சேலம் வந்தடையும் போது மணி நள்ளிரவு 1 இருக்கும். நிறைய கோவை பேருந்துகள் இருந்தன; அதிகம் கூட்டமில்லாத ஒரு பேருந்தில் பயணப்பட்டேன் அவிநாசிக்கு. அதிகாலை 4 மணியளவி்ல் அற்புத தூக்கத்தை கலைத்து என்னை எழுப்பினார் நடத்துநர், “தம்பி, அவிநாசி வந்திருச்சு, எறங்கு”; அரை விழி திறந்து பார்த்தவன், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரிடம் “ஒரு கோயம்புத்தூர்” என டிக்கட் வாங்கி காந்திபுரம் சென்று திரும்பிவந்த நாளின் தூக்கம் என் நினைவில் நிலைத்த ஒன்று.
*
அதன் பின் வேறெந்த பயணத்திலும் அதற்கிணையான அனுபவம் கிடைத்ததில்லை. கோவையிலிருந்து பூண்டி வரும் நாட்களிலும் சில சமயம் கரும்மத்தம்பட்டியோ, தெக்கலூரோ தாண்டி உறங்குவதுண்டு; ஆனால் அந்த உறக்கம் சரியாக அவினாசி வந்ததும் கலைந்துவிடும்; நானும் என்னென்னவோ யோசித்தும் புரிபடாத ரகசியம் அது. ஆனா அந்த பெருமையும் முந்தா நேத்தோட போச்சு(புதன் இரவு);


அது ஒரு தூக்கம் கலந்த பயணம்; தெக்கலூரில் கண் அசந்தவன் வழக்கம்போல அவினாசியில் முழித்தேன்; அடுத்த நிறுத்தம் பூண்டி அதற்கின்னும் 5-10 நிமிடங்கள் ஆகுமே அதுக்குள்ள ஒரு சின்னதூக்கம் என்ற அடிப்படையில் தூங்கினவன் முழித்தது பூண்டிக்கு அடுத்த நிறுத்தமான அம்மாபாளையத்தில். ஏறத்தாழ 1.5கி.மீ. தாண்டியாகிவிட்டது. தூக்கத்தில் நான் இறங்கிய ஸ்டைல் புல் போதையில் இருப்பவன் அட்டேன்சனின் நிற்பதுபோல தடுமாற்றமானது

*

நிக்கறதுக்கே துப்பில்லாத லட்சணத்தில் எப்புடிடா 1.5 கி.மீ நடக்கறதுன்னு மனசுக்குள்ள ஒரே ரோசன. ஆனா பாருங்க.. ”கடவுள் ஒரு கதவை அடைச்சா மறுகதவை தொறப்பாருன்னு” சொல்லுவாங்க; அது மத்தவிங்களுக்கு; நமக்கு எப்பவுமே ஜன்னலை அடைச்சுட்டு கதவு, ஷட்டர் எல்லாத்தையும் திறந்து வச்சுட்டு ”நீ வாழுடா மகனே” அப்படிம்பாரு. நிக்கக்கூட முடியாம தூக்கத்தில (Note this point தூக்கத்துல) தள்ளாடிட்டு இருந்தவன் வெகு மகிழ்ச்சியாய் 1.5 கி.மீ நடந்தேன். அதுக்கு காரணம் “மழை”. பெருமழையல்ல; கொஞ்சமே கொஞ்சம் பெரிதாய் விழுந்த செல்லத்தூரல்; முதல் சில நொடிகளிலேயே தூக்கம் தெளிந்துவிட, அவசரமேயில்லாமல் மழையில் நனைந்தபடி வீடடைந்தேன்.

*

மாற்றுத்துணி உடுத்தி அசதியில் படுக்கையில் சாய, அப்போதும் மண்ணுடன் முணுமுணுத்துக்கொண்டிருந்தது மழை.

:)

மழை.. மாமழை

சென்னையின் வெய்யில் காலங்களை விட மனதில் நிறைந்திருப்பவை அதன் மழை நாட்கள். அதுவும் கொஞ்சிப் பேசுவதைப் போன்ற மென்மழையில் நனைந்த தருணங்களை விடவும், அடிப்பதைப் போல கொட்டிய மழையில் நனைந்த நாட்கள்தான் அதிகம். மழையில் நனைவது என்னதான் சுகம் என்றாலும், அலுவலகம் செல்லும் மழை நாட்களில், கிட்டத்தட்ட ஒரு விண்வெளி வீரனைப் போல என் ஆயத்தம் இருக்கும். பெருங்குடி வீட்டிலிருந்து கிளம்பும்போது ஹெல்மெட், ரெயின்கோட், ஷீ என வெகுகவனமாக மழையில் நனைவதைத் தவிர்த்ததற்க்குப் பரிகாரம் போலத்தான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவேன். பெரும்பாலும் இரவு கிளம்பும்போது மழை சற்று தூரலாகத்தான் இருக்கும்; அதிவிரையில் அது கன மழையாய் மாறும் என்ற நிலை தெரிந்த போதும் ரெயின்கோட்டை கவனமாகத் தவிர்த்த பயணங்கள் அவை. வெய்யிலானாலும் மழையானாலும் சென்னை extremeதான். ஒரளவு தரமானவைதான் OMR சாலைகள், ஆனால் அந்நாட்களில், நான் இரு சக்கர வாகனம் ஓட்டியது தார் சாலையில் அல்ல; நீர் சாலையில். பழக்கப்பட்ட பாதை என்பதால் மேடு பள்ளங்களை மனதறியும்; கிட்டத்தட்ட தானே வீடடையும் மாட்டு வண்டியைபோல, Yamaha gladiator ஓடிக்கொண்டிருக்கும். மனதோ மழையில் லயித்திருக்கும். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த கதை.
***
கோவை வந்த இந்த ஐந்து வருடங்களில் பெருமழையில் நான் நனைந்த நாட்கள் கிட்டத்தட்ட ஏதுமில்லை. பொதுவாக, சிலசமயம் இரவில் அலுவலகம் விட்டு கிளம்பும்போது மென் தூரல் இருக்கும்; ஆனால் சரவணம்பட்டியில் பார்த்தால் மழை பெய்த சுவடே இருக்காது. கடந்த திங்கள் இரவு அந்த நம்பிக்கையில்தான், கொஞ்சம் வலுத்த மழையில் அலுவலகத்திலிருந்து வண்டியை கிளப்பினேன். சரவணம்பட்டி காவல் நிலையம் கடக்கும் வரை எந்த வேறுபாடும் காட்டாத மழை, அதன் பின்னர் ஆடியது ஒரு 20- 20 போட்டியின் இறுதி ஓவர்கள். பெருந்துளிகள் பாதையை மறைக்கலாயின; அணிந்திருந்த ஆடைகளைத் தாண்டி ஈரம் மெய் தீண்டலானது. ஆரம்பத்தில் இருந்தது மெல்லிய சில்லிப்பின் அசெளகரியம்; முழுவதும் நனைந்த பின்னர் அதுவே அழகானது. சித்ரா பேருந்து நிலையத்தில் இருந்த பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும் போது கிட்டத்தட்ட குளித்திரு்ந்தேன். பேருந்தில் பூண்டி வந்து சேரும்வரை, ஜன்னலில் தெரிப்புகளாய், மண் வாசமாய், காற்றில் ஈரமாய் உடன் வந்தது மழை.
*
மண் குளிர்ந்தது கூடவே மனமும்...

