title


Walking with ...



ஐந்து வருட கோவை வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சிகளுல் ஒன்று பேருந்துப்பயணம். ஒரு நாளில், ஏறத்தாழ இரண்டரை மணி நேரங்களை பயணத்தில் செலவளிப்பது எனக்கு ஒருவகையில் இலகுவானது. பெரும்பாலும் மனதுக்குகந்த செயல்களை பயணத்தில் செய்வது வழக்கம். புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, படங்கள் என இப்படி ஏதாவது ஒன்று; மனம் இவை எதிலும் லயிக்காத நாட்களும் உண்டு. பயணம் என்பதே மனதுக்குகந்த விசயமென்பதால், அந்நாட்களும் வேடிக்கை பார்ப்பதில் நிறையும். இப்போது மட்டுமல்ல, எப்பவுமே பயணம் எனக்கு மிகப்பிடித்த விசயம், அதிலும் வெறுமனே பயணியாக நம்மை ஓட்டுனர் கையில் ஒப்புக்கொடுக்கும் பேருந்துப்பயணங்கள் தனி சுகம்; அது பெங்களூர் நாட்களோ, சென்னை நாட்களோ பெரும்பாலும் மாதம் நான்கு முறை (அதை எல்லா சனி ஞாயிறுன்னும் சொல்லலாம்) திருப்பூருக்கு வந்த சாதாரண பேருந்து பயணங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் படிப்பு, பாட்டு, படம் என கழிவதால், நள்ளிரவுகளிலோ அல்லது அதிகாலையிலேயோதான் பயணத்தில் உறக்கம் வரும். அந்த உறக்கம் தரும் போதை ஒரு அற்புதம். அப்படி ஒரு அற்புத தூக்க நாள் கொஞ்சம் துக்க நாளாக மாறின சம்பவம் ஒண்றுண்டு.
.
அந்த சம்பவத்தின் வயது கிட்டத்தட்ட 7 வருடங்கள். சென்னையில் இருந்து சேலம் வந்தடையும் போது மணி நள்ளிரவு 1 இருக்கும். நிறைய கோவை பேருந்துகள் இருந்தன; அதிகம் கூட்டமில்லாத ஒரு பேருந்தில் பயணப்பட்டேன் அவிநாசிக்கு. அதிகாலை 4 மணியளவி்ல் அற்புத தூக்கத்தை கலைத்து என்னை எழுப்பினார் நடத்துநர், “தம்பி, அவிநாசி வந்திருச்சு, எறங்கு”; அரை விழி திறந்து பார்த்தவன், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரிடம் “ஒரு கோயம்புத்தூர்” என டிக்கட் வாங்கி காந்திபுரம் சென்று திரும்பிவந்த நாளின் தூக்கம் என் நினைவில் நிலைத்த ஒன்று.
*
அதன் பின் வேறெந்த பயணத்திலும் அதற்கிணையான அனுபவம் கிடைத்ததில்லை. கோவையிலிருந்து பூண்டி வரும் நாட்களிலும் சில சமயம் கரும்மத்தம்பட்டியோ, தெக்கலூரோ தாண்டி உறங்குவதுண்டு; ஆனால் அந்த உறக்கம் சரியாக அவினாசி வந்ததும் கலைந்துவிடும்; நானும் என்னென்னவோ யோசித்தும் புரிபடாத ரகசியம் அது. ஆனா அந்த பெருமையும் முந்தா நேத்தோட போச்சு(புதன் இரவு);


அது ஒரு தூக்கம் கலந்த பயணம்; தெக்கலூரில் கண் அசந்தவன் வழக்கம்போல அவினாசியில் முழித்தேன்; அடுத்த நிறுத்தம் பூண்டி அதற்கின்னும் 5-10 நிமிடங்கள் ஆகுமே அதுக்குள்ள ஒரு சின்னதூக்கம் என்ற அடிப்படையில் தூங்கினவன் முழித்தது பூண்டிக்கு அடுத்த நிறுத்தமான அம்மாபாளையத்தில். ஏறத்தாழ 1.5கி.மீ. தாண்டியாகிவிட்டது. தூக்கத்தில் நான் இறங்கிய ஸ்டைல் புல் போதையில் இருப்பவன் அட்டேன்சனின் நிற்பதுபோல தடுமாற்றமானது

*

நிக்கறதுக்கே துப்பில்லாத லட்சணத்தில் எப்புடிடா 1.5 கி.மீ நடக்கறதுன்னு மனசுக்குள்ள ஒரே ரோசன. ஆனா பாருங்க.. ”கடவுள் ஒரு கதவை அடைச்சா மறுகதவை தொறப்பாருன்னு” சொல்லுவாங்க; அது மத்தவிங்களுக்கு; நமக்கு எப்பவுமே ஜன்னலை அடைச்சுட்டு கதவு, ஷட்டர் எல்லாத்தையும் திறந்து வச்சுட்டு ”நீ வாழுடா மகனே” அப்படிம்பாரு. நிக்கக்கூட முடியாம தூக்கத்தில (Note this point தூக்கத்துல) தள்ளாடிட்டு இருந்தவன் வெகு மகிழ்ச்சியாய் 1.5 கி.மீ நடந்தேன். அதுக்கு காரணம் “மழை”. பெருமழையல்ல; கொஞ்சமே கொஞ்சம் பெரிதாய் விழுந்த செல்லத்தூரல்; முதல் சில நொடிகளிலேயே தூக்கம் தெளிந்துவிட, அவசரமேயில்லாமல் மழையில் நனைந்தபடி வீடடைந்தேன்.

*

மாற்றுத்துணி உடுத்தி அசதியில் படுக்கையில் சாய, அப்போதும் மண்ணுடன் முணுமுணுத்துக்கொண்டிருந்தது மழை.

:)

No comments: