title


வாழ்வில் நூறானந்தம் - 1

வாழ்வில் நூறானந்தம்

”தந்தானானே தானானே ஆனந்தமே…
தந்தானானே தானானே ஆனந்தமே…”

மிக மெல்லிய இசையுடன் துவங்கும் இந்த வரிகளை கேட்குந்தோறும் ஒரு கனவு வாழ்க்கையின் சித்திரம் என் மனதில் எழும். இந்தப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான சம்பவம் இப்போதும் நினைவில் நிற்கிறது. அப்பாவுடன் அனு அக்காவும் நானும் ஒரு விழாவுக்காக கோவை சென்றிருந்தோம். ஊருக்கு திரும்பும் வழியில் பொருட்கள் வாங்குவதற்காக டவுன் ஹாலில் இறங்கினபோது, அக்காவுக்கு பிடித்த சைடு கிளிப்பை டவுன் ஹாலில் இருந்த எல்லா பேன்சி கடைகளிலும் தேடி, ஒரு வழியாய் வாங்கி கடைசி பஸ்ஸில்தான் பூண்டி வந்தோம். இந்த மாதிரியான விசயங்களில் அப்பா எப்போதும் இப்படி மெனக்கெடுபவர் இல்லை. ( அதே நாளில் நான் கேட்ட ரப்பர் பந்துக்கு அப்பா காட்டிய Reaction அதற்கு ஒரு உதாரணம்). வீட்டுக்கு வந்து துக்கமும் தூக்கமுமாக நான் பார்த்த பாடல் இந்தியன் திரைப்படத்தில் வரும் “பச்சைக்கிளிகள் தோளோடு”. அந்தப்பாடலில் கப்பல் விடும் காகிதங்கள் தீர்ந்து போய் அழும் மகளை சமாதானப்படுத்த, தகப்பன் தன் சட்டைப்பையிலிருக்கும் பணத்தில் கப்பல் செய்து விடும் காட்சியில் நான் அன்னிச்சையாய் திரும்பிப் பார்த்தேன். அக்கா தூங்கிக் கொண்டிருந்தாள்.

பின் எப்போது அந்தப்பாடலை கேட்டாலும் என் மனதில் கோவை டவுன் ஹாலில் நாங்கள் சுற்றிய அந்த இரவுதான் நினைவில் எழும். நாளாக நாளாக பாடல் வரிகளின் அழகிற்காய் அந்தப்பாடல் மனதில் நிலைத்துவிட்டது. சில வாரங்கள் முன்பு, அந்தப்பாடலை பார்த்துவிட்டு, நான் Shaving செய்து கொண்டிருக்கும் போது “கிருத்திகா” (அந்தப்பாடலில் வரும் கஸ்தூரியை நகலெடுத்து) எனக்கு Shaving செய்ய முயன்றது சமீபத்திய கவிதை. என் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்புவதும் எனக்கான வாழ்வும் இதுதான் - “உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம்”

https://www.youtube.com/watch?v=HcLjkBdzunY

**

”நானெல்லாம் படம் வந்தப்பவே பார்த்தாச்சு….”
“என்னண்ணா, காந்தி செத்தாச்சா? ன்னு கேட்கறமாதிரி கேட்கறீங்க…”
“யோவ் சும்மா புளுகாத நீயெல்லாம் எப்பயோ பாத்திருப்ப”

ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான கேள்விகளால் (கேலிகளால் ??) என்னை கேவலப்படுத்திக்கொண்டிருந்தது “Rab Ne Bana Di Jodi” என்ற ஹிந்திப்படம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது. 2008ல் வெளிவந்த படத்தை சொல்லிவைத்த மாதிரி என்னைத்தவிர எல்லோரும் பார்த்திருந்தார்கள். எனக்கு ஆங்கிலமே அரைகுறை; ஹிந்தி அத்தனையுமே குறை என்ற வரலாறை சொல்லியும் அதான் சப்டைட்டில் இருக்கே என விடாது கறுப்பாய் வந்து விழுந்தன கேள்விகள். சரி இனி அந்த இந்தியை கடவுள்தான் காப்பாத்தணும் என குலதெய்வம் மீது பாரத்தை போட்டுவிட்டு ஒரு வழியாய் சென்ற வாரத்தில் அந்தப்படம் பார்த்து முடித்தேன். இதோ இந்த வாரம் மீண்டும் ஒரு முறை பார்த்தாகிவிட்டது. மிகவும் இலகுவான கதைதான் ஆனால் அதை சொன்ன விதத்தில் இருக்கிறது மேஜிக்.

