title


கதர்க்கடையும் சனிக்கிழமையும் – 2

என்னுடைய முக்கியமான நோக்கமே வீட்டுக்குத் தேவையான பொருட்களை காதியில் வாங்க வேண்டுமென்று இருந்ததால் முதலில் நான் நுழைந்தது மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் பகுதிக்கு. ஊதிபத்தி, கற்பூரம் துவங்கி குங்குமப்பூ, பாதாம், ஜாம் வரை அனைத்துப் பொருட்களும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதி என்றாலே விலை அதிகமாயிருக்கும் என பொதுவான ஒரு கருத்துண்டு ( அடேங்கப்பா கதர்க்கடைக்கு போனா ஆன (யானை ?) வெலை குதர (குதிரை !) வெலை சொல்லுவான் என ஒரே ஒரு முறை கூட அந்தப்பக்கம் போகாத ஆசாமிகளும் சொல்லுவார்கள்). ஆனால் நானறிந்தவரை காதியில் தரமான பொருட்கள் அந்த தரத்துக்கேற்ற விலையுடன் இருக்கும் (இன்னும் கூட என் அம்மாவின் சொந்த ஊர் / அப்பாவின் சொந்த ஊர் பெரியவர்கள் தன் கல்யாணத்துக்கு வாங்கின காதி செருப்பு பேரனைப் பார்க்கப் போகும்போது அறுந்து போனதென்னி வருந்துவதாக கேள்வி ).

முதன்முதலாக நான் தேர்வுசெய்து எடுத்த பொருள் பாரா புகழ் (பாரா -> பா. ராகவன்) அபராஞ்சி குளியல் சோப், தொடர்ந்து ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, ஜாம், பருப்பு வகைகள், பனங்கற்கண்டு என தேவையான பொருட்களனைத்தையும் வாங்கிமுடித்தேன். மொத்தத் தொகையையும் கடனட்டை மூலமாக செலுத்திவிட்டு (கடனட்டை உபயோகிக்க பில் தொகை குறைந்தபட்சம் ரூ 250/- இருக்கவேண்டும்) மற்ற இடங்களுக்குச் சென்றேன்.

தோல் பொருட்களான ஷூ, செருப்பு, பெல்ட் மற்றும் பிற பொருட்களுக்கென்று தனித்தனியாக ரேக்குகள் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதியில் தரத்தைப் பற்றிய கவலை தேவையில்லாதது, அதிலும் தோல் பொருட்கள் சிறந்த தரத்துடன் இருக்கும். கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யுமிடம் பெரியது. சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள் துவங்கி, மிகப்பெரிய சிலைகள் வரை காணக்கிடைத்தன (மரத்தினால் ஆனவை / உலோகத்தால் ஆனவை). எந்த விலையில் வேண்டுமானாலும் நல்ல பரிசுப்பொருட்கள் வாங்க தாராளமாய் காதியை நாடலாம்.

என்னைக் கவர்ந்த மற்றுமொரு முக்கிய அம்சம், ஒரு சிலர் தவிர அங்கு பணிபுரிந்த அத்தனை பேருமே வாடிக்கையாளர்களிடம் மிகத்தன்மையாக நடந்து கொண்டதுதான் (என் சொந்த ஊரில் இருக்கும் கதர்க்கடை ஊழியர் வாடிக்கையாளர்களிம் காட்டும் பரிவைக்(?) கண்டால் காந்திகூட அவரை கல்லால் அடிப்பார்). எது எப்படியானாலும் இந்தியத்தயாரிப்புகளை உபயோகிக்க வேண்டுமெனும் என் ஆசை மீண்டுமொரு முறை துவங்கப்பட்டது. (இம்முறை சற்றே வீரியமாக.)

வெளியே வரும் போது நன்னாரி சர்பத் மற்றும் பதனீர் இரண்டையும் ஒரு பிடி பிடித்தேன் (குடி குடித்தேன் !). வெளியேரும் முன்னர்தான் கவனித்தேன் புத்தகங்கள் கூட அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை. தன் சுயசரிதையிலிருந்த மகாத்மா புன்னகைத்து விடைகொடுத்தார்.

(முற்றும்)

கதர்க்கடையும் சனிக்கிழமையும் - 1

என்னால் இயன்றவரையில் இந்தியத் தயாரிப்பான பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்பது என் நீண்டகால ஆசை. அவ்வப்போது அதை முயற்சித்துப் பார்க்கவும் தவறியதில்லை. டாபர் பேஸ்ட் துவங்கி வீக்கோ கிரீம் வரை எல்லவற்றையும் புதிது புதிதாய் முயல்வதும் பின் தவிர்க்கவியலாத காரணங்களால் மீண்டும் கிடைக்கின்ற பொருட்களை உபயோகிப்பதும் என மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பா. ராகவன் அவைகளின் காதி ( நம்ம பாசைல சொல்லோணும்ன கதர்க்கடைங்கோ) அனுபவங்களை படிக்க நேர்ந்தது (இணைப்பு தர இயலவில்லை. ம்ன்னிக்க). அவ்வளவுதான் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சுதேசி தாகம் விழித்தெழுந்தது. பதிவைப் படித்த நாள் முதற்கொண்டே அண்ணாசாலை காதி கிராமோத்யோக் பவன் (பெயர் தவறாக இருப்பின்.... ஒண்ணும் செய்யவேண்டாம், சரியாக எடுத்துக் கொள்ளுங்கள் ) பற்றிய கற்பனைகளில் மிதப்பது, கூகுள் மேப்பில் தேடுவது என ஏகத்துக்கும் ரகளை செய்து கொண்டிருந்தேன். ஒரு வழியாக அந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று வண்டியை எடுத்துக்கொண்டி காதியை நாடி ஓடினேன் (ஓட்டினேன் ?).

சென்னை அண்ணாசாலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்திற்க்கு நேர் எதிரில் அமைந்திருந்தது “காதி கிராமோத்யோக் பவன்”. வண்டியை நிறுத்த போதுமான இடமின்றி சற்றே சிரமப்பட நேர்ந்தது (தனியாக பார்க்கிங் இடமென்று ஏதுமில்லை, கடையின் முன்புறமிருக்கும் 15 * 15 அளவுள்ள இடம்தான் வண்டிகளை நிறுத்த). ஒரு வழியாக கிடைத்த சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழையும்போதே ”பதனீர் : ரூ 6/-”, “நன்னாரி சர்பத் : ரூ 6/- ” என அறிவிப்புப் பதாகைகள் வரவேற்றன. எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் (சிங்கம் எங்கயாவது சர்பத் சாப்பிட்டுமா? போன்ற அறிவுப்பூர்வமான் விவாதங்கள் வேண்டாம்) லேசாக முழித்தது. சரி சரி வரும் போது ஒரு கை (வாய் ?) பாத்துக்கலாமென்று அதை சமாதானம் செய்துவிட்டு வலது காலை வைத்து உள்ளே நுழைந்தேன் ( நாம உள்ள போனாலே பிரச்சனைதான் இதுல எந்த காலை வச்சு உள்ள போனா என்ன?).

அண்ணாசாலை காதிபவன் இரண்டு தளங்கள் கொண்டது. மேல்த்தளம் முழுவதும் கைத்தறி ஆடைகளுக்கானது. கீழ்த்தளத்தில் நுழைந்தவுடன் இடதுகைப்புறம் மளிகைப்பொருட்கள் மற்றும் பூஜை / வாசனைப் பொருட்கள் வாங்கலாம். வலதுகைப்புறம் தோல் பொருட்கள் (கைப்பை / செருப்பு / பெல்ட்) விற்பனை செய்யுமிடம். நீண்ட கூடத்தின் கடைசியில் கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் அணிவகுப்பு. முன்புறத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பூஜையறை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

(தொடரும்...)

கடற்கரை தடங்கள்



அலைகள் கவர்ந்து சென்றன

கடற்கரை மணலில் பதித்த தடத்தை

மனதில் பதிந்த தடங்களோ

புதுப்பிக்கப்படுகின்றன அன்றாடம்

பசுமையாய் ..


நித்யகன்னி

பண்டையகாலம் துவங்கி இன்று வரை பெண்கள் மீதான அடக்குமுறையும் அத்துமீறல்களும் அன்றாடம் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அது புராண, இதிகாசங்களாக இருந்தாலும், நம் வீட்டில் தெருவில் நடக்கும் சம்பவங்களாக இருப்பினும் பெண்மை எப்போதும் ஆண்மையின் ஆளுமைக்கு உட்பட்டதே என எண்ணும்படியான நிலைமைதான் தொடர்கின்றது.

இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான “மஹாபாரதமும்” இதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற கதாபாத்திரங்கள், கண்மூடித்தனமான பக்தியை வளரவைக்கும் கதையோட்டம், ஊடே கணக்கில்லா தத்துவங்கள் என சகலமும் நிறைந்த மஹாபாரதத்தில் பெரும்பாலும் யாரும் பெரிய அளவில் கவனித்திராத ஒரு கிளைக்கதைதான் நித்யகன்னியான மாதவியின் கதை. அதை சற்றே புனைவு கலந்து மிகச்சிறந்த முறையில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்.



பாரதக்கதை நடந்ததாக நம்பப்படும் காலகட்டத்துக்கும், தற்போதைய காலகட்டத்துக்கும் பெருமளவில் இடைவெளி இருப்பினும், பல வகையில் உலகம் மாறியிருந்தாலும், நாகரீகமடைந்திருந்தாலும் (குறிப்பாக) வீட்டுக்குள் பெண்களின் நிலையில் பெரியளவில் எந்தமாற்றமும் இல்லை. தகப்பனென்றும், உடன்பிறந்தவரென்றும், காதலனென்றும், கணவனென்றும் வெவ்வேறான உறவுமுறைகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் மிக குறைவான அளவே அளிக்கப்பட்டுள்ளது.

என்றுமே அழியாத இளமையை வரமாகப் பெற்றவள் நித்யகன்னி “மாதவி”. ஆனால், அந்த வரத்தின் பொருட்டே உலகத்தின் தூற்றலுக்கு ஆளாகிறாள். வரத்தை சாபம் என்றெண்ணும் நிலைக்கு அவளை ஆளாக்கியதில் தகப்பன், காதலன் மற்றும் முற்றும் துறந்த முனிவன் என எல்லாத்தரப்பும் சமபங்கு வகிக்கின்றனர். அவளின் நிலையெண்ணி அவளுக்காக பரிந்து பேசுபவர் மிகச்சொற்பமே.

சுருங்கச் சொல்லின், தன் நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் போகும்வண்ணம் “வரம்” என்னும் போர்வையில் “சாபம்” பெற்ற நித்யகன்னியின் கதையை சிறப்பாக சொல்லியுள்ளார் எம்.வி.வி.


நாவல் : நித்யகன்னி (நாவல்)
எழுத்தாளர் : எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பகம் : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
பக்கம் : 182
விலை : ரூ 100/-