title


ஆகஸ்ட் 17

”ஏங்க, என்னங்க ஆச்சு ?”

கடந்த 5 நிமிடங்களில் இரண்டாவது முறையாக அருணா கேட்டாள். ஓன்றுமில்லை என்பதாக சைகை செய்தேன்.

“பின்ன என்ன, ரொம்ப நேரமா எதுவுமே பேசாம எங்கேயோ வெறிச்சு பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?” அருணாவின் ஆதங்கம் நியாயமானதுதான் என்றாலும், பேசக்கூடாது என்றில்லை; எனக்கு பேச்சு வரவில்லை.

*
இது நடந்து ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது சென்னை அடையாறில் உள்ள மகப்பேறு மருத்துவமனை. முகங்கள் தெரியுமளவு மட்டும் வெளிச்சம் கொண்ட அந்த அறையில் நான், அருணா மற்றும் மருத்துவமனையின் “ஸ்கேன்” மைய உதவியாளர் என மூன்று பேர் மட்டும் இருந்தோம். ஸ்கேன் செய்யும் கருவியை இயக்கியவாறு உதவியாளர் சொன்னார், இது “Babyயோட Heartbeat” அறையின் நிசப்தத்தை மறைத்துக்கொண்டு ஒலிக்கத்துவங்கியது என் மகனின் இதய துடிப்பு. 5 நிமிடங்கள் கழித்து அறையை விட்டு வெளியே வந்த நான் பரவசத்தில் பேச்சை மறந்தேன். பார்க்கும் பொருள் எல்லாம் புதிதாய் தெரிய கொஞ்ச நேரம் எல்லாப்பொருட்களையும் வெறித்துப்பார்த்தேன்.
*

எப்போதும் உயிருள்ள FM Radio மாதிரி பேசிக்கொண்டிருப்பவன் திடீரென பேச்சை நிறுத்தி எல்லோரையும் வெறித்துப்பார்ப்பது நிச்சயம் கலவரமூட்டும் செயல்தான். அந்த கலவரத்தோடு மீண்டும் ஒருமுறை அருணா கேட்டாள்.

”ஏங்க, என்னண்ணு சொன்னாதான தெரியும்?”

இடைப்பட்ட நேரத்தில் ஓரளவு ஆசுவாசம் கிடைத்திருந்தது. மெல்லிய புன்னகையுடன், துளித்திருந்த சொட்டுக்கண்ணீரை துடைத்தபடி சொன்னேன்

“ஒண்ணுமில்லப்பா”

***

இன்று (ஆகஸ்ட் 17) “கார்த்திக்” பிறந்தநாள் :) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக் :)

ஒரு பழைய பதிவு :
http://kaleeswarantk.blogspot.in/2012/08/flashback.html