title


நிழல்முற்றம்

சின்ன வயதில் சினிமா பார்த்த கிராமத்து டெண்ட் கொட்டகைகளின் நினைப்பு மனதில் நீங்காத ஒன்றாகும். படம் துவங்கும் முன்பும், இடைவேளையிலும் விற்கப்படும் திண்பண்டங்களுக்கென தனி ருசி உண்டு. வெளிக்கடைகளில் வாங்கி உண்ணும்போது கிட்டாத தனி ருசிக்கு, திரையரங்கின் மீதான கவர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெருமாள்முருகன் தன் நிழல்முற்றம் நாவலில் அந்த திண்பண்டங்களை விற்பனை செய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் பதிவுசெய்துள்ளார்.


ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வும் ஏதேனும் ஒரு தற்காலிக இலக்கினை நோக்கியே பயணிக்கின்றன. திரையரங்கில் திண்பண்டம் விற்கும் சிறுவர்களின் வாழ்வின் அத்தகைய பயணத்தில் நம்மையும் இணைத்து அழைத்துச் செல்லும் சிறப்பான நாவல் இது. பொதுவாகவே சிறுவர்கள் தொழிலாளிகளாவது மிகக் கொடுமையானது. அதிலும் கண்காணிக்கவும், கண்டிக்கவும் யாருமேயில்லாமல் தொழிலாளியாகும் சிறார்கள் வெகு சீக்கிரத்தில் ”வளர்ந்து”விடுவார்கள்.

நாமறிந்த மனிதர்கள்தான் என்றபோதும் அவர்களது வாழ்க்கை வேறுபட்டது. என்னதான் உழைத்தாலும் மிக மிக சாதாரணமான எதிர்பார்ப்புகள் கூட பொய்த்துப்போகின்றன. என்றபோதிலும், அன்றாட வாழ்வினை அவர்கள் மகிழ்வுடனே முடிக்கிறார்கள்.

ஒரு திரையரங்கம், கோவில், சந்தைக்கடை, சாப்பாடு, சைக்கிள் ஸ்டேண்டு, பீடி, கஞ்சா, தூக்கம் இப்படி மிகச் சிறிய வட்டத்துக்குள் கதை சுழன்றாலும், சூழ்ந்துள்ள மனிதர்களால் சுவாரசியமடைகின்றது வாழ்க்கை. இவர்கள் நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் மனிதர்கள்தான், ஆனால் நாம் அறிந்திராத இவர்களின் வாழ்வை மிக சிறப்பாக பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பெருமாள்முருகன்.

சிறப்பான நாவல்.

நாவல் : நிழல்முற்றம் (நாவல்)
எழுத்தாளர் : பெருமாள்முருகன்
பதிப்பகம் : காலச்சுவடு