மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன் – 1970 களில் மலேசியாவில் பேசிய பேச்சு எனக்கு மிகவும் பிடித்த உரைகளுல் ஒன்று. தன்னுடைய வாழ்வின் ஒரு முக்கிய பின்னடைவுக்குப் பின்னர் (சிறை சென்று மீண்ட பின்) திராவிடர் கழகத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா சென்று நிகழ்த்திய உரை அது. என்றபோதும், சிறிதளவுகூட தன்னம்பிக்கை குறையாமல், தன் மனதிலிருந்து பேசிய அற்புத உரை.
அதுசரி யார் இந்த “மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன்” ? திராவிடர் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொள்ளாதபோதும், தந்தை பெரியாரின் தீவிர சீடர். தமிழகத்தின் மிக முக்கிய நாடகக் கலைஞர். சினிமா ஊடகத்தை பகுத்தறிவு பரப்பப் பயன்படுத்திக்கொண்டவர்களுல் மிக முக்கியமான ஒருவர். தான் இறந்தபின்னரும், இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தனக்கென ஒரு தனித்த செல்வாக்கு உடையவர். எனக்கு மிகப்பிடித்த சுயமரியாதையாளர். நடிப்பில் தனக்கென ஒரு தனிபாணியை உருவாகியவர். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். அவரது இன்னொரு பெயர் “M.R.ராதா”.
சரி, இனி என்னைக் கவர்ந்த அந்த உரை குறித்து :
எனக்குத் தெரிந்தவரையில், எந்த விதமான முன்னேற்பாடுகளுமில்லாமல், குறிப்புகளில்லாமல் பேசிய ஒரு பேச்சு இது. பேச்சின் துவக்கத்திலேயே ”நான் இங்கு வரக்கூடாதென்று பெட்டிசன் போட்ட என் இனிய நண்பர்களே” என அதிரடியாகத் துவங்குகிறார் திரு.ராதா. தன்னுடைய 30 நிமிட பேச்சில் சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சினிமாத்துறை, அடக்குமுறை என எல்லாவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி பதிவு செய்கிறார். அதிலும் சினிமாக்காரர்கள் குறித்த விமர்சனம் (”குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமாவா தமிழ் நாட்டில் எடுக்கிறார்கள் ? பெரியவனே பார்த்து கெட்டுப்போய்க் கெடக்கிறான்” என்பது ஒரு சாம்பிள்), மற்றும் அவர்களது வருமானவரி பாக்கி குறித்த வெளிப்படையான பேச்சு, தனக்கும் எம்.ஜி.ஆருக்குமாக சண்டை குறித்த விசயங்கள் என்ன எல்லாவற்றையும் எவ்வித தடங்களுமின்றி பேசிப்போகின்றார். பின்வரும் பகுதியை கவனியுங்கள்
“இப்ப, நான் கூட வருமான வரி பாக்கி 10 லட்சம் கட்டணும் (1970 களில்), அவங்க எங்க கேட்கப்போறாங்க? நான் எங்க கட்டப்போறேன்?.. அதெல்லாம் ஒண்ணுமில்ல”
இப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஒருவருக்கு என்ன ஒரு தைரியம் இருந்திருக்க வேண்டும். அந்த தைரியம்தான், அந்த சுதந்திரம்தான் “M.R.ராதாவை” காலம் கடந்தும் நினைக்கவைக்கிறது. நல்ல பேச்சைக்கேட்பதில் ரசனையுள்ளவர்கள் நிச்சயம் கேட்கவேண்டிய ஒரு கலகக்குரல் “M.R.ராதா”வுடையது.
Youtube link : (வீடியோவுக்கும் பேச்சுக்கும் தொடர்பில்லை)
http://www.youtube.com/watch?v=hnl63Uskv7I
http://www.youtube.com/watch?v=hnl63Uskv7I
(திரு. M.R.ராதா குறித்த “M.R.ராதாயணம்” புத்தகம் பற்றி முன்பு ஒருமுறை நான் எழுதிய ஒரு பகிர்வு :http://kaleeswarantk.blogspot.in/2010/04/mr.html)