title


சூது கவ்வும்

அகலவோ ஆழவோ குறைந்தபட்சம் உழுவதாவது போதும் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். புத்தகங்கள் வாசிப்பதில் என்னுடைய தேர்வென்பது பெரும்பாலும் நண்பர்கள், பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பரிந்துரை சார்ந்தது. அது தவிர தனிப்பட்ட முறையில் விருப்பமான எழுத்தாளர்களின் படைப்புகளும் என்னுடைய பட்டியலில் உண்டு.

நேற்று, திருப்பூரில் நடந்துவரும் 13ஆவது புத்தகத் திருவிழாவுக்கு நானும் கார்த்திக்கும் சென்றிருந்தேன். வழக்கம்போல நான் வாங்கவேண்டிய படைப்புகள் குறித்து ஒரு பட்டியல் வைத்திருந்தேன். கார்த்திக்கு வாங்கவேண்டிய புத்தகங்கள் மற்றும் Activity Books வாங்கி முடித்தபின்னர், ஒவ்வொரு பதிப்பகமாக சென்று வேண்டிய புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். அவ்வகையில் அப்போது நான் இருந்தது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த பதிப்பகங்களுல் ஒன்றாக நான் கருதக்கூடிய பதிப்பகம். அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிய பின்னர், பில் போடுமிடத்தில் இருந்தவரிடம் நான் கேட்டேன்

“ஏங்க, ********* அவரோட கதைகள் தொகுப்பு இருக்குங்களா ?”

அவர் மெல்ல யோசித்தார்; மீண்டுமொருமுறை அவரது பெயரைக் கேட்டார். காரணம் நான் உச்சரித்த பெயர் தமிழ்நாடே கொண்டா(டிய)டும் எழுத்தாளரின் பெயர் போலவே இருந்தது. மீண்டும் எனக்குத்தேவையான எழுத்தாளரின் பெயரை சொல்லிவிட்டு தொடந்தேன்

“இல்லீங்க, நீங்க நெனக்கிறவர் இல்ல; நான் சொல்லுறவர் இப்ப எழுதுவதில்லை. கொஞ்ச காலம் முன்னாடி எழுதினவர். இப்ப இறந்துட்டார்.”

[ஒருவேளை நான் கேட்ட எழுத்தாளர் பற்றி அவரோ அந்த பதிப்பகமோ அறியாமலிருக்கலாம். அல்லது நான் தேடி வந்த எழுத்தாளர் அப்படியொன்றும் உலகை புரட்டிப்போடும் கதைகள் எழுதாமலிருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. அந்த பதிப்பகத்தில் அவர் புத்தகங்கள் இல்லை என்பதை மிக எளிதாக மனம் புண்படாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் அங்கு நடந்தது வேறு]

இப்போது பில் போடுமிடத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து கொஞ்சம் கர்வம் கலந்த தொனியில் சொன்னார்

“நாங்க “Only High Class” எழுத்தாளர்கள் புத்தகங்கள் மட்டும்தான் போடுவோம். நீங்க வேற எங்கயாவது கேட்டுப்பாருங்க”

ஒரு உட்சகட்ட அவமானத்தை அடைந்தவனாக பேச்சற்றவனாக திரும்பினேன். இப்போது எண்ணிப்பார்க்கையில் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது அவரிடம் பதிவு செய்திருக்கவேண்டும் என தோன்றுகிறது. அங்கு தவறவிட்டதை குறைந்தபட்சம் இங்காவது பதிவு செய்ய விரும்பினேன். அவ்வளவே…

“எந்த எழுத்தாளரும் HIGH CLASS, LOW CLASS இல்லை. இன்னும் சொல்லப்போனால் படைப்பாளரிடம் இல்லை அவர் சொன்ன “CLASS” அது இருப்பது படைப்பிடம்தான். அதையும் முடிவு செய்பவர்கள் வாசகர்கள்தான். வாழ்நாள் முழுவதிலும் ஒரே ஒரு படம் எடுத்த ருத்ரய்யா சாகும்போது தமிழின் சிறந்த டைரக்டர்களுல் ஒருவராகத்தான் செத்தார். அச்சில் இல்லாதபோதும், அல்லது CLASS இல்லை என பதிப்பாளர்கள் நிராகரித்தபோதும் வாசகனால் தேடப்பட்டுவரும் படைப்புகள் தமிழில் இன்னமும் உண்டு. ஒரு நாள் அது அவருக்கு புரியும்; புரியாவிட்டாலும் அந்த உண்மை நிற்கும்”

(மீண்டும் பதிவு செய்கிறேன் நான் கேட்ட எழுத்தாளர் / படைப்பு உண்மையில் ஒரு மிகச்சாதாரணமான படைப்பாகக் கூட இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை; அதை அவர் அணுகியமுறைதான் பிரச்சினை.)