title


பள்ளிக்காலம்

நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை என் வீட்டுக்கு அருகிலிருந்த ”திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி” யில்தான் படித்தேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் அவரே சகலகலா வல்லவர்.

ஐந்தாம் வகுப்பிற்கு அர்ச்சுனன் அய்யா, நான்காம் வகுப்பிற்கு மாரிமுத்து அய்யா, மூன்றாம் வகுப்பிற்கு சண்முகவடிவு டீச்சர், இரண்டாம் வகுப்பிற்கு மாரிமுத்து அய்யாவின் மனைவிதான் (எவ்வளோ யோசித்தும் அவர்கள் பெயர் எனக்கு நினைவில் இல்லை) டீச்சர், ஒன்றாம் வகுப்பிற்கு காவேரி டீச்சர். இப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர். அவரே அந்தந்த வகுப்பிற்கான பொறுப்பாளி. தலைமை ஆசிரியர் என்கின்ற சுழற்கோப்பையும் இவர்களுல் ஒருவரிடம்தான் இருக்கும்.

ஏறத்தாழ அனைவரும் உள்ளுர் மாணவர்கள். ஆசிரியர்களிலும் இருவர் உள்ளூரிலேயே இருந்துவிட்டதால் எந்த விசயமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் ஆசிரியர்களை அழைக்கலாம் என்பதான சுதந்திரமிருந்தது. சமயத்தில் அதுவே சுதந்திரத்தையும் பறித்தது.

ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் எங்கள் ஊருக்கு மிக அருகிலிருக்கும் “பெரியாயிபாளையம்” அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். துவக்கப்பள்ளியில் ஒரே ஆசிரியர் சகல பாடங்களையும் கற்பித்த சூழலில் படித்த எனக்கு, இங்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தது ஆனந்தமாகவும், அதே சமயம் கிராமப்புற பள்ளிகளுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடாக பாதி பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாத கொடுமை அதிர்ச்சியாகவும் இருந்தது.


அந்த அறியாத வயதில் என்னுள்ளும் என்போன்ற பலருள்ளும் நல்லெண்ணம் விதைத்தது இப்பள்ளிகள்தான். என்னுடைய வாழ்வை வடிவமைத்ததில் பெரும்பங்காற்றிய இந்தப் பள்ளிக்காலத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.