title


நீ ஒரு காதல் சங்கீதம்-3

Part 1    Part 2
மருந்தீஸ்வரர் கோவில், தியாகராஜா திரையரங்கம், கூட்டமில்லா கடற்கரை, பஸ் டிப்போ…. இவையெல்லாவற்றையும் மறந்து திருவான்மியூர் என்றவுடனே ”டைட்டல் பார்க் ரயில்வே ஸ்டேசன்” மட்டுமே நினைவுக்கு வரும் இரண்டு ஜீவன்கள் உண்டு சகியே. ஒன்று நான், இன்னொன்று என்னை நானாக்கிய நீ.
***
”இங்க பாரு இன்னைக்கு முடியாது. நெறைய வேலை இருக்கு. பத்தாததுக்கு weekend வேற, ஊருக்கு போகணும். நேத்து தானடா பாத்தோம், இப்ப மறுபடியும் பாக்கணும்னா என்ன அர்த்தம்?”.
சகியே நீ கோவத்தில் பேசினாலும் மெல்லிய புல்லாங்குழலின் இசை எழுகிறது.
“அப்படியில்ல மா. த பாரு, நேத்துக் கூட சாப்பிட்டோம். மறுபடியும் இன்னைக்கும் பசிக்குதுல. அப்படித்தான் இதுவும்” எப்படியும் வந்துவிடுவாய் எனத்தெரியும் இருந்தாலும் கொஞ்சம் கெஞ்ச வைப்பாய். இந்த கொஞ்சலும் கெஞ்சலும் இல்லாமல் பிறகென்ன காதல்?
”இப்படி வக்கனையா மட்டும் பேசு. வேறொன்னனும் தெரியாது” கோபம் குறையாதது வார்த்தைகளில் மட்டும்தான். அப்போது உன் இதழ் மென்புன்னகை சிந்தியிருக்குமென்பதை நானறிவேன்..
“பேச்சுதானே மாமானோட வீச்சு. சரி சொல்லு எங்க எத்தன மணிக்கு மீட் பண்ணலாம்?”
“நான் intercityல புக் பண்ணிருக்கேன். சரியா 7 மணிக்கு டைடல் ஸ்டேசன் வந்திரு. கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்புனா, ஸ்டேசன் போய்ட்டு friends கூட சாப்பிட சரியா இருக்கும். அப்புறம் லேட்டா வந்திட்டு Onsite call அப்படி இப்படின்னு ஏதாவது கத சொன்ன, அவ்வளவுதான். Bye”. நீ கால் கட் செய்த மறு நொடியே என் உள்ளம் ”டைடல் ஸ்டேசன்” சென்றுவிட்டது.
பைக்கை ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு நான் டைடல் ஸ்டேசனுள் நுழையும்போது மணி 6:45. உன் வருகைக்காக நான் காத்திருக்கத் துவங்கினேன். ஓசையெழுப்பாத மிக மெல்லிய உன் காலடித்தடங்கள், என் இதயத்தில் பூகம்பம் ஏற்படுத்தும் விந்தை இன்னொருமுறையும் நடந்தது. மூச்சு வாங்க ஓடி வந்திருந்தாய். முதன்முதலாக உன்னைப் பார்ப்பவன் போல் பிரம்மித்து அமர்ந்திருந்தேன்.
மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு ,அப்புறம் ?” என்றாய்.
உன்னை நகலெடுத்து நானும் கேட்டேன் “அப்புறம்?”
அப்புறமென்ன, அடுத்த ஒரு மணி நேரமும் வெறுமனே அப்புறங்களால் நிரம்பி வழிந்தது நம் உரையாடல். இடையில், சென்ட்ரலுக்கு சொல்லும் இரண்டு வண்டிகளை ”அடுத்த வண்டி, அடுத்த வண்டி” என நீ தவற விட்டிருந்தாய். “வா வா” என நீ வருவதற்கு நான் கெஞ்சுவதும், வந்தபின் ”போகாதே, இன்னும் கொஞ்ச நேரம்” என நீ கெஞ்சுவதும், என நம் எல்லா சந்திப்புகளும் இப்படித்தான் இருந்திருக்கின்றன சகியே.
அடுத்து வரும் வண்டியில் நீ ஏறித்தான் ஆகவேண்டும். இணைந்திருந்த நம் கரங்களில் நான் தந்த அழுத்தத்தை உணர்ந்து கொண்டவளாய் நீ மிக மெல்லிய குரலில் பாடத்துவங்கினாய். அது நமக்கான நம் ராஜாவின் பாட்டு
”நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ….
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி….”
பாட்டு முடியவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. ஒரு மணி நேரமோ, ஒரு முழு நாளோ பிரியும் போது இன்னும் இன்னும் பிரியம் கூடும். துளிர்த்த இரு சொட்டு கண்ணீரை என் மீது சுண்டியவாறே ரயில் ஏறினாய் நீ. ஆசிர்வதிக்கப்பட்டவனானேன் நான்.
திங்கட்கிழமை வரை தாங்குமளவு காதலைச் சுமந்துகொண்டு மீண்டும் வண்டியில் திரும்பினேன். லேசான தூரல். காதில் ஒலித்துக்கொண்டிருந்தது ராஜ இசை
“விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே…
அடடா எங்கெங்கும் உன் அழகே”

No comments: