title


பிரிதலென்னும் பசப்பு

வெறும் காற்றால்
நிரம்பி வழிகின்றன
நம்முடைய தேநீர் கோப்பைகள் !

மெளனமே வார்த்தைகளாய்
கோர்க்கப்பட்டுள்ளதுதான்
நமக்கிடையே நடக்கும் உரையாடல்கள் !

அடிக்கடி நேரிடும்
சந்திப்புகள் யாவுமே
விபத்துகளாக மட்டுமே
முற்றுப் பெறுகின்றன !

எப்போதாவது அதிசயமாய்
மோதிவிடும் பார்வைகளுமிழும்
தாங்கவியலா கோபமூட்டும் வெறுப்பை !

அரிதினும் அரிதாக
பூத்தெழும் புன்னகையிலும்
பெருக்கெடுத்து ஓடுகின்றது கசப்பு !

என்றாலும்

விழிகளின் ஓரத்தில்
துளிர்த்திடும் சொட்டுக்
கண்ணீர் நிறுவும்
” பிரிதலென்பது வெறும் பசப்பு ” !

பல நேரங்களில் பல மனிதர்கள்

எந்த ஒரு மனிதனுக்கும் எல்லா விதமான வாழ்க்கையும் வாழக்கிடைத்துவிடுவதில்லை. அதைப்போலவே, எல்லா நாடுகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் சென்றவரென்று எவருமில்லை. நன்மைகள், தீமைகள், உறவு, பகை, வசதி, வறுமை என எல்லா அனுபவங்களும் எல்லாருக்கும் நிச்சயம் வாய்க்குமென்று கூறவியலாது. என்னைப் பொருத்தமட்டில் நல்ல நூல் என்பது பல தரப்பட்ட வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரங்களையும், மனித மனங்களின் நுட்பமான வேற்றுமைகளையும் இயல்பான முறையில் செய்யப்படும் ஒரு பதிவு.

அவ்வகையில் தன்னுடைய தலைநகர் வாழ்க்கையை, சந்தித்த மனிதர்களை, தன் அனுபவங்களை கட்டுரைவடிவில் படைத்துள்ளார் திரு. பாரதிமணி. சுடுகாடு துவங்கி ஏர்போர்ட் வரை தான் பார்த்தறிந்த, அனுபவித்த முக்கிய நிகழ்வுகளை மிகச்சிறப்பான நடையில் அளித்துள்ளார். “பாரதிதிரைப்படத்தில் பாரதியாரின் தகப்பனாராக நடித்திருப்பவர், பல வருடங்களாக தேர்ந்த நாடக நடிகர், எழுத்தாளர் விமர்சகர் கா.நா.சு. அவர்களின் மருமகன் என பல அடையாளங்களுடன் இந்த புத்தகத்தின் மூலமாக தேர்ந்த எழுத்தாளராகவும் தன்னை நிலை நாட்டிக்கொண்டுள்ளார் திரு. பாரதிமணி அவர்கள்.


அரசியல் காரணங்களை முன்வைத்து ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் அதை அவர் எடுத்துக்கொண்ட விதம், டெல்லியின் நிகம்போத் சுடுகாட்டுடன் தனக்குள்ள உறவு, தேசிய விருதுகள் தேர்வுசெய்யப்படும் முறை, நாமெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிக்கின்ற சர்தார்ஜீ ஜோக்குகளில் வரும் ”சிங்” கள் உண்மையில் எவ்வளவு சிறந்தவர்கள் என விளக்கும் “சிங் இஸ் கிங்” பதிவு, டெல்லியில் தன் நாடக வாழ்க்கை, நாடகத்துடன் தனக்குள்ள உறவு, பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய பதிவு என பல விதமான அனுபவங்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.

திரு. பாரதிமணி அவர்களின் சரளமான எழுத்தின் வாயிலாக அவருடைய அனுபவங்களூடாக நாமும் டில்லி வாழ்வின் சாரல்களை அனுபவிக்க இயலுகின்றது.


நூல் : பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரைகள்)
எழுத்தாளர் : பாரதிமணி அவர்கள்
பதிப்பகம் : உயிர்மை
பக்கங்கள் : 192
விலை : 110 ரூபாய்