title


ஆறாவது வார்டு

 
மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்

.திரு.ஜெயமோகன். (ஓநாயின் மூக்கு
சிறுகதையில்)
*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.
*

ருஷ்ய ஆட்சி மன்றமானசேம்ஸ்த்வோவினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை.

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளுல் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.
*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் - எபீமிச்

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான்
*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.
*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

இரவு மணி 8, அலுவலகத்திலிருந்து வந்த சித்தப்பா அதிசயமாய் என்னிடம் பேசவேயில்லை. பள்ளி விடுமுறைகளில் காங்கயம்பாளையம் செல்லும்போதெல்லாம், இரவு எந்நேரமானலும் சித்தப்பா வந்த பின்னர்தான் இரவு உணவு உண்ணுவோம். பெரும்பாலும் வேடிக்கையும் சிரிப்புமாகக் கழியும் தருணம் அது. ஆனால், அன்றைய இரவு உணவின் போதும் சித்தப்பா முகம் கொடுத்து பேசவேயில்லை. சித்தப்பாவின் கோவத்துக்குக் காரணம் மறுநாள் காலையில் அவர் ஆபீஸ் கிளம்பும் போதுதான் தெரியவந்தது. பைக்கை ஸ்டார்ட் பண்ணும் முன்னர் “TK” என அழைத்து, “ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தா அத தேவைப்பட்டா மட்டும் செய்யணும். தேவையில்லாம எதையும் செய்யக்கூடாது” எனச்சொல்லிச் சென்றார். எனக்குப் புரிந்தது. இத்தகைய ஒரு நல்லுபதேசத்தை எனக்கு ஈட்டித்தந்தது ஒரு கருவி. அக்காலகட்டத்தில் பெரும் புரட்சியாய்க் கருதப்பட்ட அதன் பெயர் பேஜர். முந்தின நாள் காலையில்தான் தன் அலுவல்களுக்காக தரப்பட்டிருந்த பேஜரை என்னிடம் காட்டி, அதை உபயோகிக்கும் முறை, செய்தி அனுப்ப செய்ய வேண்டியவை என சொல்லிக் கொடுத்திருந்தார் சித்தப்பா. அன்று மட்டும் அவருக்கு நான் அனுப்பிய தகவல்கள் பத்துக்கும் மேல். அனைத்தும் ஒரே செய்திதான் “CALL ME “ எனத்துவங்கி ஊரில் இருக்கும் எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்ணில் முடியும் செய்திகள் அத்தனையும். அலுவலகத்தில் மேலாளருடன் முக்கியமாக விவாதித்துக்கொண்டிருக்கும் போதே ”கீ கீ” என தான் சத்தமிட்டு எனக்கு சங்கூதியது அக்கருவி. மேலாளர் தன்னைப் பார்த்த பார்வையை மறுநாளிரவு சிரித்துக்கொண்டே சொன்னார் சமாதானமடைந்திருந்த சித்தப்பா.

*

கண்டுபிடிப்புகள் நமக்குத் தரும் கிளர்ச்சிகள் சொல்லில் அடங்காதவை. எந்த ஒரு புது விசயத்தை அறிய நேரிடும் போதும், இதெல்லாம் நான் பாக்காததா எனும் பெரிய மனுசன் பாவனை பூண்டாலும் கூட, உள்ளூறும் நம் பால்யத்தின் குறுகுறுப்பை எவ்வயதிலும் மீட்டுத்தர வல்லவை கண்டுபிடிப்புகள். கண்டுபிடிப்புகளிலும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகள் சுவாரசியம் மிக்கவை. அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு கிராமத்தில் முதன் முதலில் நுழைவதை அம்மக்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றிய கட்டுரைகள் என்றுதான் “ஆதிமங்கலத்து விசேஷங்கள்” தொகுப்பைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சுருக்கிச் சொல்லுவதைத் தடுப்பது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் விதம். எழுத்தில் துருத்திக்கொண்டிராமல் அதன் போக்கிலேயே தொடர்ந்து வரும் பகடி. இவ்வகை கட்டுரைகளில் எதிர்பார்க்கக்கூடிய பகடித்தன்மையை இன்னும் சிறப்பாக்கியிருப்பது திரு.”க.சீ.சிவகுமார்” அவர்களின் மொழி.

*

அஞ்சலகப் பணியாளர் “Particulat Person” என்பதைச் சுட்ட “இதோ நீங்க தேடின பீப்பீ பக்கத்துலதான் இருக்கார்” எனச்சொல்லி ரிஸீவரை நீட்ட, தனக்கு போன் வந்த அதிர்ச்சியைக் காட்டிலும், படித்த அதிகாரியே தன்னை ”பீப்பீ” என கிண்டல் செய்வதாக எண்ணிக் கலங்கிய நாதஸ்வர வித்வானின் கதை “டெலிபோன்” பிறந்த காலத்தில் வருவது.


புதிதாய் வாங்கிய டார்ச்லைட்டின் பேட்டரி, ஊர் முழுக்க பந்தாக்காட்டியே தீர்ந்து போக, பேட்டரியை வெய்யிலில் காயவைத்து சார்ஜ் ஏற்ற முற்பட்டதைக் கூட சகித்துக்கொள்ளலாம். அடுத்தகட்ட வளர்ச்சியாக, பல்ப் ஹோல்டரில் பேட்டரியை நுழைத்து சார்ஜ் ஏற்றச் செய்த முயற்சி நமக்கே ஷாக் அடிப்பது.


படாத பாடு பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லோன் வாங்குகிறார் சிவலிங்கம். லோன் தொகையைத் தந்த அதிகாரி “மாச மாசம் கரெக்ட்டா கட்டீருங்க சார்” என்க, காசு கைக்கு வந்தபின் சிவலிங்கம் சொன்ன குசும்பான பதில் “மாச மாசம் கரெக்டா கட்டுறதுன்னா நான் ஃபைனான்ஸ்லயே வாங்கியிருப்பேனே, உங்ககிட்ட எதுக்கு வர்றேன் ?”.


”சிரிச்சா கொஞ்சம் வயசு கூடுதலா தெரியுது” என பெண் பார்த்து வந்த அண்ணன் திருமணத்துக்குத் தயங்க, ”சல்வார் போட்டா வயசு கொறஞ்சிடும் என்றும், நம்மூட்டுக்கு வந்தா, சிரிக்கவா போகுது” என்றும் துணிந்து கல்யாணம் கட்ட வைத்த தனசேகர்கள் கிராமத்து கிராமம் உண்டுதானே. என்றாலும் தன் பெயரை மைக்செட் குழாயில் கேட்க விரும்பி, திரும்பத் திரும்ப காணாமல் போனவர்கள் அறிவிப்பில் தன் பெயரை தானே சொன்ன “குளிப்பட்டி சுப்பிரமணி” கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்.

*

இவையெல்லாம் ஆதிமங்கலத்து விசேஷங்களின் துளிக்கூண்டு சாம்பிள்கள்தான். முழுக்கதையும் அதன் சுவாரசியங்களும் , இவற்றுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

*

கட்டுரை சுட்டும் மனிதர்களும் ஆதிமங்கலம் கிராமமும் (புனைவுதான் என்றபோதும்), நம் கிராமங்களையும் அதன் மனிதர்களையும் நினைவுபடுத்துகின்றது. இதனால் இப்புத்தகத்துடன் நம்மால் வெகு சுலபமாக ஒன்றிப்போக முடிகிறது. நிரந்தரமான மெல்லிய புன்னகைகளும், எதிர்பாரா வெடிச் சிரிப்புகளுமாக புத்தகத்தை படித்து முடித்ததும், ஒரு மென்சோகம் மனதில் படர்ந்தது. மறைந்த க.சீ.சிவகுமார் குறித்த பதிவுகள் நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம். குறிப்பாக செவேந்திரன் அண்ணனின் உறைப்புளி (http://kaleeswarantk.blogspot.com/2020/05/blog-post.html) நூலில் எழுதப்பட்ட கட்டுரை. சோகத்துடன் புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் க.சீ.சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்தேன், அதனருகில் புத்தகத்திலிருந்து சில பத்திகள் அச்சிடப்பட்டிருந்தன. புன்னகை எழுந்தது. கலைஞனுக்கு மரணம் விதிக்கப்படவில்லை.

*

ஆதிமங்கலத்து விசேசங்கள் – க.சீ.சிவகுமார் – டிஸ்கவரி புக் பேலஸ்

எனது இந்தியா

எந்தப் புனைவுக்கும் சற்றும் சளைத்ததல்ல வரலாற்றின் பக்கங்கள். நாம் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே மூதாதையர்கள் நிரையில்தான் நம்பவே முடியாத கீழ்மைமிக்க மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். நாம் நம்பியிருப்பதும், நாம் நம்ப விரும்புவதும் மட்டுமல்ல, உண்மை வரலாறு நாம் விழுங்க முடியாத கசப்பையும் தன்னுள்ளே அடக்கியதுதான் அது. கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களை சரிவரத் தெரிந்துகொள்வதுதான் நாம் இனி மேற்கொள்ளவிருக்கும் பயணத்துக்கான சரியான திட்டமிடலுக்கு உதவி செய்யும். அதுவே நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதற்கான தேவையும் கூட. ஆயிரமாயிரம் சுவாரசியங்களை உள்ளடக்கிய வரலாற்றை வெறுமனே வருட, மாத, தேதி வாரியான சம்பவங்களின் தொகுப்பாகப் படிக்க நேர்வது ஒரு வகை ஆவண வாசிப்பு மட்டுமே. புனைவின் வசீகர மொழியைக் கைக்கொள்ளும் ஒருவனால் எழுதப்படும் வரலாறு பெரும் வாசிப்பின்பம் தருவது மட்டுமல்ல, வரலாற்றில் ஒளிந்திருக்கும் பல கதைகளை நாம் கண்டுகொள்ளவும் வழிவகுக்கும். அப்படி ஒரு நிறைவு திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட “எனது இந்தியா” புத்தகத்தைப் படித்ததும் ஏற்பட்டது.
*
பெரும்பாலும் ஆங்கிலேயர் காலகட்ட ஆட்சியைக் குறித்தும், மன்னர்களைக் குறித்தும் பேசப்பட்டிருந்தாலும், சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு வரலாற்றில் இருக்கும் பங்கையும் உணர்த்தும் நூலாக “எனது இந்தியா” அமைந்துள்ளது.
 
ராதா நாத் சிக்தார் என்ற வங்காளி இளைஞனின் திறமையால் துல்லியமாக அளவு கண்டறியப்பட்ட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரத்துக்கு, ஆங்கிலேய சர்வேயரின் நினைவாக எவரெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள வரலாற்றைக் கூறும் கட்டுரை, காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட ஒரு தேசத்தின் மனிதர்களுக்கு மட்டுமல்ல மலைச்சிகரங்களுக்குக் கூட அடையாளமழிப்பு நிகழ்ந்திருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. மாமனிதர்களின் எழுச்சியில் சில தலைவர்கள் மங்கிப்போவதுண்டு. அதை உறுதி செய்கின்றன இந்திய விடுதலைப் போரில் நேதாஜி வழியில் அவருக்கு முன்னே சென்ற செண்பக ராமன் பிள்ளை மற்றும் ராஷ் பீகாரி போஸ் இவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்.
 
பெரும் கோவில்களும், மாளிகைகளும், அணைக்கட்டுகளும் கட்டப்பட்ட அதே காலகட்டம்தான் இன்னொருவகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் இன்னல்கள் எவ்விதத்திலும் அரண்மனைச் சுவர்களைக் கூட தொந்தரவு செய்யாதிருந்த நிதர்சனத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது. அதற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைந்துள்ளன மகாராஜா ஜெய்சிங் பற்றிய கட்டுரைகள். பெரும் நாகரீகம் கொண்ட சமூகம் என நம்மை நாமே எண்ணிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலேயே பழங்குடியினரின் இயற்கையுடன் இயைந்த வாழ்வுக்கு பெரும் தடைகள் இருக்கும்போது, சாதாரண மனிதர்களையே லட்சியம் செய்யாத காலனி நாடுகள் ஆட்சிபுரிந்த காலகட்டம் பழங்குடியினருக்கு இன்னும் கொடுமையாக இருந்திருக்கும். அப்பிண்ணனியில் ஏற்பட்ட ”சந்தால் எழுச்சி” மற்றும் அதிலிருந்து எழுந்து வந்த “பிர்சா முண்டா” எனும் தலைவன், அவனது மர்மச்சாவு குறித்து விவரிக்கும் “காட்டுக்குள் புகுந்த ராணுவம்”, இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளுல் ஒன்று.
 
மகாத்மா காந்தி செய்த உப்பு சத்யாகிரகம் வெளியே தெரிந்த அளவுக்கு, இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகப்பெரிய தடுப்புவேலிகளுல் ஒன்றாக அமைந்த உப்புவேலியைப் பற்றியும் அதனூடாக கட்டுப்படுத்தப்பட்ட உப்பு வணிகம் ஆங்கில அரசுக்குத் தந்த நன்மைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இந்நூலில் உண்டு (உப்புவேலி எனும் நூல் இதைக் குறித்து விரிவாகப் பேசுகிறது). பொதுவாக அனைத்து அதிகாரிகளும் இந்தியாவிலிருந்தும், இந்தியர்களிடமிருந்தும் கூடுமானவரை சுரண்டித்தின்ன முற்பட்டாலும் விதிவிலக்காய் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நினைத்த, செய்த அதிகாரிகள் நிரையில் வருபவர் ஆர்தர் காட்டன். இந்திய நதி நீர் மேலாண்மை குறித்தும் அணைக்கட்டுகள் குறித்தும் அவர் காட்டிய அக்கறையும் உழைப்பும் அவரை இந்தியாவின் நீர்ப்பாசன தந்தை என அழைக்க வைத்தன.
 
துவக்க அத்தியாங்களில் வரும் நைநியாப் பிள்ளையின் கதையும், ஊழல் நாயகன் கிளைவ் மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுரைகளும் புதுச்சேரி மாநிலத்தைக் குறித்தவை. தவிக்கவே இயலாதபடி திரு. பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” மற்றும் “மானுடம் வெல்லும்” படைப்புகள் நினைவுக்கு வந்தன.
*
ஒருபோதும் நாம் தவிர்க்கவே கூடாத வரலாற்றின் பக்கங்களை, புனைவுக்கிணையான வசீகர மொழியில் “எனது இந்தியா” கூறுகிறது.
*
 எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம்.

நெடுங்குருதி

2007 ஜுலை மாதம், நள்ளிரவு, டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு விடுதியறையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வெய்யிலோ மழையோ நானறிந்த அதிகபட்சம் என்பது நான் அங்கிருந்த இரண்டு மாதங்களில் கண்டதுதான். பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நள்ளிரவில், நான் மட்டும் கடும் வெப்பத்தை உணர்ந்தேன். மட்டுமல்ல, மனதளவில் மிகவும் தனியனாக உணர்ந்திருந்த நாட்கள் அவை. அத்தனிமை உணர்ச்சியின் வலி அவ்விரவில் மென்மேலும் பெருகியது. இவ்விரண்டுக்கும் காரணம் ஒன்றே, அது நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் “நெடுங்குருதி”. கதையின் இயல்பாலும், என்னுடைய அப்போதைய மனநிலையினாலும், எப்போது வேண்டுமானாலும் நான் அப்புத்தகத்தை விலக்கி விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தது. ஆனால், படிக்கத்துவங்கிய பின்னர் கூறுமுறையிலிருந்த வசீகரம் என்னை கட்டிப்போட்டது. பகலில் IT நிறுவனத்தின் ஆரம்பநிலை ஊழியனாக நொய்டாவிலும், பின்னிரவுகளில், நாகுவாக, ரத்னாவதியாக, ஆதிலட்சுமியாக ”வேம்பலை”யின் தெருக்களிலும் வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. இம்முறை மறுவாசிப்பு சொல்முகம் வாசகர் கூடுகைக்காக.

*

நாகு, அவனது பெற்றோர், நாகுவின் அடுத்த தலைமுறை என ஒரு குடும்பத்தின் கதையையும், அதனூடே, அதற்கிணையாக வெய்யிலுடன் நிரந்தர உறவேற்படுத்திக் கொண்ட வேம்பலை கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிண்ணிச் சொல்லப்பட்ட கதை “நெடுங்குருதி”. இந்நாவல், கோடை, காற்று, மழை, குளிர் என நான்கு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், இந்நாவலின் களமும் காலமும் கோடை மட்டுமே. வேறு பருவ காலங்களில் சொல்லப்படும் கதையில் கூட, கதாப்பாத்திரங்களின் வாழ்வில் நாம் காண்பது கோடையின் வறட்சியையே.

*

நாகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துவக்க அத்தியாயங்களிலே உண்டாகும் சண்டை கடும் கோடை ஏற்படுத்தும் எரிச்சல் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் வன்முறைக்கான சரியான உதாரணம். நாகுவின் அப்பா உப்பை மிதித்ததால் உண்டான எரிச்சலாலும் கூடவே அதைக் கழுவக்கூட நீரில்லாத சூழலில் மீதான வெறுப்பினாலும் விளைகிறது அந்தச் சண்டை. நாவலின் பெரும்பாலான மாந்தர்களின் இயல்பிலேயே வெளிப்படும் எரிச்சல் வெயில் காயும் பூமியின் ஒரு கொடைதான்.

*

நாவலின் / வேம்பலையின் பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக, சூல்நிலைக் கைதிகளாக காட்சிப்படுத்தப்பட்ட போதும், பெண்கள் எந்நிலையிலும் கருணையைக் கைக்கொள்பவர்களாகவே உள்ளனர். கோவிலின் வாசலின் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் தன் அண்ணியிடம் நாகுவின் அம்மா தன்னிடமுள்ள பணத்தை தருமிடம் அதற்கொரு உதாரணம். அந்த சந்தர்ப்ப்பத்தில் எழும் அவளது அண்ணியின் அழுகையை சுற்றிலுமிருப்பவர்கள் ஒரு பொருட்டாகவே கருதாமலிருப்பது அந்நில மக்கள் ஒவ்வொருவருக்குமே அப்படி அழுவதற்கான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அடையாளம். அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போகும் கண்ணீர்தான் பெரும் துரதிர்ஷ்டம் மிக்கது.


வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வாழ்வின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, ஊரை விட்டு வேறு ஊர் தேடிப்போகும் தன் மக்களை, விதியின் மாயக்கரங்களால் மீண்டும் மீண்டும் தன்னுள் இழுத்துக்கொள்கிறது வேம்பலை. நாகுவுக்குள், இறந்துபோன அவனுடைய இரண்டாவது அக்கா நீலாவின் நினைவுகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. போலவே அவனது அப்பாவுக்கும் நீலா மீது இருப்பது பெரும் வாஞ்சை. ரேகை சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மீண்டும் வேம்பலைக்குத் திரும்பிய பின்னர் நாகுவின் அப்பா செய்யும் முதல் வேலை தன் மகளைப் புதைத்த இடத்தைத் திருத்துவதே. ஒரு மழைக்காலத்தில் மகளின் புதைகுழியிலிருந்து வரும் மண்புழுவை தன் வீட்டில் சேர்ப்பித்து கொஞ்சம் ஆறுதலடைகிறார் அவர்.

*

பகலில் வெய்யிலின் ஆளுமைக்கு சற்றும் குறைவில்லாதது வேம்பலையின் இரவுகள். இருளன்றி வேறெதுவும் அறியா இரவுகள் அவை. ஒருவகையில் பகலெல்லாம் வாட்டி வதக்கிய வெய்யிலுக்கான (வெளிச்சத்துக்கான) ஒரு பெரும் ஆசுவாசமே அவ்விருள். களவுக்குப் போகும் வேம்பர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இருளையே சொல்ல முடியும். காயாம்பு அக்கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரத்தை கொண்டுவரும் போது அக்கிராமமே அதை எதிர்ப்பதற்க்கு இவ்விரண்டும் காரணமாக அமையந்திருக்கக்கூடும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. மரித்துப்போனவர்கள் மீண்டும் வாழ்வதான ஒரு சாத்தியக்கூறை தன்னுள் கொண்டிருப்பது இருள் மட்டும்தான். இரவில் அப்பாவும் அவனும் மட்டும் உணவுண்ணும் போது, நாகு தன்னைச் சுற்றிலும் தன்னுடைய அம்மா, அக்கா என அனைவரையும் உணர நேர்வதும் இருளின் கருணையினால்தான்.


இந்நாவலின், முக்கியமான இன்னொரு அம்சம் நாவலின் போக்கிலேயே கலந்துள்ள நாட்டார் தன்மை. நடக்க முடியாத ஆதிலட்சுமி நாகுவிடம் கூறும் கதைகள், குறிப்பாக இறந்தவர்கள் பறந்து போனதை தான் கண்டதாக ஆதிலட்சுமி கூறுவது, தாழியில் வைத்து மூடப்பட்ட சென்னம்மாவின் தாகம் அவ்வூர் மக்கள் எடுத்து வரும் குடத்து நீரைக் காலி செய்வது, இறந்து போனவர்கள் வாழும் இன்னொரு வேம்பலை கிராமம், சிங்கிக் கிழவன் இறந்துபோன குருவனுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது என விரித்தெடுக்க சாத்தியமுள்ள நாட்டார் கதைகள் நாவலினூடே நிறைந்துள்ளன.


வேம்பலை கிராமம் பற்றிய சித்திரங்களும், வேம்பர்களின் வாழ்க்கைமுறையும் மிகவும் குறைவாக, அதே சமயம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். வெல்சி துரையால் 42 வேம்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அவர்களில் கூட்டத்திலிருந்து எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாதிருப்பது, தேடிவரும் காவலர்களிடமிருந்து தப்பிக்க நீர் நிரம்பிய கிணற்றுள் மறைந்திருப்பது, ரேகை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் ஊரில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை எரிப்பது என பல சம்பவங்கள் வேம்பர்களின் மன உறுதியைக் காட்டுகின்றன. ஒருவகையில், வேம்பர்களின் அழுத்தமான பாத்திரப்படைப்பு எனக்கு நாவலில் கூறப்படும் ஊமைவேம்பினை நினைவூட்டியது.


வெய்யிலின் உக்கிரத்தை, வறட்சியை, கண்ணீரை, வலியைப் பேசும் நாவலின் ஒரே ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்தது. அது சிங்கிக்கிழவன் தன் வாலிபத்தில் மாட்டுவண்டியை மறித்து களவு செய்ய முயலுமிடம். சிறுமிகளிடமிருந்து அவன் களவு செய்வதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வண்டிக்காரர்கள், தங்கள் நகைகளை வண்டியிலிருக்கும் சிறுமி கழுத்தில் அணிவிப்பதும் அதை தொடர்ந்து நடக்கும் சிறு உரையாடலும் கடும் வெய்யில் பயணத்தில் வாய்க்கப்பெற்ற சிறு நிழல் போன்றவை .(இதற்கிணையான காட்சி எஸ்.ரா. வசனமெழுதிய அவன் இவன் திரைப்படத்திலும் இருக்கும்)


நாவலின் கதை மாந்தருக்கிணையாக இன்னுமொரு பாத்திரமாக வெயில் வார்க்கப்பட்டுள்ள இடங்களும், வெய்யில் குறித்த வர்ணிப்புகளும் இந்நாவலின் கவித்துவம் மிளிருமிடங்கள். உதாரணங்களாக


·         கத்தியை சாணை பிடிப்பது போல, தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது.


·         கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பதுபோல், வெயில் இறுக்கத்துவங்கியது.


·         விரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி போய்க் கொண்டிருந்தது வெயில்.


·         வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா ? சங்கை அறுத்துப்புடுவேன் (சிங்கிக்கிழவன்)


·         கிணற்றுத் தண்ணீரில், வெயில் ஊர்ந்து ஊர்ந்து ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தது.


ஆகிய இடங்களைச் சொல்லலாம்.


வெயிலுக்கு நிரந்தரமாய் வாக்கப்பட்டு, நீரின்றி சபிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கிராமத்தின் சித்திரமும் வேம்பலை கிராமத்துக்கும் பொருந்தும். வரலாற்றின் கொடூரப் பக்கங்களில், கால சூழ்நிலைகளால் மைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக் நேர்ந்துவிட்ட இனக்குழுக்களுல் வேம்பர்களும் உண்டு.

*

கடும் கோடையில் ஓரிரு குடங்கள் நீருக்காக சில கிலோமீட்டர்கள் அலைய நேரிட்ட என்னுடைய பாட்டிமார்கள், கடும் வெயிலில் புழுதி பறக்க விளையாடிய வடுகபாளையம், மணியம்பாளையம் கிராமத்து காடுகள், சூடு பிடித்துக் கொண்டு தூக்கம் தொலைத்த கோடைகால இரவுகள் என என் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தெழச் செய்தது “நெடுங்குருதி”.