title


இரவு


வயிற்றுக்குள் நீ
எட்டி உதைக்கும் வலி...
சில மணித்துளிகளில்
உன்னைக் காணும் பரவசம்...
அதிகாலையில் உன்னை 
பிரசவிக்கும் வரை
பரவசம் பாதி
பயங்கர வலி மீதியாய்
நான் மாறி மாறி 
செத்துப் பிழைத்த
மார்கழி மாத  மழை இரவு !

ஆறேழு வயதில்
காய்ச்சலில் முணங்கிக்கொண்டு
என் மடியில் நீ ...
கண்மூட மறந்து
உன் அருகில் நான்...
விசும்பலும் வேண்டுதலுமாய்
நான் கழித்த அந்த இரவு !

பள்ளி இறுதிகளில்
படிக்கும் களைப்பில் நீ...
ஏதேனும் கேட்பாயென
எதிர்பார்த்து நான்...
ஓய்வு கேட்கும்
கண்கள் ஒதுக்கி
உன்னுடனிருந்த இரவுகள் !

கல்லூரி நாட்களில்
நமக்குள் வரும்
கணக்கில்லா சண்டைகள்
உணவையும் உறக்கத்தையும்
ஓன்றாய்த் தொலைத்து
என்னையே நான்
வெறுத்த இரவுகள் !

காதல் மணம் முடிக்க
சம்மதம் பெற்று
சந்தோசமாய் நீ உறங்க
சமூகத்துக்கு பயந்து 
தூங்க முடியாமல் நான்
துடித்துக் கிடந்த இரவு !

இவை மட்டுமல்ல
வேறெந்த இரவுகளையும் விட
கொடுமையான வலி தருகிறது
என்னை நீ
"
முதியோர் இல்லத்தில்"
தள்ளிப் போன 
இந்த இரவு !

நாகம்மாள்


ஒவ்வொரு முறை மதுரையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தபின்னும் நான் பிறந்த கொங்கு மண்டலத்தின் கலைவீச்சில் ஒரு தேக்கம் இருப்பதாகத் தோன்றும். அதைப்போலவே ஏதேனும் நல்ல நாவல் படித்தபின் என் மண் சார்ந்து இப்படிப்படிப்பட்ட நல்ல படைப்புகள் இல்லையே எனும் ஏக்கம் தோன்றுவதுண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் என் அறியாமைதான் காரணம் என்பதை “நாகம்மாள்” நாவலைப் படித்தபின் உணர்ந்து கொண்டேன். மண் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வின் இயல்பு கெடாமல் அப்படியே பதிவு செய்துள்ளார் திரு. ஆர். ஷண்முகசுந்தரம்.

”தமிழ் நாவல்களின் தலைசிறந்த பெண்பாத்திரப் படைப்புகளுல் நாகம்மாளும் ஒருத்தி” என்ற விமர்சனவரிகளின் மூலமாகத்தான் எனக்கு நாகம்மாள் நாவல் அறிமுகமானது. அந்த வரிகள் என்னுள் ஏற்படுத்திய சித்திரத்துக்கும் நாகம்மாள் கதாபாத்திரத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நாகம்மாள் நம் அன்றாட வாழ்வில் கண்டுவரும் ஒரு மிக மிக சாதாரணமான, இயல்பான பெண்.

இந்த கதை நிலம் சார்ந்த தொழில்புரியும் குடும்பங்களின் ஆகப்பெரும் ஒரே சொத்தான நிலத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படும் கலகங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்தகைய கலகங்களில், கதை நாயகியாக முன்னிறுத்தப்படும் நாகம்மாள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் குழப்பத்தினூடே எடுக்கப்பட்டவை. தன்னுடைய சுய அறிவை புறந்தள்ளிவிட்டு அடுத்தவர் சொல்படி ஆடும் நாகம்மாள், இடையிடையே தன்னுடைய முடிவுகள் தவறோ என எண்ணுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இயல்பான ஒரு மனித சித்திரத்தை நாகம்மாளுக்கு வழங்குகிறது.

தன் முடிவுகள் யாவையும் தன்னுடைய முழு மனதோடு எடுக்கப்பட்டவையல்ல என்று தெரிந்தபோதும் ஒன்றும் செய்யவியலாத நிலையில் அகப்பட்டுக்கொண்டு அதையே தன் விருப்பமாக எண்ணிக்கொள்ளும்போது நாகம்மாளின் மீது கோபம் வருவதைப்போலவே பரிதாபமும் எழுகின்றது.

மொத்தத்தில் நாகம்மாள் நாவலை படித்து முடித்தபின் எஞ்சுவது நல்லதொரு அனுபவம். நூறு சதவிகித நல்லவன், நூறு சதவிகித கெட்டவன் என எவருமில்லை என்பதே யதார்த்தம். காலத்தின் கோலத்தில் எல்லாரும் வெறும் புள்ளிகள் மட்டுமே

நூல்                : நாகம்மாள்
எழுத்தாளர் : ஆர். ஷண்முகசுந்தரம்
பதிப்பகம்    : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
விலை          : 90 ரூபாய்

பாவப்பட்ட பாஞ்சாலிகள்

யுகந்தோறும்
துகிலுரியப்பட்டுக்
கொண்டேயிருக்கின்றனர்
பாஞ்சாலிகள்....

காக்க எதிர்நோக்கும்
கண்ணனின்
கண்களும் கைகளும்
கருந்துணியால்
கட்டப்பட்டு.....

பணயம் கேட்பவனும்
கேட்பதையே வைப்பவனும்
என எல்லாமுனைகளிலும்
சகுனியே நிறைந்திருக்க
என் செய்யக்கூடும்
பணயப்பொருள் ?

கும்பிக்கு உணவுக்கே
கும்பிட்டு விழவேண்டியிருக்க
குருதித்தைலம் தேய்த்து
கூந்தல் முடியும்
சபதமெல்லாமில்லை...

ஐந்தாண்டுக்கொருமுறை
ஆட்களும் ஆட்சியும்
மாறினாலும்
மாறுவதேயில்லை
பகடையாட்டம்....

எவன் வந்தாலும்
இயல்பு மாறாமல்
எண்ணிக்கை மட்டுமே
மாறுமிந்த திருநாட்டில்

லட்சங்களென்பதும்
கோடிகளென்பதும்
லட்சம் கோடிகள் என்பதும்
எண்கள்.....
வெறுமனே எண்கள்...