கூழாங்கல் நினைவுகள்

மிக நீண்ட நாட்கள் கழித்து
சாதாரணமாகத் துவங்கும்
ஒரு உரையாடலின் வழி
உயித்தெழுகிறது பள்ளிக்காலம்

*
சிரிப்பால் நிரம்பிய வகுப்பறைகள்
செல்லச் சண்டைகள் போட்ட மரத்தடிகள்
வேடிக்கை பார்த்திருந்த ஆய்வகங்கள்
வெறுமனே பேசித்தீர்த்த தனிப்பயிற்சி
மாலை நேரத்தின் பெருநடைகள்
மறக்கமுடியா சில நபர்கள்
விசனத்தில் கழித்த தேர்வறைகள்
விரும்பிச் சுமந்த சில வலிகள்
மானம் பறக்கும் மதிப்பெண்கள்
என
மனதை நிறைத்த நினைவலைகள்
*
முன்பொரு நாள் ஆற்றின் ஆழத்தில்
தனித்து விழுந்தது
ஒரு கனத்த கூழாங்கல்...


பின்பொரு தருணம் நினைவுகளின்
தீண்டலால்
அது தன் எடையிழந்து மேலெழுந்தது…
.
பள்ளியின் நினைவுகள் மீண்டெழுந்தோறும்
உடன் வருகிறது
ஒரு பிஞ்சுக்குழந்தையின்
மென்பாதம் முத்தமிடும் பரவசம்

வால்பாறை



“ஒண்ணுமே சொல்லாம இருந்தா எப்படிப்பா ? நான் என்ன பண்ணுறது?” எனக் கேட்ட அருணாவை ஸ்டைலாக (பார்ப்பதாக நினைத்துக்கொண்டு) பார்த்துக்கொண்டே சொன்னேன், “உனக்கென்ன அதப்பத்தி, லீவு போடு; மத்தத நான் பாத்துக்கறேன்…” இப்படித்தான் துவங்கியது அருணாவின் பிறந்தநாள் Special Trip. நேற்றிரவு வரை எந்த இடத்துக்குப் போகிறோம் என்பதைகூட தெளிவாக முடிவு செய்திருக்கவில்லை. எல்லோரும் தெளிவாய் இருந்த ஒரே விசயம் நாளைக்கு அருணா பிறந்தநாள், எங்காவது Trip போறோம் என்பது மட்டுமே. ஏற்காட்டில் துவங்கி, புன்னகை மன்னன் அருவி, ஊட்டி, கொடிவேரி, பவானி சாகர் அணை என ஏதேதோ திட்டமிட்டு, இறுதியாக இன்று காலை 7:30 மணிக்கு நாங்கள் குடும்பத்துடன் கிளம்பியது வால்பாறைக்கு.

*

பூண்டியிலிருந்து மங்கலம், பல்லடம், பொள்ளாச்சி வழியாக ஆழியாறு அறிவுத்திருக்கோவிலை கடக்கையில் மணி 9:15 இருக்கும். நாங்கள் திட்டமிட்டிருந்த முதல் இடம் “Monkey Falls” வந்தது, எங்கள் கார் கொஞ்சம் Slowஆவது தெரிந்தவுடன், அருவி முன்பிருந்த கோவிலில் அமர்ந்திருந்த காவலாளி சொன்னார்; “ நிறுத்த வேண்டியதில்லைங்க… சொட்டுத் தண்ணியில்லீங்க சார்”. தன் பிறந்தநாளுக்கு Tripபோகும் அதிர்ச்சியிலிருந்தே மீளாத அருணாவுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி. என்னைப் பொருத்தமட்டில் அடியையும் சரி அதிர்ச்சியையும் சரி (வேறு வழியில்லாமல்!) அனுபவமாய் கருதுவதால், ”பயணம்தான் முக்கியம்; இலக்கில்லை” எனும் தத்துவத்தை (தூங்கிக்கொண்டிருந்த) எல்லோருக்கும் புரியும்படி சொல்லியவாறே, மலைப்பாதையில் கார் ஓட்டத்துவங்கினேன். 40 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதை, மிகவும் பொறுமையாகவே வண்டி ஓட்டினேன். 11ஆவது வளைவில் இருந்த View Pointல் நிறுத்தி ஆழியாறு அணையைப் பார்த்தோம். கொஞ்சமே தண்ணீர் இருந்த அணையும், சொட்டுத்தண்ணீர் இல்லாத குரங்கு அருவியும் நாம் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் சாட்சியாகத் தோன்றின. சங்கடம் நிறைந்த மனதுடன் மீண்டும் பயணம் துவங்கியது; வேறெங்கும் நிற்காமல், நாங்கள் செல்வதாய் திட்டமிட்டிருந்த “கூழாங்கல் ஆற்றை” அடையும் போது மணி 11 இருக்கும்.

