title


766









”மாமா, எனக்கு படம் வரையறது கூட கஷ்டம்; என்னப்போயி..”







காரணங்களை நான் சொல்லத் துவங்கும் முன்பே இடைமறித்தார் தம்பி மாமா. “எதெடுத்தாலும் முடியாது, தெரியாதுன்னு சொல்லாம, ஒரு முயற்சி பண்ணிப்பாருடா”;







அப்போதைக்கு மாமா சொல்வதுதான் சரியென்று பட்டது. ஓரளவு நன்றாக படிப்பவன் என்ற பிம்பம் எனக்கு இருந்ததால் என்னை டாக்டர் ஆக்கிவிடும் கனவு மாமாவுக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் நான் வாங்கிய 416 மதிப்பெண்கள் அவருக்கு, “சரி பையன் ஓரளவு படிச்சுக்குவான்” என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது. அதன் வெளிப்பாடாக, மேல்நிலைக்கல்விக்கு பயாலஜி எடுக்கச்சொன்னார். எனக்கு மாமாவின் கனவு புரியும் என்பதால், ஒருவழியாக நானும் மனதளவில் பயாலஜியை கஷ்டப்படுத்தும் முடிவுக்கு வந்திருந்தேன். பத்தும் பத்தாததுக்கு, பள்ளியில் சேர்த்துவிட வந்திருந்த கிருஷ்ண மாமாவும் ”சரி, அப்படித்தான் நல்லா ஊக்கமா படிடா, நம்ம குடும்பத்துலயும் ஒரு டாக்டர் இருக்கட்டும்” என நம்பிக்கை ஊட்டினார். ஏற்கனவே தம்பி மாமாவிடம் பேசிமுடிக்கும்போது மானசீகமாக வெள்ளைக்கோட் அணிந்திருந்தவன், கிருஷ்ண மாமாவின் சொற்களைக் கேட்டதும் ஸ்டெதஸ்கோப்பையும் எடுத்துக்கொண்டேன். ஆயிரம் பேரைக் கொன்னு அரை வைத்தியன் ஆகும் முயற்சியில் இறங்காததும், “சிஸ்டர், அந்த ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க” என்று சொல்லாததும் மட்டும்தான் பாக்கி.




*




பதினொன்றாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வில் பயாலஜியில் நான் வாங்கிய 169 மதிப்பெண்கள்தான், மேல்நிலைக் கல்வியின் இரண்டு வருடங்களில் நான் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண் என்பது மட்டுமல்ல; நான் பயாலஜி பாடத்தில் மூன்று இலக்கத்தில் மதிப்பெண் வாங்கிய முதலும் கடைசியுமான பரிச்சையும் அதுதான். கிட்டத்தட்ட பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரிக்கும் அதே கதிதான். ஆக, என் வாழ்க்கையில் மருத்துவமனைக்கு, நேயாளியாகவோ அல்லது பார்வையாளனாகவோ மட்டுமேதான் போக முடியும் என்பது எனக்கு பதினொன்றாம் வகுப்பிலேயே தெரிந்துவிட்டது. அந்நிலையில் மட்டுமல்ல எந்நிலையிலும் என்னைக் கைவிடாத பாடம் “கணக்கு”தான். அதன் கருணையால் மட்டுமே 766 மதிப்பெண்களுடன் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன்.




*




இன்றும், அலுவலகத்தில், என் உடன் பணிபுரியும் நண்பர்களில் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தும், ”யோசிக்கறதெல்லாம் நமக்கு ஆவாது பாஸ்” என்பவர்கள் உண்டு. ஹிந்தியில் “ராஷ்ட்ரபாஷா” வரைக்கும் தேர்ச்சி பெற்றிருந்தும் “ஹிந்தி எனக்கு மாளாது ஹே” சொல்லும் நெருங்கிய நண்பன் எனக்குண்டு. அவ்வளவு ஏன், 170 க்கும் மேல் ஆங்கிலத்தில் மதிப்பெண் பெற்றிருந்தும் Spelling என்பதற்கே தப்பாய் Spelling எழுதும் நண்பர்களை நீங்களும் அறிவீர்கள்தானே (ஒடனே எம்பட நெனப்பு வந்துச்சுன்னா, அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல). பெரும்பாலும் இந்த மதிப்பெண்களும் தேர்வும் “Selection”னுக்காக அல்ல, “Filtering”குக்காக என்பது என் நம்பிக்கை. லிப்ட்டோ நடந்தோ மொத்தத்தில் மேலேறினால் போதும்தான்.




*




பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் வந்த உடனே எழுத நினைத்த விசயங்கள் இவை. ஆனால் இரண்டு மூன்று தினங்களாக கொஞ்சம் busyயாக இருந்துவிட்டதால் எழுதமுடியவில்லை. நமக்குத் தெரிந்த சில மாணவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கக்கூடும். அதை கடக்கவே முடியாத மிகப்பெரிய துக்கமாக அனுசரிப்பதும்; குறைவான மதிப்பெண்களால் “வாழ்க்கையையே WASTE பண்ணிட்டயே” ரீதியில் கவலைப்படுவதும் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன். எதிர்காலம் மனிதன் மனதில்தான் இருக்கிறதே ஒழிய, மதிப்பெண்களில் இல்லை; நிச்சயம் இல்லை.”




.




”நாமாய் விரும்பினால் ஒழிய, வீணாய்ப் போவதற்க்கும், வீணாக்குவதற்கும் வாழ்க்கை விடாது !”




.




வாழ்வோம் :)

No comments: