title


புத்தம் சரணம்


நள்ளிரவுகளில் துரத்தும்
கனவுகளின் கோர முகம்
அலறி எழுகிறாள் யசோதரை

ஹம்சதூளிகா மஞ்சத்தின்
வற்றாத கண்ணீர் நதி கடக்க
ஓடம் தேடி அலைகிறான் புத்தன்
ஒவ்வொரு மரமாய்.


***

போதுமட்டும் பிள்ளைக்கறி
உண்டும் கூட
தாகத்துக்கு குருதிமழை
பொழிந்த பின்னும்
இன்னும் இன்னும் என ஏங்குகிறான் புத்தன்

வீடு வாசல் செல்லடித்து
வாழ்ந்ததடம் அழித்துமுடித்து
பாலூட்டும் முலையறுத்து
யுகம் பல தாண்டிய நூல்களை
”தீ” க்கு தின்னக் கொடுத்து
இன்னும் எப்படி எப்படியோ
கட்டப்படுகின்றன பெளத்த விகாரங்கள்

அனுதினமும் விகாரமாகிக்கொண்டே
போகிறான் புத்தன்.