அன்பின் ஆதிரா,
இந்தக் கடிதத்தை
எப்படித்துவக்குவது என்றே அறியாமல் துவக்குகிறேன். நீ என்னை தவிர்ப்பதாய் உணர்ந்த கணத்தில்
விழுந்தது இந்த கடிதத்திற்கான வித்து.
என்னையறியாமல்
நான் சேமித்து வைத்துக் கொண்ட நினைவுகள், ஞாபக அடுக்கிலிருந்து ஒவ்வொரு கணமும் மீண்டெழுகின்றன.
ஒற்றை ஆயுளுக்கான ஒட்டுமொத்த சுமையையும் இப்போது உணர்கிறேன். இதில் உன் பிழையென்று
எதுவுமில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இது நான் விரும்பிச்செய்த பிழையல்ல
என்பதும். என்றாலும், இந்தப் பிழைக்கு தண்டனை நீ என்னை தள்ளிவைப்பது என்றால் அந்த வலியை
அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லாதவன் நான்.
உன் அருகாமையை
யாசிக்க எந்த ஒரு உரிமையும் அருகதையும் எனக்கில்லை என்பதை நான் நன்கறிவேன். அதைப் போலத்தான்
உன்னுடைய கனவு வாழ்க்கையில் கல்லெறிவது எவ்விதத்திலும் அறமல்ல என்பதும். என்ன செய்ய,
புத்திக்கு புரியும் எல்லாமும் மனதுக்கும் புரிந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் சந்தோசமாய்
இருந்திருப்பேன். ஒன்று மட்டும் நிச்சயம், என்னை விட்டு நீ விலகி விலகிச் செல்லும்
ஒவ்வொரு அடியிலும், மேலும் மேலும் நினைவால் சூழ்கிறாய்.
உனக்கே தெரியும்,
என்னுடைய இந்த வலியை, என்னுடைய சுமையை உன்னையன்றி வேறு யாரிடமும் என்னால் பகிர்ந்து
கொள்ளக் கூட முடியாது. நள்ளிரவில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும்போது பாதையை
மறைக்கும் கண்ணீர் துளிகளுடன் பயணம் செய்த அனுபவம் உனக்கிருக்கிறதா ? நேற்று வரை எனக்கும்
அந்த அனுபவம் இல்லை.
உன்னிடமிருந்து
எனக்கான சில சொற்களை எதிர்பார்த்து எதிர்பார்த்தே ஏமாறுகின்றேன் ஒவ்வொரு நாளும். ஒரு
எளிய மனதின் அன்பை புரிந்துகொள் என்பதை மட்டுமே உன்னிடம் சொல்ல எண்ணுகிறேன். இந்தக்கடிதத்தின்
ஒரு சில சொற்களாவது (என்னைப் போல் இல்லாமல்) உன் காலடி அடையும் என்ற நம்பிக்கையுடன்….
- நான்.