.

வால்பாறை பஸ் டிப்போ தாண்டி சென்றால் கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவில் வரும் ஒரு பாலம்; பாலத்தின் அடியில் கூழாங்கல் ஆறு. பாலத்தில் இடப்புறம் அதிக ஆழமாக இருப்பதால்; வலப்புறம் ஆழம் மிகவும் குறைவாக இருந்த இடத்தில் நானும், கார்த்திக்கும், கிருத்திகாவும் அப்பாவுடன் இறங்கினோம். தண்ணீர் எங்கோ ப்ரீஸரில் இருந்து வருவதாகத் தோன்றுமளவு சில்லிட்டிருந்தது. கிருத்திகா முதலில் தண்ணீரில் இறங்க மறுத்ததும், பின்னர், கிளம்பும் தருவாயில் தண்ணீரை விட்டு எழ மறுத்ததும் என ஏக ரகளை. கார்த்திக் தண்ணீரைக் கண்டால் மீனாகும் ரகம். என்ன கரைக்கருகிலேயே நீந்தும் மீன். 2 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து ஏறத்தாழ 12 கி.மீ தொலைவில் இருக்கும் ”நீரார் அணைக்கு” பயணப்பட்டோம். அங்கும் தண்ணீர் குறைவுதான்; போதாததற்கு நாங்கள் அங்கு சென்று இறங்கவும், மழை மண்ணிறங்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் மட்டுமே அங்கிருந்தோம் பின்னர் வானிலை கொஞ்சம் இருட்டடிக்கத்துவங்கியதால், திரும்பலானோம். இந்த அணைக்கு வரும் வழியில் ரோடு இருந்ததை விட, குழிகளும், கற்களும் இருந்ததே அதிகம். கிட்டத்தட்ட ஒரு சாகசப்பயணம் செல்வதற்கிணையாய் இருந்த பயணம் அது.

.

கொஞ்சம் துளிக்கத் துவங்கியிருந்த மழை, இரவுக்குள் வீடு திரும்ப வேண்டிய சூழல் போன்ற காரணங்களால், வால்பாறையை விட்டு கிட்டத்தட்ட 3 மணியளவில் இறங்கத்துவங்கினோம். அணைக்கட்டை விட ஆற்றில் நாங்கள் மகிழ்ந்திருந்தோம்; அது ஒருவகையில் இந்த பயணம் மோசமில்லை என்ற நிறைவைத்தந்தது.

.

திரும்பி வரும் வழியில் விட்டு விட்டுப் பெய்த மென் தூரல், பயணத்தின் அழகை இரட்டிப்பாக்கியது. வால்பாறை மலையிறங்கி பொள்ளாச்சி ரோட்டில் விரைகையில் மணி 5 இருக்கும். பொள்ளாச்சிக்கு சற்று முன்னர் சுங்கத்தில் இருக்கும் “தாஜ் பிரியாணி” ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம்; இந்த நாளில் அடுத்த கொண்டாட்டம் “பிரியாணி”. அளவான மசாலா, அட்டகாசமான பிரியாணி கூடவே பெப்பர் சிக்கன் , மட்டன் கொத்து என ரகளையான கூட்டணி. நிறைவான உணவு.

*

அதுவரை இந்த நாள் சிறப்பாய்த்தான் இருந்தது. அதன் பின்னர்தான் வெகு சிறப்பாய் மாறியது. அதுவும் உணவகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்தவுடனே. வேறென்ன, மழைதான்; வெறும் மழையல்ல மாமழை. சுங்கம் துவங்கி, நெகமத்துக்கு சற்று முன்பு வரை பெய்தது பெருமழை. கொஞ்சம் இடி, மின்னல், கூடவே செமயான காத்து என பெய்யெனப் பெய்தது. முன்னால் செல்லும் ஓரிரு வண்டிகளில் Danger Lightன் ஒளியை மட்டுமே கணக்கிட்டு கார் ஓட்டியது ஏறத்தாழ 40 நிமிடங்கள்தான் என்றாலும், பெருமழை தந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது. நெகமம் தாண்டி மழை சுத்தமாய் இல்லை. களைத்துபோய் வீடு திரும்புகையில் மணி 7:40 ஆகியிருந்தது.

*

இன்றைய பயணத்தின் பெருஞ்சிறப்பே மழைதான் என்று தோன்றியது.


அருணாவும் நினைத்திருக்கக்கூடும், “கல்யாணமாகி இவ்வளவு வருசத்துல, என்னைக்குமில்லா திருநாளா திடீர்ன்னு, பொறந்தநாளைக்கெல்லாம் Tour கூட்டிட்டு போனா, மழை மட்டுமா வரும், வானமே இடிஞ்சு விழும்…”


மீண்டும் ஒருமுறை ”ஹேப்பி பொறந்தநாள் அருணா “ Aruna Kalees :)

HBD



மாம்பலம் ரயில் நிலையம், மருந்தீஸ்வரர் கோயில், ஜாமூன், மாயாஜால், ஆழி சூல் உலகு, FINGER FISH, அபியும் நானும் திரைப்படம், HOT AND SOUR SOUP, ஜெ.சைத்தன்யாவின் சிந்தனை மரபுகள், சோலையில் சஞ்சீவனம் உணவகம், பெருங்குடி ஜெய்ஹிந்த் flat, பெசண்ட் நகர் பீச், Fried Rice, நாவல் பழம், நீரோடும் வைகையிலே பழைய பாடல் ,முருகன் இட்லிக் கடை, அடையாறு மருத்துவமனை, திருவான்மியூர் ரயில் நிலையம்....இன்னும் இன்னும்....


அன்பின் அருணா,
நம்மைத் தவிர இவ்வுலகின் மற்றெல்லா உயிர்க்கும், மேற்கண்டவை வெறும் சொற்கள். நமக்கோ ஒரு நாளும் மறக்கவியலா தடயங்கள்.

*
என் மீது நீ பொழியும் பேரன்பின் ஒரு பகுதியையேனும் திருப்பித்தருவதற்கே நான் செல்லவேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம்.

*
வலிகளை தாங்கிக் கொண்டும்
கசப்பை செரித்துக் கொண்டும்
வாழும் நாள்வரை
புன்னகை பூக்க விரும்பும் ஒருவனிடமிருந்து

அவன் புன்னகைக்கும் தருணங்களை விஸ்தரிக்கும் ஒருத்திக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

Happy birthday Aruna Kalees :)

பாதாம்...கூடவே ஒரு பல்டி



கோபம் இருக்கும் இடத்துலதான் குணம் இருக்கும். நம்மள ஒருத்தர் ரொம்பவும் திட்டினாலோ அல்லது அடிச்சாலோ, அவங்களுக்கு நம்ம மேல பாசம் அதிகமுன்னு அர்த்தம். எப்பயுமே அப்பாவே அம்மாவோ என்னை அடிச்சதோ, பெரிய அளவில் திட்டினதோ இல்ல. திரைப்படங்கள்ல வர மாதிரி தர்ம அடி வாங்குற அளவுக்கு நான் நடந்துகிட்டாலும் அருணா (இன்னும்) அந்த லெவலுக்கு போகல (பப்ளிக்ல அப்படித்தான் சொல்லமுடியும்கறது வேற விசயம்). என்னதான் கோவம் வந்தாலும் கார்த்திக்கும் நம்ம மேல கைவச்சதில்லை. அப்ப ”அடிக்கிற கைதான் அணைக்கும்”ன்னு பீலிங்க்ஸ் காட்டவைச்சது யாரு ?.
வேற யாரு என் மகள் கிருத்திகாதான்.
.
பாப்பா, (குறிப்பா என்னை) அடிக்கற விசயத்துல கிட்டத்தட்ட ஒரு விஜயசாந்தி மாதிரி. அதுலயும் அவள் ஏதாவது தப்பு பண்ணிட்டா, நாம அடிக்கறதுக்கு முன்னாடி நம்மள அடிச்சுட்டு, நாம் அந்த அதிர்ச்சில நிக்கும் போது, “அப்பா, திட்டிட்டாரு”ன்னு கண் நிறைக்கும் கண்ணீருடன் என் அப்பாவிடமோ, அம்மாவிடமோ குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பாள். அப்புறமென்ன, அடிச்சவள சமாதானப்படுத்த, வீடே சேர்ந்து என்னை கழுவிக் கழுவி ஊத்தும் கொடுமையும் நடக்கும். கோப ஸ்டோரி போதும், இப்ப குணத்துக்கு வருவோம். என்னதான் தர்ம அடி கொடுத்தாலும் , பாப்பாவுக்கு அப்பான்னா Specialதான். பல் விளக்கி விடுறதுல இருந்து, சாப்பாடு ஊட்டுற வரைக்கும் நான் செய்யும் போது கொஞ்சம் சமத்தா இருந்துக்கிறாள் என்பது வீட்டில இருப்பவர்கள் கண்டறிந்த உண்மை (அல்லது, அப்படி சொல்லியே எந்தலைல வேலைகளை கட்டுற வித்தையோ?!). அதை நானும் உணர்ந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் நடந்தது.
.
இரவில் ஊற வைத்த பாதாம் பருப்பை காலையில் கார்த்திக்கும், கிருத்திகாவுக்கும் தருவது வழக்கம். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு நாள் (அந்தனைக்கு பாப்பா, காலைல இருந்தே அப்பா, அப்பான்னு ஒரே கொஞ்சல்ஸ்), ஊற வைத்த பாதாம் பருப்பை கிருத்திகாவுக்கு ஊட்டினேன். இரண்டு முறை மென்ற பின் பாப்பா சொன்னாள்
“அப்பா, பாதாம் நீங்க ஊற வச்சதா?, ரொம்ப சூப்பரா இருக்கு”


“இல்ல பாப்பா, அம்மா ஊற வைச்சிருப்பாங்க” என்றேன். அட தர்மேந்திரா என அதிர்ச்சி reaction காட்டினவள்; அடுத்த நொடியிலேயே, அம்மாவிடம் சென்றவள், கொஞ்சம் கோவமாக கேட்டாள் “ஏம்மா, நீயா பாதாம் ஊற வச்ச?”. எங்கள் உரையாடலை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்த அம்மா ஒரு பாராட்டை எதிர்பார்த்தவாறே சொன்னார் “ஆமா, தங்கம்”;


“பாதாம் நல்லாவே இல்ல; நல்லா கலக்கி ஊற வைக்கோணூம்” என் மெல்லமாய் ஒரு அடி வைத்தாள், எப்போதும் நான் காட்டும் “அடிப்பாவி” reaction இப்போது அம்மாவிடம்.

:)

புத்தம் சரணம்...

புத்தனை எனக்கும் பிடிக்கும்
"ஆசையே அழிவுக்கு காரணம்" என்றதோடு
”அன்பே அனைத்துக்கும் மூலதனம்” என சொல்லியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
மக்களின் கண்ணீர் நனைந்த அரியணை
அறத்தின் கேடு என அருளியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
பற்றற்று இருப்பது, பெளத்தத்தின் மீதும்
என புரியும்படி விளக்கியிருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அதிகாரத்தின் கொடூரமுகம் அனைவரையும்
சமமாய் அரவணைத்திருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அரியணையையும் ஆட்சியையும் விட்டுவந்த
அவன் புகழ் பாடிக்கொண்டே,
அதன் பொருட்டே நிகழும் வன்கொடுமைகளை
தடுத்திருந்தால்
*
புத்தனை எனக்கு மிகவும் பிடிக்கும்;
என்ன, ஒரே வருத்தம்,
அவன் சித்தார்த்தனாகவே இருந்திருக்கலாம்.

துணை



ஆசைக்காய்

தகப்பன் விரல் பிடித்து

நடக்கிறாள் ஆதிரா...


பிஞ்சுப்பொன் கரத்துள்
தன் விரல் பொதித்த
தகப்பன் உணர்ந்தான்
பெருந்தெய்வம் உடன்வரும்
பாதுகாப்பை !

766









”மாமா, எனக்கு படம் வரையறது கூட கஷ்டம்; என்னப்போயி..”







காரணங்களை நான் சொல்லத் துவங்கும் முன்பே இடைமறித்தார் தம்பி மாமா. “எதெடுத்தாலும் முடியாது, தெரியாதுன்னு சொல்லாம, ஒரு முயற்சி பண்ணிப்பாருடா”;







அப்போதைக்கு மாமா சொல்வதுதான் சரியென்று பட்டது. ஓரளவு நன்றாக படிப்பவன் என்ற பிம்பம் எனக்கு இருந்ததால் என்னை டாக்டர் ஆக்கிவிடும் கனவு மாமாவுக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் நான் வாங்கிய 416 மதிப்பெண்கள் அவருக்கு, “சரி பையன் ஓரளவு படிச்சுக்குவான்” என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது. அதன் வெளிப்பாடாக, மேல்நிலைக்கல்விக்கு பயாலஜி எடுக்கச்சொன்னார். எனக்கு மாமாவின் கனவு புரியும் என்பதால், ஒருவழியாக நானும் மனதளவில் பயாலஜியை கஷ்டப்படுத்தும் முடிவுக்கு வந்திருந்தேன். பத்தும் பத்தாததுக்கு, பள்ளியில் சேர்த்துவிட வந்திருந்த கிருஷ்ண மாமாவும் ”சரி, அப்படித்தான் நல்லா ஊக்கமா படிடா, நம்ம குடும்பத்துலயும் ஒரு டாக்டர் இருக்கட்டும்” என நம்பிக்கை ஊட்டினார். ஏற்கனவே தம்பி மாமாவிடம் பேசிமுடிக்கும்போது மானசீகமாக வெள்ளைக்கோட் அணிந்திருந்தவன், கிருஷ்ண மாமாவின் சொற்களைக் கேட்டதும் ஸ்டெதஸ்கோப்பையும் எடுத்துக்கொண்டேன். ஆயிரம் பேரைக் கொன்னு அரை வைத்தியன் ஆகும் முயற்சியில் இறங்காததும், “சிஸ்டர், அந்த ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க” என்று சொல்லாததும் மட்டும்தான் பாக்கி.




*




பதினொன்றாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வில் பயாலஜியில் நான் வாங்கிய 169 மதிப்பெண்கள்தான், மேல்நிலைக் கல்வியின் இரண்டு வருடங்களில் நான் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண் என்பது மட்டுமல்ல; நான் பயாலஜி பாடத்தில் மூன்று இலக்கத்தில் மதிப்பெண் வாங்கிய முதலும் கடைசியுமான பரிச்சையும் அதுதான். கிட்டத்தட்ட பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரிக்கும் அதே கதிதான். ஆக, என் வாழ்க்கையில் மருத்துவமனைக்கு, நேயாளியாகவோ அல்லது பார்வையாளனாகவோ மட்டுமேதான் போக முடியும் என்பது எனக்கு பதினொன்றாம் வகுப்பிலேயே தெரிந்துவிட்டது. அந்நிலையில் மட்டுமல்ல எந்நிலையிலும் என்னைக் கைவிடாத பாடம் “கணக்கு”தான். அதன் கருணையால் மட்டுமே 766 மதிப்பெண்களுடன் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன்.




*




இன்றும், அலுவலகத்தில், என் உடன் பணிபுரியும் நண்பர்களில் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தும், ”யோசிக்கறதெல்லாம் நமக்கு ஆவாது பாஸ்” என்பவர்கள் உண்டு. ஹிந்தியில் “ராஷ்ட்ரபாஷா” வரைக்கும் தேர்ச்சி பெற்றிருந்தும் “ஹிந்தி எனக்கு மாளாது ஹே” சொல்லும் நெருங்கிய நண்பன் எனக்குண்டு. அவ்வளவு ஏன், 170 க்கும் மேல் ஆங்கிலத்தில் மதிப்பெண் பெற்றிருந்தும் Spelling என்பதற்கே தப்பாய் Spelling எழுதும் நண்பர்களை நீங்களும் அறிவீர்கள்தானே (ஒடனே எம்பட நெனப்பு வந்துச்சுன்னா, அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல). பெரும்பாலும் இந்த மதிப்பெண்களும் தேர்வும் “Selection”னுக்காக அல்ல, “Filtering”குக்காக என்பது என் நம்பிக்கை. லிப்ட்டோ நடந்தோ மொத்தத்தில் மேலேறினால் போதும்தான்.




*




பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் வந்த உடனே எழுத நினைத்த விசயங்கள் இவை. ஆனால் இரண்டு மூன்று தினங்களாக கொஞ்சம் busyயாக இருந்துவிட்டதால் எழுதமுடியவில்லை. நமக்குத் தெரிந்த சில மாணவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கக்கூடும். அதை கடக்கவே முடியாத மிகப்பெரிய துக்கமாக அனுசரிப்பதும்; குறைவான மதிப்பெண்களால் “வாழ்க்கையையே WASTE பண்ணிட்டயே” ரீதியில் கவலைப்படுவதும் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன். எதிர்காலம் மனிதன் மனதில்தான் இருக்கிறதே ஒழிய, மதிப்பெண்களில் இல்லை; நிச்சயம் இல்லை.”




.




”நாமாய் விரும்பினால் ஒழிய, வீணாய்ப் போவதற்க்கும், வீணாக்குவதற்கும் வாழ்க்கை விடாது !”




.




வாழ்வோம் :)

Speed - Limited :)



நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ அல்லது தனியாகவேயேனும் பயணங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமானது. உற்ற நண்பர்கள் துணையுடனோ, அந்நிலை வாய்க்காத போது மனம் கவர்ந்த பாடல்களின் தொகுப்பு நிரம்பி இருக்கும் “Pendrive”ன் துணையுடனோ நீண்ட பயணங்கள் சென்றிருக்கிறேன்.

*

”அண்ணா, படம் 4 மணிக்கு; டைமண்ட் தியேட்டர் வந்திருங்க, நாங்க ஊத்துக்குளியிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம்” ஹரீஷ் என்னிடம் சொன்னபோது பிற்பகல் 2:30 மணி இருக்கும். அலுவலக தோழர் ஒருவரின் புதுவீடு கெடா வெட்டுக்கு சென்றிருந்த நான் இருந்தது ஈரோட்டில். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது மணி 2:45 இருக்கும். நசியனூர் பைபாஸ்லில் இணைந்த சற்று நேரத்தில் மீண்டும் அழைப்பு ஹரீஷிடமிருந்து.
“அண்ணா நாங்க இப்பதான் கிளம்புறோம்; நீங்க எங்க இருக்கீங்க?”
“தம்பி, நான் வரதுக்கு நேரமாயிரும்ன்னு நினைக்கிறேன்; நீங்க போங்க நான் தியேட்டர்ல வந்து Joinபண்ணிக்குறேன்” என்றேன். அதன் பின்னர் ஓட்டு ஓட்டு என ஓட்டி ஒருவழியாக தியேட்டருக்குள் கார் நுழையும் போது மணி 3:55. அதுவல்ல விசயம். ஊத்துக்குளியிலிருந்து சகலைகளும், ஹரீஷ்ம் எனக்கு சற்று முன்னர்தான் வந்திருந்தார்கள். ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் நானும் என்னை உணர்ந்த தருணம் அது. என்னதான் வேகமென்றாலும் ஒருபோதும் நான் risk எடுத்ததில்லை. ஏன்னா, அடிப்படையில நான் கொஞ்சம் (அருணாவுக்கு?!) பயந்தவன்.
*
அதைபோலவேதான் நேற்று அலுவலக நண்பன் ஒருவன் திருமணத்துக்கு சேலம் சென்றிருந்த பயணமும். திருமணம் முடிந்த பின்னர் திரும்பி வரும் வழியில் கொஞ்ச நேரம் நானும் அலுவலக நண்பர் ஒருவரும் ரேஸ் விட்டோம். இந்த ரேஸ் கண்மூடித்தனமாக அல்ல; ஆங்கிலத்தில் “Calculative Risk” என்பார்களே, அவ்வகையில் சேர்ந்தது. முந்துவது அல்ல நோக்கம். “ஜி, நீங்க முன்னால போன லாரிய பாக்கவேயில்ல, கொண்டுபோய் மோதிருவீங்கன்னுதான் நினைச்சேன்”, அதுவரைக்கும் நன்றாக பேசிக்கொண்டுவந்த நண்பர் கார்த்திக்கின் குரலில் இருந்தது திகில். அப்போதுதான் இரண்டு லாரிகளுக்கிடையேயான இடைவெளியில் நுழைந்து திரும்பியிருந்தேன். அதைபோலவே சில பல ஜெர்க்குகளுக்குப் பிறகு ஒருவழியாக அவரை ஊத்துக்குளியில் இறக்கிவிட்டேன். எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை; அதிலும் Drive செய்வது இன்னும் இன்னும் பிடித்தது. அப்படித்தான் நேற்றைய பயணமும்.
*
இன்று காலை ஊத்துக்குளியிலிருந்து பூண்டி வரும்போது அருணாவிடம் இந்த கதையை சொன்னேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டவள், வழக்கம்போல இறுதியாக ஒரு சிக்ஸர் அடித்தாள் “சூப்பர், இந்த கதையை அப்படியே அத்தை (என் அம்மா)கிட்ட சொன்னா, அதுக்கப்புறம் கார் சாவியை நீங்க தொடக்கூட முடியாது”
.
என் முகத்தில் எப்போது பல்ப் எரிந்தாலும், அதை அக்கணமே ப்யூஸ் போக வைக்கும் வித்தை கற்றவள் அருணா :)

டைரி - தொலைந்த கனவுகள்

ஏழு நாள் சாட்டியிருந்த திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் பொங்கல் நேற்று வெகு சிறப்பாய் முடிந்தது. அருணாவுக்கு அரசு விடுமுறை, நான் விடுப்பெடுத்திருந்தேன். நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவிலின் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. புதன் காலை 9 மணியளவில் மாவிளக்கு எடுக்கும் படலம் கோவிலில் இருந்து துவங்கியது. வீதி உலா வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்ப ஏறத்தாழ 2 மணி நேரங்கள் ஆனது. அதைப் போலவே மாலையில் அலகு குத்தி தேர் இழுக்கும் வைபவமும். மிகவும் நல்ல கூட்டம். இந்த முக்கியமான இரண்டு நிகழ்வுகளிலும் நான் முழுவதுமாக கலந்துகொண்டேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்க நேரிட்ட சிலர், அவர்களுடனான மிகச் சுருக்கமான உரையாடல் இவற்றைத் தவிர்த்து பொதுவாக நான் தனித்திருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் என உள்ளூரில் யாரையும் சொல்லமுடியாதது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
*
இத்தனைக்கும் பால்யத்தில் நண்பர்களுடன்தான் பெரும் பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். அம்மா கடையில் இருந்த ஒரு மதிய வேளையில், வீட்டுக்கு அருகிருந்த கிணற்று மேட்டு பனைமரத்தடிக்கு நானும் கண்ணனும் சென்று ”நொங்கு போடு, நொங்கு போடு” எனக்கேட்ட போது எங்களுக்கு ஐந்து வயது (கோபத்துடன் தேடி வந்த அப்பா எங்களை நொங்கி எடுத்தது தனிக்கதை); கிருஷ்ணமூர்த்தியும் நானும் பிசிக்ஸ் ட்யூசன் போவதாய் சொல்லிவிட்டு பாப்பீஸ் ஹோட்டல் எதிரே கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த நாட்கள்; சின்னண்ணன் காட்டில் கொட்டும் வெய்யிலில் கிரிக்கெட் ஆடியே கழித்த கோடை விடுமுறைகள்; குடியிருந்த காம்பவுண்டின் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து விளையாடிய ஐஸ் நம்பர்; நந்தண்ணன், பாஸ்கர் அண்ணன், அங்குராஜ் அண்ணன், சண்முகம் அண்ணன், ரஞ்சித் அண்ணன், ரவி இன்னும் இன்னும் பால்யத்தின் மகிழ்ச்சியை பங்குபோட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் பெயர் பட்டியலில் அடங்காதது. கிட்டத்தட்ட அத்தனை பேரும் ஒரே பள்ளி; பெரும்பாலும் ஒரே ட்யூசன்; வீடுகளும் ஒரே காம்பவுண்டில் அல்லது சற்றுத் அருகில்; என பெரும்பாலான நேரங்கள் சேர்ந்திருக்கும் வரம் பெற்ற அற்புத நண்பர்கள். திருமுருகநாதர் தேர், காமாட்சியம்மன் பொங்கல், முத்து மாரியம்மன் பொங்கல் என் உள்ளூர் திருவிழாக்களில் சேர்ந்து சுற்றித்திரிந்த நாட்கள் என்றும் மறவாதவை.
*
பின்னர், பள்ளிக்கல்வி முடிந்து, கல்லூரி சென்ற நாட்களில் விடுதியில் தங்கிவிட, கொஞ்சம் கொஞ்சமாய் பால்யத்தின் சிநேகிதங்களை மறக்கலானேன். இதோ இப்போது என் நெருங்கிய நட்புவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள், பள்ளி இறுதியாண்டில், இளங்கலை/முதுநிலை கல்லூரியில், பணிபுரியும் இடத்தில் பழகியவர்கள்தான். மனம் விட்டுப் பேசக்கூடிய மிக நெருக்கமான தோழமைகள்தான். என்ற போதிலும் பால்யத்தின் ஏதேனும் ஒரு நட்பையாவது பேணிக்காத்திருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஒற்றை மாங்காய் கீற்றில், சிறிய துண்டு தர்பூசணிப்பழத்தில், உடைந்துபோன சின்ன சிலேட்டுப் பென்சிலில், கடனாய்த் தந்த/வாங்கிய சொட்டு இங்கில் மிகப்பெரிய கோபங்களையும் தீர்க்க முடிந்த கனாக்காலம் அது. மற்ற எல்லா தருணங்களையும் விட, உள்ளூரில் நடக்கும் பண்டிகைகள் என் பால்ய சிநேகிதர்களின் நினைவை, அவர்களின் சிநேகிதத்தை தொடராமல் விட்ட என் அறியாமையை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
*
பெருங்கூட்டத்தில் தனித்திருப்பது சில சமயம் வரம்; பல சமயங்களில் சாபம்.
:(

ஆலகாலம்



இன்னும் பலப்பட்டிருக்கும்

சில உறவுகள்

நான் உதிர்த்த சில சொற்களைத்

திரும்பப்பெற முடிந்திருந்தால்

*
எந்த நட்பும்
பிரிந்திருக்காது
ஆளுக்குத் தக்க முகமூடியை
அடியேனும் அணிந்திருந்தால்
*
நற்பெயரை நான்
காத்திருக்க முடியும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று உரைத்திருந்தால்
*
என்னுடைய பயணம்
இன்னும் இலகுவாயிருந்திருக்கும்
எல்லோருடைய அடியொற்றி
என் பாதையையும் நான் அமைத்திருந்தால்
*
இதோ
இருள் கவிழும் இந்த மாலையில்
நான் தனித்தருந்தும்
என் இறுதிக் கோப்பைத் தேநீரில்
இறங்கியிருக்கிறது
உண்மையின் விஷம்.

