title


மெளனம்


ஒவ்வொருமுறையும்
மிக மூர்க்கமாய்
தாக்கப்படும் போதெல்லாம்
அமைதியே அரணாகிறது !

தர்க்கங்கள்…
கேள்விகள்…
நிறுவப்படும் உண்மைகள்…
என எதிலும் இருப்பதில்லை
வதைத்ததற்கான தடயங்கள் !

வார்த்தைகள்
குத்திக்கிழிக்கும்
குருதியின்றி காயப்படுத்தும்
என்பதை வதைப்பவர்கள்
உணர்வதுமில்லை !

கேட்கப்படும்
ஒவ்வொரு கேள்விக்கும்…
நிறுவப்படும்
ஒவ்வொரு உண்மைக்கும்
இருக்கின்றன
பதில்களும்
பதில் கேள்விகளும்…
காயப்படுத்தும் வார்த்தைகள்தான்
எல்லோரிடமும் இருப்பதில்லை !

மட்டுமல்ல…
இதற்கெல்லாம்
புறக்கணிப்பைக் காட்டிலும்
மேலான பதில்
வேறென்ன ?

கண்ணாடி


என் கண்களை 
மறைத்தபடி
பச்சைக் கண்ணாடி…

உன்னிடமிருப்பதோ
சிவப்புக் கண்ணாடி…

காணும் பொருள்யாவும்
பச்சையென்று 
நான் மெய்யுரைக்க…


பச்சையல்ல சிவப்பென்று
நீயும் மெய்யுரைக்க…

பொய்களிரண்டும் சண்டையிட்டன…

சண்டையிடும் பொய்களிடையே
காண்பார் யாருமின்றி மெளனமாய்
இருந்தது உண்மை… வெண்மை !