title


துரோகம்

நூற்றாண்டு கால
கசப்பைச் சுமந்துகொண்டு
அலைகின்றது துரோகம்!

காலம் வளர வளர
துரோகத்தின் விடமும்
பல்கிப் பெருகுகின்றது

யுகந்தோறும் அலைந்தும்
ஓயாத அலைகளென
முடிவேயில்லாதது
துரோகத்தின் சரித்திரம்...

ஆதியில் ஆதாம் ஏவாள்
ஆப்பிள் துவங்கி
கடந்துபோன கடைசி நொடிவரை
யாராவது எப்போதும்
துரோகத்தின் பெயரால்
வஞ்சிக்கப்பட்டுள்ளனர்

நமக்கு நாமே எதிரியாவோம்
எதிரியின் எதிரியென்பதால்
எல்லோரும் எதிரியாம்
துரோகத்தின் உலகில்...

பெருங்கடல் நடுவே நீந்துபவனின்
தாகம் போன்றது..
துரோகத்தால் காயம்பட்ட
மனம் உணரும் தனிமை...

இருப்பதிலேயே
பெருங்கொண்ட துயரம்
துரோகம் உணர்த்தும் வலி...

உலகிலேயே
மிகக் கொடுமையானதும்
குரூரம் கொண்டதும்
துரோகத்தினுடைய முகம்...

எல்லாத் திரவங்களையும் விட
மிகமிக அடர்த்தியானது
கண்ணீர்...
துரோகத்தின் கொடையான
கண்ணீர்...

தனிமையானதும்
மிக நீண்டதுமான
இரவுப்பயணத்தில்...

மிகத்துயர்கூட்டும்
கசப்பேறிய பாடலின்
சாரமும்.... மூலமும்...
துரோகம் !