title


இரண்டு படி ( மொழிபெயர்ப்பு நாவல்)

உலகத்திலுள்ள தொழில்களிலேயே மிகவும் சிறந்ததும் பயனுள்ளதும் வேளாண்மை. அதைப்போலவே மிகவும் கடினமானதும் சபிக்கப்பட்டதும் அதுவே. இந்தியாவில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை வேளாண் மற்றும் பண்ணைத்தொழில் வேலைகளில் அடிமைகள்தான் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். உடல் நோகுமட்டும் உழைத்தாலும் வயிறு நனையுமட்டும்தான் வாழ்க்கை அமைந்திருந்தது. அதைவிட கொடுமையான விசயம் தம் உழைப்புக்குண்டான அங்கீகாரம் ஏதுமில்லை என அவர்கள் தலைமுறை தலைமுறைகளாக போதிக்கப்பட்டனர்.

இப்போதெல்லாம் உழைப்புக்கு கூலி பணமாக தரப்படுகின்றது. அந்த பணத்தைக் கொண்டு தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் குறைந்தபட்ச சுதந்திரம் (சுதந்திரம் மட்டுமல்ல சம்பளமும் குறைந்தபட்சம்தான் என்பது தனிக்கதை) உள்ளது. ஆனால் முற்சொன்ன காலகட்டத்தில் உழைப்பவர்களுக்கு என தனியாக ஊதியம் கிடையாது. அதற்குப்பதிலாக உணவும், உறைவிடம் உள்ளிட்ட தேவைகளும் மட்டுமே அவர்தம் எஜமானர்களால் தரப்பட்டு வந்தது. இதிலுள்ள சூட்சுமம் அறியாத அடிமைகளும் தம் எஜமானரை இந்திரர் சந்திரர் என எண்ணியதும் கடவுளுக்கிணையாக அவர்களைப் போற்றியதும் உண்டு. என்னதான் காலம் காலமாக பொய்மை கற்பிக்கப்பட்டாலும், என்றாவது ஒருநாள் உண்மை உதிக்கும்.

அப்படி தம்முடைய நியாமான கோரிக்கைகளுக்காக கேரளத்தின் குட்ட நாட்டு பண்ணை அடிமைகளாக கருதப்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒட்டி திரு. தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட மலையாள நாவல் “இரண்டங்கழி”. அதை தமிழில் ”இரண்டு படி” எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார் திரு. டி. ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.




சிருதை, சாத்தன், கோரன் என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அவர்களுக்கிடையேயான அன்பு, காதல் உள்ளிட்ட உணர்வுகள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வினூடாகவே குட்ட நாட்டு பண்ணையாட்களின் அவல நிலையைக் காட்டுகின்றார் தகழி. போராட்டம் துவக்கப்பட வேண்டியதன் காரணங்களையும் அதனால் தனி மனித வாழ்வில் சந்திக்க நேரிடும் அவலங்களையும் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். மேலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டுள்ள உறவின் மகத்துவம் மூவரின் (சிருதை, சாத்தன், கோரன்) வாழ்க்கையால் நிறுவப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு எனக்கு மலையாளத்தை தமிழில் படிப்பது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் பின்பு அதுவே நாவலுடன் ஒன்றிப்போக வழிவகுத்தது.

வாழ்வில் மற்றவர்கள் சுகத்துக்காக தாம் சிலுவை சுமந்தாலும் அதை அறியாத ஏசு பெருமான்கள் நம்மிடையே இன்னமும் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் வலியை அறிந்துகொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும்.

நூல் : இரண்டு படி (மொழிபெயர்ப்பு நாவல்)
எழுத்தாளர் :
மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை
மொழிபெயர்ப்பாளர் : டி. ராமலிங்கம்
பதிப்பகம் : சாகித்திய அக்காதெமி
விலை : 50 ரூபாய்