title


கானல்

மோனத்தவம் கலைத்த
தன் முதல் ஓவியத்தில்
தன்னையே கருவாக்கினாள் ஆதிரா

கட்டிவைத்திருந்த
தளைகள் அறுத்து
பறக்க எத்தனிக்கும்
ஒரு தேவதையின் பிம்பம் அது

கட்டுகளின் தழும்பு மறைக்கும்
நீண்ட வெண் அங்கி…
ஆதிராவை நகலெடுத்து ஒளிர்ந்தது

தங்கத்தூரிகைகள் கோர்க்கப்பட்ட கிரீடம்
மோட்சமடைந்தது
தேவதையின் தலையை அடைந்து

தன் ஆழ் மன ஆசைகளின்
சாறெடுத்து
நெடுந்தூரம் கடக்கும் சிறகுகள் வரைந்தாள்

பறக்கத் துவங்கிய தேவதையின்
நிம்மதிப் பெருமூச்சால்
தூ(து)க்கத்தில் சிரித்துக்கொண்டாள் ஆதிரா…

No comments: