title


ஆதிராவின் தூரிகை

ஐந்து வயதில் ஆதிராவுக்கு
ஓவியம்தான் உலகம்…
வெள்ளத்தாளில்
சிறு பென்சிலின் ஜாலத்தை
தானே அதிசயம் என்பதை மறந்து
அதிசயிப்பாள்
அவளுடனே வளர்ந்தன
அவளுக்கான காகிதங்களும் தூரிகைகளும்
கூடவே சித்திரத்துள் சிக்கிக்கொள்ளும்
பெருங்கனவும்
குழந்தையாக தெய்வமாக
ஓங்கி வளர்ந்த மரமாக, ஓடை நீராக
இன்னும் இன்னும் பலவாக
காகிதத்தில் தனி உலகத்தை உயிர்ப்பித்து
கன்னித் தாயானாள் ஆதிரா
காலம் அதன் சுழற்சியை
முழுவீச்சில் நிகழ்த்திட
ஆதிராவும் ஆனாள்
மந்தையில் ஆடாக
விரல் விளையாட கீ போர்டு
விருப்பமில்லாவிட்டாலும் நல்வேலை
வட்டமோ சதுரமோ செவ்வகமோ
வரையலாம் காய்கறியில்
உறங்க மட்டும் கிடைத்திடும்
ஒரு நாளின் சிறுபொழுது என
யாரோ ஒருவரின் வாழ்க்கையை
தான் வாழலானாள் ஆதிரா
சித்திரத்தில் சிக்கிக்கொள்ளும் ஆசையை
8 புள்ளி 16 வரிசையில்
முடித்துக்கொண்டு
இப்போதும் இருக்கிறாள் ஆதிரா
யாதொரு குறையுமில்லை அவளுக்கு
ஆனால்
தீண்டலில் உயிர்ப்பிக்கும் வளைகரங்களின்
கருணைக்காய் காத்திருக்கின்றன
உறைந்துபோன தூரிகையும்
உடன் சிலகட்டுத் தாள்களும்
ஓவியமெனும் கலையும்

No comments: