ஆசான்
திரு.ஜெயமோகன் அவர்களுடைய “அலை
அறிந்தது” எனும்
கதையில் வரும் அத்தர்பாய், வாழ்க்கையைப்
பற்றி ஒரு வரி சொல்லுவார் “அலை
ஏறினா, இறங்கித்தானே
ஆகணும்” என்று.
இதையே “வாழ்க்கை
ஒரு வட்டம்” என
எளிமைப்படுத்த முடியும். அந்த வட்டத்தின் மையம் “அபத்தம்”.
*
ப.சிங்காரம்
எனும் ஆளுமை ஒரு பெயராக என்னை வந்தடைந்து ஏறத்தாழ 7 வருடங்கள் இருக்கும்.
தொடர்ந்து, இலக்கிய
உரைகளிலும், இலக்கியக்
கட்டுரைகளிலும் தவறாமல் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக அவருடைய “புயலிலே ஒரு தோணி” நாவல் இருக்கிறது.
அத்தகைய கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும் மன எழுச்சியுடன்
புயலிலே ஒரு தோணி நாவலை வாசிக்கத் தொடங்குவேன். ஓரிரு அத்தியாயங்கள் கடக்கும்
முன்பே, நாவலின்
உள்ளே நுழைய முடியாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு புத்தகங்களை படிக்கத்
தொடங்கியிருக்கிறேன். இந்நாவலை இம்முறை ஈடுபாட்டுடன் என்னால் வாசிக்க முடிந்ததற்கு
சொல்முகம் வாசகர் கூடுகை மட்டுமே காரணம். அதற்கு என்னுடைய நன்றிகள்
*
தொட்டனைத்
தூறும் கேணியாகவே இருந்தாலும் நாம் கொள்ளும் அளவு நம்முடைய கலனை மட்டுமே
பொருத்தது. அந்தப் புரிதலுடன் என்னுடைய வாசிப்பு
சார்ந்து புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் இரு நாவல்களைப் பற்றிய
என்னுடைய அவதானிப்புகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்
*
புயலிலே
ஒரு தோணி, கடலுக்கு
அப்பால் இரண்டும் இரு நாவல்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பனுபவத்தில் இரு
நாவல்களையும் ஒரே நேர்கோட்டில் நம்மால் வைக்க முடியும். குறிப்பாக ”கடலுக்கு அப்பால்” நாவலை, ”புயலிலே ஒரு தோணி” நாவலின் நீட்சியாக – காலம் மற்றும்
கதாப்பாத்திரங்களை முன்வைத்துச் சொல்ல முடியும்.
இந்தோனேஷியாவை
கைப்பற்றும் ஜப்பான் துருப்புகள் மெடான் நகரில் நுழையும் சித்திரத்துடன் துவங்கும்
”புயலிலே
ஒரு தோணி” நாவல், (பாண்டியன் எனும்
கதாபாத்திரத்தின் மூலமாக) பினாங்கு, ஐ.என்.ஏ என
சொல்லப்படும் இந்திய தேசிய ராணுவம், அதன் செயல்பாடுகள், நேதாஜி, போர்ச் சித்திரங்கள், ஜப்பானின் பின்னடைவு, அதன் விளைவுகள், பாங்காக் பின்னர்
மீண்டும் பினாங்கில் இருந்து மெடான் நகருக்கு வந்து முடிகிறது. இரண்டாம்
உலகப்போரின் முடிவுக்குப் பின்னான வாழ்க்கையை, போர் ஒரு தனி மனிதனின்
வாழ்க்கையில் ஏற்படுத்தும் தழும்புகளை ஒரு காதல் கதையின் ஊடே பதிவு செய்கிறது ”கடலுக்கு அப்பால்”.
*
இவ்விரு
நாவல்களின் சிறப்புகளுல் ஒன்று, அவற்றின் கூறுமுறை.
நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களை மற்றும் விரித்தெழுத சாத்தியம் கொண்ட பல
தருணங்களை சின்னச் சின்ன சித்தரிப்புகள் அல்லது ஓரிரு பத்திகளில் சொல்லிச்
செல்கிறார் திரு.சிங்காரம். ஒருவகையில், அது வாசகனின்
கற்பனைக்கு பெரும் இடம் தருகிறது என்றாலும், சில இடங்களில் இந்தச்
சிக்கனமே கஞ்சத்தனமாகிவிடுகிறது. செட்டி வீதி குறித்த சித்திரங்கள், பாண்டியன் மற்றும்
ஆவன்னா பாத்திரங்களின் நினைவுகள் மூலமாகவே மதுரை, சின்ன மங்கலம்
வாழ்க்கையை மீள்கட்டமைப்பு செய்வது, சில பக்கங்களுக்காவது
வர்ணிக்கச் சாத்தியமுள்ள கடற்புயலை ஓரிரு பத்திகளிலேயே கடப்பது உள்ளிட்ட சில
உதாரணங்கள் நம்மால் விரித்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவை. அதைப் போலவே,
“ரோல்ஸ்ராய்ஸ்” லாயர் டில்டன், “விடாக்கண்டன்” செட்டி போன்ற
பெயர்களும். அதேசமயம், இக்கூறுமுறையின்
போதாமையினாலேயே, “பாண்டியன்” எனும் பாத்திரப்
படைப்பின் வீரதீரச் செயல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
*
”புயலிலே
ஒரு தோணி” நாவலின்
பாண்டியன் கதாப்பாத்திரத்துக்குக்கும், ”கடலுக்கு அப்பால்” செல்லையாவுக்கும்
மெல்லிய இணைப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒருவகையில் செல்லையா, பாண்டியனின் நீட்சி.
போர்ச்சூழலில் இருந்து அன்றாடத்துக்கு திரும்பும் தருணத்தில் இறந்துபோன பாண்டியன்
இழந்தது என்ன என்பதை ”செல்லையா”வைக் கொண்டு நம்மால்
ஊகிக்கமுடியும். லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பும் வீரனின் பெருமை, மதிப்பிழந்து போன
ஜப்பான் ரூபாய் நோட்டுகளுக்கு இணை சொல்லத்தக்கது.
*
மெடான்
நகரில் தங்கையா மற்றும் தில்லைமுத்துவுடனும், பினாங்கு நகரத்தில்
அருளானந்த அடிகள், மாணிக்கம்
உள்ளிட்டோருடனும் நடக்கும் விவாதங்களில் தமிழரின் பெருமை, வீரம், இலக்கியச் செழுமை
ஆகியவை தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தும் பாண்டியனின் தருக்கம் “கிணற்றுத் தவளை”யாய் இருப்பதன்
எல்லைகளைக் காட்டுகிறது. போலவே, ராணுவப் பயிற்சி
முகாமில் நடைபெறும் அசைவ உணவு சார்ந்த விவாதமும், அதற்கென பாண்டியன்
சுட்டிக்காட்டும் பாடல்களும். மேஜர் டில்டனுடன் தேசியம் பற்றிய விவாதம் எழும்போது, தன்னுடைய பாட்டனார்
காலம் தொட்டே இந்தோனேசியாவில் பிறந்து வளர்ந்த போதும், மேஜருக்குள்ளிருக்கும்
டச்சுப் பாசத்தை தன்னுடைய கேள்வி மூலம் பாண்டியன் வெளிக்கொணரும் இடம் காட்டுவது, மனித மனதின்
புரிந்துகொள்ளமுடியாத ஆழத்தை.
*
போதையிலிருக்கும்
பாண்டியன், பட்டினத்தார்
உள்ளிட்டோரை பார்ப்பது, அவர்களுடனான
உரையாடல், சங்கப்பாடல்களையே
சான்றாகக் கொண்டு தமிழர் பெருமையை, தமிழ் மன்னர்கள்
பெருமையை உடைத்தெறியும் பாண்டியனின் வாதங்கள், தொலைந்துபோன முக்கியமான
கடிதம் குறிந்து பாண்டியன் மற்றும் கலிக்குஸீமான் இடையே நடக்கும் பேச்சில் வரும் “ஜெனரல் சிவநாத்ராய்” குறிந்த சித்தரிப்புகள், மாணிக்கத்துக்கும்
செல்லையாவுக்கும் ”கடலுக்கு
அப்பால்” நாவலில்
வரும் ”சிலப்பதிகாரம்” சார்ந்த உரையாடல் என
இவ்விரு நாவல்களிலும் (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்)மெல்லிய அங்கதம் / பகடி
நிறைந்திருந்தாலும், உண்மையில், இந்நாவல்கள் நமக்குக்
காட்டுவது அபத்தங்களை.
*
உதாரணமாக
இரு சம்பவங்களைச் சொல்லலாம்
கடலுக்கு
அப்பால் நாவலில், தன்
உயிரைப் பணயம் வைத்து “வானாயீனா” செட்டியாரின் மகன் உடலை
மீட்டு வருகிறான் செல்லையா. தன் மகன் வடிவேலுவின் இடத்தில் செல்லையாவைக்
கருதுகிறார் செட்டியார். செட்டியாரின் மகள் மரகதம், மனைவி காமாட்சியம்மாள், வேலைக்காரர்கள் என
யாவரும் செல்லையாவைப் போற்றுகின்றவர்கள். என்றபோதும், போரும், போரினால் செல்லையா
கொள்ளும் ”நிமிர்வு”ம் அவனை “பொம்பளைத்தொழில்” வட்டித்தொழிலில்
இருந்து வெளியே தள்ளுகின்றன. தன் முழு வாழ்வின் பலனாக தன் தொழிலைக் கருதும் செட்டியார், அதன் பொருட்டே மரகதத்தை
“செல்லையா”வுக்கு மணம்முடிக்க
மறுக்கிறார். “புயலிலே
ஒரு தோணி”யில்
அப்துல் காதர் மூலமாக, மரகதத்தின்
மாப்பிள்ளையாகவே அறிமுகமாகும் செல்லையா, ஒரு போதும் அந்த நிலையை
அடைய முடியாமல் போவது காலத்தின் குரூரம்.
”புயலிலே
ஒரு தோணி”யில், அர்மீனியா ஆற்றில் மணல்
அள்ளும் டச்சுக் கைதிகளுக்கிடையே இருக்கும் “ரோல்ஸ்ராய்ஸ்” லாயட் டில்டன், தனக்கு உணவு தந்த
பாண்டியனை நீடுவாழ வாழ்த்துகிறார், மட்டுமின்றி அவர்
குடும்பத்து பெண்ணுக்கு தீங்கிழைத்த ஜப்பானிய ஜெனரலைக் கொன்றதால், அவர் குடும்பமும்
பாண்டியனுக்கு மிகவும் நன்றியுடையது, என்றபோதும், பாண்டியனைக் கொல்லும்
தோட்டா, லாயர்
டில்டனின் மகன் “மேஜர்” டில்டனின்
துப்பாக்கியிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
*
வாழ்க்கைப்
புயலில், பாண்டியனைப்
போல, செல்லையாவைப்
போல, வானாயீனாவைப்போல, மாணிக்கத்தைப் போல
நாமும் தாக்குப் பிடிக்க முயன்று கொண்டேதான் இருக்கிறோம். அப்பாலிருந்து புயலை
இயக்கும் விசையாக நம்மை நோக்கி சிரித்துக்கொண்டிருக்கிறது ஊழ்.
*