பாகுபலி-2



சனிக்கிழமை இரவு திருப்பூர் டைமண்ட் தியேட்டரில் இரண்டாவது முறையாக “பாகுபலி-2” பார்த்தேன். இம்முறை குடும்பத்துடன். கதை, திரைக்கதை, இசை, பிரம்மாண்டம் என ஜாம்பவான்கள் பலமுறை விவாதித்த விசயங்களைப் பற்றியதல்ல இப்பதிவு. மாறாக, இப்படத்தில், என்னைக் கவர்ந்த ஒரு பாத்திரப்படைப்பு (Characterization) பற்றிய சிறு பகிர்வு. அது, தன் மகனுக்கும் மேலாக இன்னொருத்தி மகனைக் கருதிய ராஜமாதா சிவகாமியோ, அன்னை கற்றுத்தந்த தர்மத்தின் வழி நின்று அன்னையையே எதிர்த்து நின்ற பாகுபலியோ, எந்நிலையிலும் விசுவாசம் மாறாத கட்டப்பாவோ அல்ல; எந்நிலையிலும், யார் முன்னும், எதன் பெருட்டும் தன் சுயம் விட்டுத்தராத ”தேவசேனா”. அந்த பாத்திரப்படைப்பும், அவள் பேசும் வசனங்களும் அட்டகாசம்.

*

தன் மண்ணுக்கு நலம் பயக்கும் என்ற போதிலும், பொன் மலை குவித்து மணம் பேச வந்த போதிலும், தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் சிவகாமிக்கு பதில் மடல் எழுதும் தருணம்; என்னதான் தன் மனம் கவர்ந்தவனாக இருந்தாலும், அவனே மகிழ்மதியின் முடி இளவரசனாக இருந்தபோதிலும், போர்த்திறம் பொருந்திய மாவீரனான போதும், பாகுபலியுடன் கைதியாக செல்ல மறுக்கும் காட்சி, பெண்ணின் விருப்பம் அறியாமல், தன் மகனுக்கு வாக்கு தந்த சிவகாமியை, அவள் நாட்டு அரசவையிலேயே எதிர்த்துப் பேசுவது, தனிப்பட்ட வஞ்சத்தால் தன் கணவன் பதவி பறிக்கப்படும் போது, அதைக் கண்டு, தவறு எனத்தெரிந்தும் மெளனமாயிருக்கும் சிவகாமியை நோக்கி நேர்படப் பேசுவது என பல காட்சிகளில் தேவசேனையின் ஆளுமையின் காட்சியமைப்பு அட்டகாசம்.

*

அதே சமயம், மகிழ்மதி பேரரசின் ராஜமாதாவை கோவப்படுத்தும் விதமாய் தன் தங்கை மடல் எழுதும் போது, அதை தடுக்கக் கோருபவர்களிடம் குந்தல நாட்டு மன்னர் சொல்லும் “அது அவள் விருப்பம்” என்னும் ஒற்றை வசனத்தில் அவளின் ஆளுமைக்கு கிடைக்கிறது அங்கீகாரம். சமகாலத்தில் நாம் கடந்து வரும் ”கொஞ்சம், அனுசரிச்சு போம்மா”, “பொண்ணுக்கு இவ்வளவு திமிரு ஆகாது”, “எல்லாம் போக போக சரியாயிரும்; கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுங்க” தருணங்களால், தேவசேனையின் அண்ணன் characterம் அந்தக் காட்சியும் முக்கியமாய் தோன்றியது. அதைப்போலவே, என்னதான் பாசமான மனைவியாய் இருந்தாலும், பொது அரங்கில் தன் அன்னையை எதிர்த்துப் பேசுவதையும்; தன் தேசத்தின் சட்டதிட்டங்களை விமர்சிப்பதையும் தடுக்காமல் அதிலுள்ள நியாயத்தின் பொருட்டு அமைதிகாக்கும் பாகுபலியின் Characterம் அருமை.

*

சமீபத்தில் பார்த்த ”காற்று வெளியிடை” படத்தின் நாயகி அதிதீயின் பாத்திரப்படைப்பும் காதலனே ஆனாலும், தன் சுயமரியாதையை விட்டுத்தராத ஒரு பெண்ணாய் அமைக்கப்பட்டிருந்ததாலோ (தேவசேனையின் ஆளுமை அளவுக்கு காட்சிப்படுத்தப்படாத போதும்) என்னவோ, படம் பார்த்துமுடித்த பின் தேவசேனை குறிந்த காட்சிகளை நினைக்கும்போது அதிதீயின் பாத்திரமும் நினைவுக்கு வருகிறது

*

சரி, இப்ப நம்ம சோகக் கதைக்கு வருவோம்; நான் பாகுபலி-2 திரைப்படத்தை இரண்டாவது முறை பார்ப்பதால், அருகிருந்த அருணாவிடம் தேவசேனா வரும் மேற்சொன்ன காட்சிகளில், “ஹே, இப்ப ஒரு வசனம் வரும் பாரு; அவ கோவத்தை கவனி” ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டிருந்தேன். ஒரிரு காட்சிகளை மிக அமைதியாய் உற்று கவனித்தாள்; மூன்றாம் முறை அதைப்போலவே சொல்ல முற்பட்ட என்னை இடைமறித்து (படத்துக்கு கூட்டிட்டு வரதே எப்பயாவது ஒருக்கா, இதுலயும் பாக்கவுடாம தொண தொணன்னு பேசிட்டே இருக்கிறேன் என்ற கோபத்தில் ??) சொன்னாள், “அவ கட்டியிருக்கற சேலை சூப்பரா இருக்குல்ல, அத மொதல்ல Note பண்ணுங்க”


அந்த AC தியேட்டரிலும் எனக்கு குப்பென்று வியர்த்ததன் காரணம் கல்யாணமான பசங்களுக்கு மட்டும்தான் புரியுமுங்க :)