தன் ஆசிரியருடைய பெண்ணின் (அனுஷ்கா ஷர்மா) காதல் திருமணத்துக்கு செல்லும் ஷாருக் மணப்பெண்ணை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஒரு தவிர்க்க இயலா சூழ்நிலையில் அந்தப்பெண்ணையே திருமணமும் செய்துகொள்கிறார். இழந்த காதலின் வலியால் கணவன் மீது எந்த விருப்பும் இல்லாத அனுஷ்காவுக்கு, மனம் நிறைந்த காதலை வெளிக்காட்ட இயலாமல் தவிக்கும் ஷாருக்மீது எப்படி காதல் வருகிறது என்பதுதான் (மிகசுருக்கமான)கதை. ஆண்-பெண் உறவுகளின் சிக்கலை, காதல் மலரும் நுட்பத்தை கொஞ்சம் சறுக்கினாலும் தவறாகிவிடும் திரைக்கதையில் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா சோப்ரா. மிகவும் சிம்பிளான ஒரு Romantic படம்தான். அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது.

சிம்பிளா இருந்தாலும் காதல் க்ரேட்தானே :)
**
”அய்யா நாஞ்சில் நாடனே… நீயிருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குகிறேன்” முன்னொருமுறை படித்த புத்தகத்தின் அந்த வரிகள் இன்றும் மனதில் நங்கூரமாய் இருக்கிறது. தான் இலக்கில்லாமல் ஒரு உதவாக்கரையாய் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் தான் வாசித்த ஒரு சிறுகதை தனக்கேற்படுத்திய அதிர்வுகள் குறித்த இயக்குனர் திரு.பாலா அவர்களின் பதிவுதான் அது. புத்தகத்தின் பெயர் “இவன்தான் பாலா”.

பிறந்த நாள் தொட்டு எவ்வித அறிவுரைக்கோ, அன்பிற்கோ செவி சாய்க்காமல் இருந்த ஒரு முரட்டு மனிதனின் வாழ்வை மாற்றிடும் முதல் அடியை திரு.நாஞ்சில் நாடன் எடுத்துக்கொடுத்தது தன்னுடைய “இடலாக்குடி ராசா” சிறுகதை மூலமாக.

மனவளர்ச்சி குன்றிப்போன ராசாக்கு இடலாக்குடி ஒன்றும் சொந்த ஊரல்ல; அவனுக்கு சொந்த பந்தம் கூட யாருமில்லை. தன் வயிற்றுப்பசிக்கு ஊரார் அன்பை வேண்டி நிற்கும் ஒரு ஜீவன். எப்போதும் பழைய சோறோ, பழங்கஞ்சியோ மட்டுமே உண்ணக் கிடைக்கும் ராசாவுக்கு ஒரு கல்யாண விருந்தில் இடம் கிடைக்கிறது. அந்நிலையிலும் தன் சுயம் விட்டுத்தராதவனாக சித்தரிக்கப்படும் ராசாவின் கதையை நீங்கள் “நாஞ்சில் நாடனின்” சொற்களில் வாசிக்க வேண்டும்; அது ஒரு அற்புதம்.

http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_21.html

ஒரு கதையின் வலிமைக்கு, இலக்கியத்தின் வலிமைக்கு உதாரண சிறுகதைதான் “இடலாக்குடி ராசா” ( நாஞ்சில் நாடன் கதைகள் முழுத்தொகுப்பு - தமிழினி பதிப்பகம். )

No comments: