title


ஒரு ஆங்கில மேதையும், அன்னை நிலமும்

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள், “புத்தகம் பேசுது” என்கிற தலைப்பில் திரு. பாரதி கிருஷ்ணக்குமார் அவர்கள் கடந்த 2005 ல் ஈரோடு புத்தகத்திருவிழாவில் பேசின CDயை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் படித்ததில், அவருக்கு பிடித்த புத்தகங்களிலிருந்து அவர் மனம் தொட்ட சம்பவங்கள், பொருத்தமான உவமைகள் என (வழக்கம்போல்) மிகக் கச்சிதமான உரை. எனக்கு மிகப் பிடித்த பேச்சாளர் என்பதாலோ என்னவோ, அவர் அன்று சொன்ன புத்தகங்களின் காட்சிகள் அப்படியே ஒரு படம் போல மனதில் ஓடிக்கொண்டிருந்தன. தன்னுடைய ஒட்டு மொத்த உரையிலும் தன் மனம் கவர்ந்த முக்கியமான மூன்று புத்தகங்களைப் பற்றிப் பேசினார். ஒன்று நேரடியான தமிழ்ப் புத்தகம் “ஆழி சூழ் உலகு”; ஏற்கனவே படித்தாகிவிட்டது, அடுத்தது “The Roots” ஆங்கிலப் புத்தகம், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு “ஏழு தலைமுறைகள்” தற்போது Out Of Print என்பதால் அதை ஆங்கிலத்திலேயே படிக்கும் விபரீத முடிவுடன் வாங்கிவிட்டேன். மூன்றாவது புத்தகம்தான் இந்த கதையின் நாயகன் (நானும்தான்). அதுவும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்தான். தமிழ் மொழிபெயர்ப்பின் பெயரை “அன்னை நிலம்” என்று சொன்னார். மூலத்தை எழுதியவர் பெயர் மாமேதை “ஜிங்கிஸ் ஐத்தாவ்”. ஆனால் மூலப்புத்தகத்தின் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் வாங்கும் ஆசை எனக்கு.

இது என்ன பிரமாதம் அதான் எழுத்தாளர் பெயர் தெரியுமே என்றால் இங்குதான் இக்கதையின் முடிச்சு விழுகிறது. நேக்கு ஆங்கிலம் ஓரளவு பேசத் தெரியும். எழுதவும் தெரியும். இருந்தாலும் இந்த spelling தான் எப்பவும் பிரச்சனை பண்ணும். அப்பெல்லாம் Microsoft MSWord dictionary தான் என்னைக் காப்பாற்றும். இதோ இப்ப முந்தின வரில கூட spelling குக்கு ஒரு ”L” மட்டும் போட்டு பின்னர் அருள்மிகு WORDஆண்டவர் கருணையினால்தான் திருத்தினேன். கவனியுங்க இப்பகூட திருந்தினேன் இல்ல திருத்தினேன் மட்டும்தான். அதுமட்டுமில்லாம நம்ம STDய (அதான்ங்க வரலாறு) திரும்பிப் பாத்தா நம்ம ஆங்கிலப்புலமையால ஆட்டத்த விட்டே போனவங்க எண்ணிக்கை எண்ணி மாளாது. இருந்தாலும் சாம்பிளுக்கு இந்த ஒரு கதைய கேளுங்க….

அப்ப நான் கோவை கல்லூரியில MCA படிச்சுட்டு இருந்தேன் (இப்பவரைக்கும் அவ்வளவுதான் படிச்சிருக்கேன் என்பது ”தூள்” காமெடி, நமக்கு அது தேவையில்ல). முதல் Class Test க்கு வீட்ல இருந்து படிச்ச லட்சணம் உடனடியா ஹாஸ்டலில் தஞ்சமடையவைத்தது. அப்பெல்லாம் நைட்டு முழுக்க ஹாஸ்டலில் நடக்கும் Interaction Session (இத ராக்கிங்க்கு எதிர்க்கட்சிகாரங்க சொல்வாங்க) ரொம்ப பயமுருத்தும். விடிய விடிய கொண்டாட்டம்தான் (சீனியர்களுக்கும் மட்டும்). Technical, Communication, GK என கிட்டத்தட்ட VIJAY TV ரேஞ்சுக்கு பல ரவுண்டு உண்டு. அதுல இந்த ”Communication” ரவுண்டுலதான் நாஞ்சொல்லப்போற கத வருது. Communication Round முழுக்க முழுக்க இங்கிலீபீசுதான். தப்பித்தவறிக்கூட தமிழு வந்திடக்கூடாதுன்னு தமிழ் தெரியாத North Indian சீனியர்ஸ்தான் அந்த Room ல இருப்பாங்க. உள்ள போய் மாட்டினா, ஒண்ணா நாம இல்லாட்டி இங்கிலீசு ரெண்டுல ஒண்ணு கதறி அளுவாம அந்த Room கதவு தொறக்காது.

சம்பவத்தன்னிக்கு, அங்க இருந்த ரெண்டு பேரோட கெரகம் நான் அந்த ரூமுக்குள்ளாற போனேன். நம்ம பேவரைட்டி கீரோ கம் டைரக்டர் ”திரு. பாக்கியராஜ்” என்பதால் மண்டபத்துக்குள்ளாற செருப்ப திருடும் பார்வையுடன் அறையில் நுழைந்த என்னை வெவரம் புரியாம Welcomeமின்னாங்க ரெண்டு பேரும். மொத ரவுண்டுலயே என்கூட தஸ் புஸ் இங்கிலீசுல அவங்க பேச நானும் பதிலுக்கு தமிழ அப்படியே இங்கிலீசாக்கி தாளிச்சுவிட்டேன். அடுத்த ரவுண்டு “Writing Test” லதான் அந்த சோகம் நடந்தது. ரவுண்டு ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிசமே அந்த Room கதவு தெறந்தது. கலங்கிய விழிகளுடன் அறையை விட்டு ஓடினது…….. நம்புங்க மக்களே நானில்ல, அவங்க ரெண்டு பேரும்தான். விவகாரம் வேறோண்ணுமில்ல, இருந்த ரெண்டு பேருல ஒருத்தர் பேரு “vaibhav dutt” அதாவது வைபவ் தட். இப்ப அவர் பேர இந்த Google கூட கரெக்டா தந்துடுச்சு. ஆனா அவரு என்னை பாத்து ஸ்டெயிலா Write My Name அப்படிக்கு சொன்னாரு. எம்மேல தப்பில, அவர் பேரு எனக்கு “வேபவ் தட்”ன்னு காதுல கேட்டது. சரி ஆசையா கேட்கிறாரேன்னு எழுதிக்காட்டினதுக்குதான் அவங்க அந்த ஓட்டம் எடுத்தாங்க. அப்படி என் இங்கிலீஸ் writing skillன் உச்சம் தொட்ட படைப்பு அவர் பேருதான். அதுக்கு நான் எழுதின Spelling இதுதான் “WAYBAAV THAT”.

இப்படிப் பின்புலம் கொண்ட நாம கேள்வி ஞானத்த வெச்சு ஒரு ஆங்கில எழுத்தாளர தேடினா என்ன நடக்கும். என்னவெல்லாம் நடக்ககூடாதோ அதுதானே நடக்கும். அதுதான் நடந்தது. “ஜிங்கிஸ் ஐத்தாவ்” என்ற பெயரை என்னுடைய புத்திக்கூர்மையினால் எல்லா permutation combination லயும் போட்டுப் பாத்தும் ஒண்ணும் வேலைக்காவல. நானும் விடக்கூடாதுன்னு ஒரு ரெண்டு மூணு வாரம் “ginkis ithaav”, ”chinkis aithaav”, ” jinkies aithaav”, “ginkees aithaav” அப்படி இப்படின்னு போட்டும் பாத்தேன். Google ம் கடுப்பாகி இவராடான்னு(http://en.wikipedia.org/wiki/Genghis_Khan) கூட கேட்டுச்சு. கட்டக்கடேசீல ரெண்டு பேர் கொண்ட குழு அமைச்சு ரெண்டு மூணு நாளு கேட்டுக் கேட்டு கண்டேபுடுச்சுட்டோம். அதுல பாருங்க நம்ம விதி அவரு பேரு “ஜிங்கிஸ் ஐத்மாத்தாவ்”வாமா (Chinghiz Aitmatov), “ஜிங்கிஸ் ஐத்தாவ்” இல்லியாமாங்க. அல்லாரும் என்னையவே குத்தம் சொன்னாங்க, செரீன்னு மறுக்க ஒருதடவ நம்மளாளு பேசுன CDய கேட்ட அவர்கூட இப்ப கரெக்டா (ஒரு வேள அவரும் Google பாத்து மாத்தியிருப்பாரோ) சொல்லுறார். ஒரே ஒரு சின்ன தப்பு புக்கு பேரு “அன்னை நிலம்” இல்ல, அது “அன்னை வயல்”. ஒருவழியா கோவை NCBH புத்தக நிலையத்தில் ஆசைப்பட்ட மாதிரியே “அன்னை வயல்” வாங்கியாகிவிட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின அந்த புக்கு எப்புடி இருந்தது ? அடுத்த பதிவுல சொல்லுறேன்.

என் பெயர் ராமசேஷன்


நம்மில் பெரும்பாலோனோர்க்கு இந்த அவஸ்த்தை இருக்கும். வேரொன்றுமில்லை, பிறர் நம்மீது கொண்டிருக்கும் எண்ணங்களை காக்க வேண்டி, அவர்கள் நம்மைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் விசயங்கள் யாவையும் உண்மை என்பதை நிருபிக்க வேண்டி நாம் வேஷம் போடுவது. நாய் வேஷம் போடும் போது குரைக்கவும், குரங்கு வேஷம் போடும் போது குட்டிக்கரணம் அடிப்பதும் நமக்கொன்றும் பெரிய பிரச்சினை இல்லை. சிறு வயது முதலே நாம் அதற்கென மிகத்திறமையாக வளர்க்கப்பட்டதால் வேஷமிடுவது குறித்த வெட்கமுமில்லை. ஒருவேளை எப்போதாவது மனசாட்சி உறுமினால் இருக்கவே இருக்கிறது – “Survival of the Fittest”, ஊரோடு ஒத்துவாழ்வதற்கான உபதேசங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாங்கி நெடுநாட்கள் ஆகியிருந்த போதும் மிக சமீபத்தில்தான் ஆதவன் அவர்கள் எழுதிய “என் பெயர் ராமசேஷன்” நாவலை படிக்க நேர்ந்தது. நாவலை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ராமசேஷனின் இளமைகாலங்களின் பதிவு என சுருக்கமாக சொல்லலாம். ஆனால், இந்த நாவலின் ஊடாக ஆதவன் சொல்லியிருக்கும் வாழ்க்கை ராமசேஷனுடையது மட்டுமல்ல. மாறாக பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை. வழியாக வாழ்க்கை எனும் பரமபதத்தில் பிறர்கையில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பகடைக்காய்களின் கதை.

அப்பா, அம்மா, அத்தை, பங்கஜம் மாமி, மாலா, ராவ், பிரேமா, கணக்கு வாத்தியார் என தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்து அதற்குகந்த செயல்பாடுகளால் நிரம்பியது ராமசேஷனின் கல்லூரிக்காலம். தனக்கு, தன் இயல்புக்கு ஒத்துவராதபோதும் தற்காலிக இன்பம் அல்லது பிறரது அன்புக்கு பாத்திரமாக வேண்டி, தன்னைப் பற்றிய பிறரின் கற்பனைகள் சுமந்து அலைகிறான் ராமசேஷன். ஒருகட்டத்தில் வேஷம் அலுத்துப்போய் / அண்மை சலித்துப்போய் வேஷத்தை கலைக்க முற்படும்போதெல்லாம் அவனைப்பற்றிய அவதூறுகள் மட்டுமே எஞ்சுகின்றன. ஒரு கணமும் அல்சேஷனாகவும் சலிப்புற்று ஆதிசேஷனாகவும் என மாறி மாறி வேடிக்கைகாட்டும் ராமசேஷன், வெறுமனே “ராமசேஷனாக” இருப்பது வெகு சொற்பமான தருணங்களிலேயே.



இந்த நாவலின் முதற்பதிப்பு வெளிவந்தது 1980ல். நான் பிறக்கும் முன்பே. ஆனால் இந்த நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் / சம்பவங்கள் யாவையும் எனக்கு என் கல்லூரிக்காலத்தை அதில் நான் பார்த்த நண்பர்களை நினைவூட்டியது. சுற்றியிருக்கும் எல்லோருக்குமான ஒரு வாழ்வை / அடையாளத்தை நாம் வைத்துக்கொண்டு நம்முடையதை நாம் எப்போதும் தொலைத்துக்கொண்டேயிருக்கிறோமோ ?

ஆதவனின் அற்புத மொழியில் சொல்லப்பட்டிருக்கும் ராமஷேசனின் கதை நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

உரையாடல்


ஒவ்வொரு முறையும்
புதிது புதிதாய்
குழந்தையின்
வார்த்தைகள்

உலகத்தின்
ரகசிய கதவுகளை
திறக்கும் சாவிகள்
குழந்தைகளின் பொறுப்பில்….

ஆதிரா


மைதானத்தில்
பெய்து கொண்டிருக்கும் மழையை
பள்ளிச் சிறைக்கம்பியின் பின்னிருந்து
பார்க்கிறாள் ஆதிரா…

அவளுடைய மழையை
களவு செய்து
காத்திருந்தது பெருமரம்…

மழைக்காலம்


பெருமழை…
நனைந்தவன் ஏறினான்
பேருந்திலும் மழை

*

பின்மதிய வெயில்
குடையாய் வந்தது
மழை

*

மழை அம்பு
உடம்பெங்கும்
நீர்க்குருதி

*

வெகு அமைதியாய்
இருந்த இரவுக்கு
இசை தானமிட்டது
மழை

1921• September 11, 2013


ஆசைப் பிள்ளைகளின் அழுகுரல்,
அன்பு மனைவியின் கண்ணீர்,
ஒரு வேளை பட்டினிக்கே
உயிர் போக்கும் கும்பி
மானத்தை ஆடையிலும்
மாண்பை பணத்திலும்
அளவிடும் ஆறறிவு
காக்கை கூட்டம்
இப்படி எத்தனை எத்தனையோ
நியாயங்கள் ஒவ்வொருவருக்கும்…
ஊரோடு ஒத்து வாழ….

அப்படியே அவனுக்கும் ஆனாலும்

எந்நிலையிலும் சமரசம் மறுத்தவன்..
அறிவாசான் ஞானசூரியன்
மூத்தகுடியின் மகாக்கவிஞன்
மரணத்திலும் பிறந்தவன்
மகாக்கவி பாரதி நினைவு தினம் இன்று (September 11, 1921).

பாரதி போற்றுவோம் !
———————
ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

நீ ஒரு காதல் சங்கீதம்-2


பொதுவாக நீ பேசினாலே பாடுவது போலதான் இருக்கும். அதனால்தான் நான் உன்னை பாடச்சொன்னதே இல்லை. இருந்தாலும் என் மனதறிந்து (அதிலொன்றும் வியப்பில்லை) நீயாக பாடுவாய். என்னை, என்னை விட நன்கறிந்தவள் நீ.

 
இதைச் சொல்லாத காதலன் எவனாவது இருப்பானா?

*

“ஏதாவது பாடுடா Please”; நீ எப்போதும் கேட்பவளல்ல… அழைக்கும் முன்னரே மழலை வருவது போலவோ, கண்ணெதிரே விழும் முதல்துளி மழையாவது போலவோ அதிசய நிகழ்வுதான். என்பதால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்லிய பரபரப்படைவேன் நான். அன்றும் அதே பரபரப்புடன் பாடத்துவங்கினேன்….

வீணையடி நீயெனக்கு!
மேவும் விரல் நானுனக்கு!
பூணும்வடம் நீயெனக்கு!
புதுவயிரம் நானுனக்கு!

தேர்ந்த இசைஞானம் கொண்டவன் போன்ற பாவத்துடன் நான் பாட, நீ பாவமாய் கேட்டிருந்தாய்.

பாடல் முடிந்ததும் புருவமுயர்த்தி “எப்படி ?” என்றேன்.

“என்னதான் சொல்லு நீ படிக்கிற அளவுக்கு நல்லா பாடமாட்டேங்கிற…”

“தெரியுதுள்ள.. பின்ன எதுக்கு பாட சொல்லுற” எனக் கோவமாய் கேட்டவனிடம்…

“டேய் லூசு… குழந்தை தத்தக்கா பித்தக்கா-ன்னு பேசுறத ரசிச்சு கேட்குறது பேசறது புரியுதுங்கறதால இல்ல….. புரியுதா ?” என்றாய்.

புரிந்தது.

பேரன்பு வழியும் உன்காதல் என்னைக் கொல்(ள் )லா(ளா )மல் விடாது.

வட்டம்


ஏதோ ஒரு கணத்தில்
ஒருத்தியின் மென் புன்னகை
என் தூக்கத்தை கெடுக்கவல்லது
இப்போதும்

இன்னும் கூட
சுகந்தத்துடன் தடவிப்போகும்
ஏதாவதொரு தாவணியால்
என் மனதில் பூகம்பம்
விளையக்கூடும்

முன் நெற்றி முடிகளை
புறங்கையால் ஒதுக்கி
எவளாவது வீசும் கள்ளப்பார்வை
இன்றும் நெஞ்சில் தீ மூட்டுகிறது

நியாய தர்மங்கள்
விதிமுறைகள் தர்க்கங்கள்
எல்லைகள் என
எதற்குள்ளும் அடங்காமல்
வாதிக்கிறது
என் வாழ்க்கை !

நீ ஒரு காதல் சங்கீதம் – 1


நீ ஒரு காதல் சங்கீதம்… உன்னைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்தவுடன், எனக்குத் தோன்றிய தலைப்பு இது.

நம்முடைய எல்லா சந்திப்புக்கும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாட்டை முணுமுணுத்தபடியேதான் நீ வந்திருக்கிறாய். மட்டுமல்ல, நம்முடைய ரசனை வேறெந்த விசயங்களையும் விட ராஜாவின் பாட்டில்தான் ஒரே மாதிரியானது.

உனக்கு நினைவிருக்கிறதா..? சென்னை திருவான்மியூர் கடற்கரையில், ஒரு மெல்லிய மழைத்தூறலில் என் காதருகே நீ பாடிய “அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…”, மழைத்தூறல்கள் நம்மை நனைக்க உன் மெல்லிய எச்சில் தெறிப்புகள் என் காதை நனைக்க ஒரு சேர இருவரும் சிலிர்த்த கணம். உனக்கு மறந்திருக்காது. இதோ இன்றும் கூட எப்போது மழை வந்தாலும் உடனே சாரல்களுடன் சேர்ந்து உன் பாடலும் என்னை நனைக்கிறது.

இந்த FM வந்தபிறகுதான் உன் முகத்தில் அடிக்கடி நான் குழந்தையை பார்த்தது. எப்போதுமே என் இடது காதில் ஒன்றும் உன் வலது காதில் ஒன்றுமாக ஒரே “hearphone”னில் தான் நாம் பாட்டு கேட்பது. ஒரு முறை கூட நீ இடம் மாறி அமர்ந்ததில்லை. கேட்டால் “அர்த்தனாரீஸ்வரனில் இடப்பக்கம்தான் அம்மைக்கு” என்பாய். ஒரு அரை மணி நேரம் பாட்டு கேட்டால் அதில் எப்படியும் நான்கு பாடல்களாவது இளையராஜா பாடல்களாக இருக்கும். அத்தருணங்களிலெல்லாம் லேசாக கிள்ளி “நம்மாளு” என்றவாறே கண்ணடிப்பாய்.

உன்னைப் பற்றி எழுதுவதற்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பு.. எனக்குத் தெரிந்து இல்லை.

நீ ஒரு காதல் சங்கீதம். ஆம் நீ ஒரு காதல் சங்கீதம்.

சமாதி


நஞ்செய் புஞ்செய்
பாகுபாடில்லாமல்
விளைந்து நிற்கின்றன
எல்லா நிலங்களும்…

மாதம் மும்மாரி
மழைப்பொழிவு தேவையில்லை
காலம் பார்த்து களை பிடுங்கும்
கட்டாயம் ஏதுமில்லை
பூச்சிகொல்லி உரம் தெளித்து
பக்குவப்படுத்தல் பழைய கதை

மகசூல் அறுவடை
எல்லாம் மறந்துபோய்
வெறும் வீடுகளாய்
விளைந்து நிற்கின்றன
“விலை” நிலங்கள்

காய்கறிபோல் கான்கிரீட்டை
உண்ணமுடியாது எனும்
உண்மையை சுமந்து கொண்டு…

ஒரு முட்டாளின் மூன்று கவிதைகள்


1.
உயிர் கசிந்து எழுதப்படும்
ஒவ்வொரு காதல் கவிதையின்
முடிவிலும் அயர்ச்சியுடன்
எண்ணிக்கொள்கிறேன்
கவிதை புரியாத சிலரையும்
என் காதலே புரியாத
உன்னையும்…

2.
நான் எண்ண பேசினாலும்
அதை எண்ணி எண்ணி
சிரிப்பாய்…
அப்படியே கடந்து போனாய்
நான் காதல் சொன்ன
கணத்தையும்

3.
தூக்கம் போர்வையாகி
நகரையே மூடிப்போன
பின்னிரவுப் பொழுதுகளில்
உன் நினைவைப்
போர்த்தி விழித்திருக்கிறேன்….
எல்லாவற்றையும்
தன்னுள் கரைத்து
கரைந்து கொண்டிருக்கிறது
காலம்