title


விழல் நீர்

எவரிடமாவது நீ பேசிக்கொண்டே
ஓர விழியால் என்னைப் பார்க்கும்போதெல்லாம்
பட்டாம்பூச்சி பிடிக்க ஆசைப்பட்டு
விரலில் படிந்த வண்ணத்துடன்
சமாதானமடையும் குழந்தையாகிறேன் நான்…
வான் போல இருக்கிறாய் நீ
உன்னைத் தீண்ட நான் எறியும்
கவிதைகளெல்லாம்
மீண்டும் மீண்டும் என் முற்றத்திலேயே
விழுகின்றன
சேர்த்து வைத்த சொற்கள்தான் பாரம்…
தாங்க முடியாமல்
உன்னுடன் பேசுவதற்கான
எல்லா வார்த்தைகளையும்
என்னுள்ளே பேசிப் பேசி எரிக்கிறேன்
அன்பே…
நிழலை மட்டும் தீண்டி
சுகித்திருப்பவன் காதலை
அந்த நிழலும் கூட அறிவதில்லை !

No comments: