title


முள்

பிதுங்கி வழியும் பேருந்தில்
வியர்வை ஆற்றின் மத்தியிலும்

அனலடிக்கும் காற்றில்
நெடுந்தூரம் நடக்கும் போதும்

ஏன்
சமயங்களில் மயான வெளிகளில் கூட

ஒரு குழந்தை
பொம்மையை சுமப்பது போல...

முடியாவிட்டாலும்
சுமந்து கொண்டே திரிகிறேன்

தன்னைத் தான் மட்டுமே
அழிக்கவல்ல “பஸ்மாசுரன்”

காமம்

ஒரு கண்ணாடியின் கதை

யார் வந்து முன்நின்றாலும்
பாவக்கணக்குப்படி பிம்பம் காட்டும்
அது மாயக்கண்ணாடி…

ஒரு அரசியல்வாதி
அடுத்து ஒரு கல்வித்தந்தை
ஒரு தொழிலதிபர்
தொடர்ந்து ஒரு மருத்துவர்

மாறி மாறி நின்று பார்க்க

சுனாமிப் பேரலைகள்
ஓநாய்க்கூட்டம்
காட்டேரிகள்
மட்டுமின்றி எரிமலைகள்

என காட்டிக் காட்டி
களைத்துப்போனது கண்ணாடியும்…

கடைசியாக
தன்பலன் பார்க்க வந்தார்
கடவுளும்…

வெடித்துச் சிதறியது
கண்ணாடி!

சுழியம்

எந்தவொரு
மூடப்பட்ட கதவினையும்
உச்சகட்ட எச்சரிக்கையுடனே
திறக்கிறேன்

எதிர்பாரா ஏதேனும்
நிகழக்கூடுமென

எல்லாமுறையும்
ஏமாறுகிறேன்
எதிர்பாரா நிகழ்வினால்.

கனவாய்ப் பழங்கதையாய்

காலங்காலமாய்
புனைந்துகொண்டேயிருந்த
கதைசொல்லி பாட்டியின்
வாய் போலவே
என் காதலும்

அனுபவிக்க ஆளில்லாவிட்டாலும்
ஊற்றெடுக்கிறது
அதன் போக்கில்

***

ஆகச் சிறந்த
ஆழ்முத்தத்தில் கூட
எச்சில் தவிர்க்கும்
நாசூக்குக்காரி நீ !

அதனால்தான் கடந்தாய்
கண்ணீர்த்துளிகளை
வெறும் உப்புநீர் என…

சுழற்சி

மொழியின் சாத்தியங்கள்
நீர்த்துப்போய்
குறியீடுகள் ஆள்கின்றன

அழுகை, சிரிப்பு
அவமதிப்பு, பெருமை
பசி, பரிதவிப்பு
கோபம், நிராகரிப்பு …

எல்லா உணர்வுகளும்
வெறும் குறியீடுகளாய்

குறியீடுகளும் கசந்து போன
ஒரு நன்நாளில்
ஆதி மொழி மீண்டும்
அரியணையில்

மௌனம்!