title


நிழலின் அருமை – அறத்தை முன்வைத்து

தான் வாழ்ந்த காலத்தில் சாப்பாட்டுக்கே தத்தளித்து ஒரு வழியாய் விதியோ அல்லது பசியோ கொண்டுசென்ற எண்ணற்ற நல்ல எழுத்தாளர்கள் / கலைஞர்கள் ( அட அவரில்லைங்க....) தமிழில் நிறையவே உண்டு. வாழும் காலத்தில் ஏளனங்களை சகித்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல எண்ணிக்கொள்ளும் சமூக மற்றும் குடும்ப சூழலுக்கு மத்தியிலிருந்து கொண்டு ஆகச்சிறந்த படைப்புகளைத் தந்த அவர்களது வாழ்க்கையை “அறம்” என்ற சிறுகதையில் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.

இதுதான் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்தது. என்ன, கொடுமைகளில் கொஞ்சம் கூட, குறைய இருந்திருக்கலாம் அவ்வளவே. வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான (என்று கருதப்படும்) அம்சங்களிலும் கையாலாகாதவனாக அறியப்பட்டும் தன் ஆளுமையை படைப்புகளில் நிலைபெறச் செய்வது என்பது மிகப்பெரிய சவால். நெடுநாட்களுக்குப்பின் கண்கலங்கவைத்த சிறந்த கதை அறம்.

நானறிந்தவரை இந்த கதையில் வரும் எழுத்தாளர் திரு. எம்.வி.வெங்கட்ராம் அவர்களாக இருக்கலாம். “காதுகள்” என்ற மிகவும் பாராட்டுப்பெற்ற நாவலை எழுதியவர். நான் அவரது மற்றுமொரு சிறந்த படைப்பான ”நித்யகன்னி” என்ற நாவலைப் படித்திருக்கின்றேன்.