இந்த உலகில் எத்தனையோ
தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலும் அதற்கான நியாயத்தை, சிறப்பை தன்னளவில் கொண்டுள்ளன. ஆனால், நானறிந்தவரையில் வேறெவரையும் விட மீனவர்களும்
விவசாயிகளும் தங்கள் தொழில் மீது காட்டும் காதல் மிகப்பெரியது. இன்னும் சொல்லப்போனால்
விவசாயமோ அல்லது மீன் பிடிப்பதோ, தொழில் என்பதையும் தாண்டி வாழ்க்கையாகவே மாறிப்போனவை.
அப்படி விவசாயத்தை மூச்சாகக் கொண்ட, ஒரு ரஷ்ய விவசாய கிராமத்தை அதில் ஒரு குடும்பத்தை
மையமாகக் கொண்டு போரின் கோரமுகத்தை பதிவு செய்திருக்கும் நாவல் “அன்னை வயல்”.
விவசாயத்தையே பிரதானமாகக்
கொண்ட ரஷ்ய கிராமமொன்றின் குழுத்தலைவியாக இருந்த “தல்கோனை”யும் ஒரு வயலும் தங்கள் அனுபவங்களைப்
பகிர்ந்துகொள்வதாக கதை சொல்லப்படுகிறது. உண்மையில் ஒரு நல்ல விவசாயிக்கு, அவர்கள் ஆற்றாமையை
கொட்டிக்கொள்ளவும், ஆனந்தத்தை பகிர்ந்துகொள்ளவும் உற்ற நண்பன் நிலம்தான். அப்படித்தான்
தன்னையும், சுற்றியுள்ளவர்களையும் மறந்து செடி கொடிகளுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்
முதியவர்கள்.
ஒரு அழகான விவசாயக்
குடும்பத்தை உலகப்போர் எப்படி சிதைத்தது என்பதை, தல்கோனை அவளது காதல் கணவன் “ஸுவான்குல்”,
அவர்களது மூன்று மகன்கள் காஸிம், மாஸெல்பேக், ஜைனாக் மற்றும் மூத்த மருமகள் ”அலிமான்”-
இவர்களது வாழ்வின் மூலமாக பதிவு செய்திருக்கிறார் திரு, சிங்கிஸ் ஐத்மாத்தவ். தல்கோனை
இளவயதில் ஒரு நிலப்பிரபுவிடம் கூலி வேலை செய்யும்போது, அவளைப்போலவே கூலிவேலை செய்யும்
ஸுவான்குல் மீது காதல் கொண்டு மணம் புரிந்துகொள்கிறாள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட
அற்புதக்காதல். சாட்சியாக மூன்று மகன்கள். கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி,
தன்பகுதி விவசாய கூட்டுப்பண்ணையின் தலைவனாகிறான் ஸுவான்குல். மூத்த மகன் காஸிம் விவசாயத்தின்
மீது பற்றுக்கொண்டு அறுவடை இயந்திர ஓட்டியாகிறான். அவனது காதல் மனைவி அலிமான். இரண்டாவது
மகன் மாஸெல்பேக் - ஆசிரியராகும் வேட்கை கொண்ட சிறந்த படிப்பாளி. கடைசி மகன் ஜைனாக்
அந்தப்பகுதியின் இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளர்.
இப்படி நல்லவிதமாக
சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் போரின் பெயரால் அடுத்தடுத்து இன்னல்கள் வந்து சேர்கின்றன.
பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, சோவியத் நடத்திய போரில் தங்கள் பங்களிப்பை
செலுத்த, நாட்டிலுள்ள எல்லா ஆண்மகன்களுக்கும் படிப்படியாக அழைப்புவருகின்றது. முதலில்
காஸிம்முக்கு. ஊரே கூடி கண்ணீருடன் அவனை வழியனுப்பி வைக்கிறார்கள். படிக்கப்போன இடத்தில்
மாஸெல்பேக்கும் படையில் சேர்க்கப்படுகிறான். அவனைத்தொடர்ந்து, ஒருநாள் ”ஸுவான்குல்”க்கும்
அழைப்பு வருகிறது. மிச்சமுள்ள ஒரே மகன் ”ஜைனாக்”, தானே வலியப்போய் படையில் சேர்ந்துகொள்கிறான்.
”ஸுவான்குல்”க்கு பிறகு தலைமைப்பொறுப்பேற்கிறாள் தல்கோனை. வீட்டிலிருந்த நான்கு ஆண்மகன்களும்
போருக்கு சென்றுவிட, அவர்களைப் பற்றிய எந்த செய்தியும் தெரியாத வலியை, வேதனையை மறக்க
அவளுக்கு இருந்தது இரண்டு ஆறுதல்கள்.
ஒன்று குழுத்தலைமைப்
பொறுப்பு, பொதுவாக, தலைமைப்பொறுப்பு சவாலானது. அதிலும் போர்க்காலங்களில், இதுபோன்ற
குழுத்தலைமை பொறுப்பு மிகவும் கடினமானது. ஆனால்,
தல்கோனை தன்னுடைய பொறுப்புகளின் வாயிலாகவே தன் துயரை மட்டுப்படுத்திக்கொண்டாள்.
எவ்வித சமரசமுமில்லாமல் தேர்ந்தமுறையில் தன் கடமையைச் செய்தாள்.
அவளுக்கிருந்த
இரண்டாவது ஆறுதல் அலிமான். என்னதான் மருமகள் என்றாலும் சந்தித்த முதல் நாளிலேயே அவளிடம்
தல்கோனைக்கு பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. அலிமானும் தல்கோனையை தன் தாயாகவே பாவிக்கின்றாள்.
இந்த நாவலில், இவர்களுக்கிடையேயான உறவு, அன்பின் மகத்துவத்தை பேசும் அத்தியாயம். காஸிம்
இறந்த பின்பு அலிமானுக்கு மறுமணம் செய்ய தல்கோனை எண்ணுவதும், பின்பு வேறொருனுவன் மூலமாக
அலிமான் கர்ப்பமடையும் போதும், இறுதியாக பிரசவத்தில் அலிமான் இறந்தபின்பு, அவளது மகனை
தன் சொந்த பேரனாக வளர்ப்பதும் என எல்லோரையும் இழந்துவிட்ட தல்கோனையின் பெரிய சொந்தமாக
இருந்தது அலிமான்தான்.
இறுதியாக ஒரு நாள்
போர் முடிவுக்கு வந்தபின்னர், மெல்ல மெல்ல கிராமமும் தன் இயல்புக்கு திரும்புகிறது.
நாளடைவில் தல்கோனை மூப்படைந்து தன் இறுதி நாளுக்காக காத்திருப்பதாக கதை முடிகிறது.
போரின் வலியை நேரடியாக இல்லாமல், அதனால் பாதிக்கப்படும் சாமானியர்கள் வாழ்வினூடாக சிறப்பாக
பதிவு செய்திருக்கிறார் திரு. சிங்கிஸ் ஐத்மாத்தவ். நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டதைப்
போல சிறந்த மொழிபெயர்ப்பு (தமிழில்: பூ. சோமசுந்தரம்.).
ஒரு விவசாயினுடைய
காதலில், சோகத்தில், களிப்பில் என எல்லாவற்றிலும்
பங்கெடுத்துக்கொள்வது நிலம். அதுவே “அன்னை வயல்”
அன்னை வயல்
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
(த: பூ. சோமசுந்தரம்.)
பதிப்பாளர் :
NCBH விலை : 85