*
கண்டுபிடிப்புகள்
நமக்குத் தரும் கிளர்ச்சிகள் சொல்லில் அடங்காதவை. எந்த ஒரு புது விசயத்தை அறிய நேரிடும்
போதும், இதெல்லாம் நான் பாக்காததா எனும் பெரிய மனுசன் பாவனை பூண்டாலும் கூட, உள்ளூறும்
நம் பால்யத்தின் குறுகுறுப்பை எவ்வயதிலும் மீட்டுத்தர வல்லவை கண்டுபிடிப்புகள். கண்டுபிடிப்புகளிலும்
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகள்
சுவாரசியம் மிக்கவை. அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு கிராமத்தில் முதன் முதலில்
நுழைவதை அம்மக்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றிய கட்டுரைகள் என்றுதான் “ஆதிமங்கலத்து
விசேஷங்கள்” தொகுப்பைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சுருக்கிச் சொல்லுவதைத்
தடுப்பது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் விதம். எழுத்தில் துருத்திக்கொண்டிராமல் அதன்
போக்கிலேயே தொடர்ந்து வரும் பகடி. இவ்வகை கட்டுரைகளில் எதிர்பார்க்கக்கூடிய பகடித்தன்மையை
இன்னும் சிறப்பாக்கியிருப்பது திரு.”க.சீ.சிவகுமார்” அவர்களின் மொழி.
*
அஞ்சலகப் பணியாளர்
“Particulat Person” என்பதைச் சுட்ட “இதோ நீங்க தேடின பீப்பீ பக்கத்துலதான் இருக்கார்”
எனச்சொல்லி ரிஸீவரை நீட்ட, தனக்கு போன் வந்த அதிர்ச்சியைக் காட்டிலும், படித்த அதிகாரியே
தன்னை ”பீப்பீ” என கிண்டல் செய்வதாக எண்ணிக் கலங்கிய நாதஸ்வர வித்வானின் கதை “டெலிபோன்”
பிறந்த காலத்தில் வருவது.
புதிதாய் வாங்கிய
டார்ச்லைட்டின் பேட்டரி, ஊர் முழுக்க பந்தாக்காட்டியே தீர்ந்து போக, பேட்டரியை வெய்யிலில்
காயவைத்து சார்ஜ் ஏற்ற முற்பட்டதைக் கூட சகித்துக்கொள்ளலாம். அடுத்தகட்ட வளர்ச்சியாக,
பல்ப் ஹோல்டரில் பேட்டரியை நுழைத்து சார்ஜ் ஏற்றச் செய்த முயற்சி நமக்கே ஷாக் அடிப்பது.
படாத பாடு பட்டு,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லோன் வாங்குகிறார் சிவலிங்கம். லோன் தொகையைத் தந்த அதிகாரி
“மாச மாசம் கரெக்ட்டா கட்டீருங்க சார்” என்க, காசு கைக்கு வந்தபின் சிவலிங்கம் சொன்ன
குசும்பான பதில் “மாச மாசம் கரெக்டா கட்டுறதுன்னா நான் ஃபைனான்ஸ்லயே வாங்கியிருப்பேனே,
உங்ககிட்ட எதுக்கு வர்றேன் ?”.
”சிரிச்சா கொஞ்சம்
வயசு கூடுதலா தெரியுது” என பெண் பார்த்து வந்த அண்ணன் திருமணத்துக்குத் தயங்க, ”சல்வார்
போட்டா வயசு கொறஞ்சிடும் என்றும், நம்மூட்டுக்கு வந்தா, சிரிக்கவா போகுது” என்றும்
துணிந்து கல்யாணம் கட்ட வைத்த தனசேகர்கள் கிராமத்து கிராமம் உண்டுதானே. என்றாலும் தன்
பெயரை மைக்செட் குழாயில் கேட்க விரும்பி, திரும்பத் திரும்ப காணாமல் போனவர்கள் அறிவிப்பில்
தன் பெயரை தானே சொன்ன “குளிப்பட்டி சுப்பிரமணி” கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்.
*
இவையெல்லாம் ஆதிமங்கலத்து விசேஷங்களின் துளிக்கூண்டு சாம்பிள்கள்தான். முழுக்கதையும் அதன் சுவாரசியங்களும் , இவற்றுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.
*
கட்டுரை சுட்டும்
மனிதர்களும் ஆதிமங்கலம் கிராமமும் (புனைவுதான் என்றபோதும்), நம் கிராமங்களையும் அதன்
மனிதர்களையும் நினைவுபடுத்துகின்றது. இதனால் இப்புத்தகத்துடன் நம்மால் வெகு சுலபமாக
ஒன்றிப்போக முடிகிறது. நிரந்தரமான மெல்லிய புன்னகைகளும், எதிர்பாரா வெடிச் சிரிப்புகளுமாக
புத்தகத்தை படித்து முடித்ததும், ஒரு மென்சோகம் மனதில் படர்ந்தது. மறைந்த க.சீ.சிவகுமார்
குறித்த பதிவுகள் நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம். குறிப்பாக செவேந்திரன் அண்ணனின்
உறைப்புளி (http://kaleeswarantk.blogspot.com/2020/05/blog-post.html) நூலில் எழுதப்பட்ட கட்டுரை. சோகத்துடன்
புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் க.சீ.சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்தேன்,
அதனருகில் புத்தகத்திலிருந்து சில பத்திகள் அச்சிடப்பட்டிருந்தன. புன்னகை எழுந்தது.
கலைஞனுக்கு மரணம் விதிக்கப்படவில்லை.
*
ஆதிமங்கலத்து விசேசங்கள்
– க.சீ.சிவகுமார் – டிஸ்கவரி புக் பேலஸ்