title


மழை.. மாமழை

சென்னையின் வெய்யில் காலங்களை விட மனதில் நிறைந்திருப்பவை அதன் மழை நாட்கள். அதுவும் கொஞ்சிப் பேசுவதைப் போன்ற மென்மழையில் நனைந்த தருணங்களை விடவும், அடிப்பதைப் போல கொட்டிய மழையில் நனைந்த நாட்கள்தான் அதிகம். மழையில் நனைவது என்னதான் சுகம் என்றாலும், அலுவலகம் செல்லும் மழை நாட்களில், கிட்டத்தட்ட ஒரு விண்வெளி வீரனைப் போல என் ஆயத்தம் இருக்கும். பெருங்குடி வீட்டிலிருந்து கிளம்பும்போது ஹெல்மெட், ரெயின்கோட், ஷீ என வெகுகவனமாக மழையில் நனைவதைத் தவிர்த்ததற்க்குப் பரிகாரம் போலத்தான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவேன். பெரும்பாலும் இரவு கிளம்பும்போது மழை சற்று தூரலாகத்தான் இருக்கும்; அதிவிரையில் அது கன மழையாய் மாறும் என்ற நிலை தெரிந்த போதும் ரெயின்கோட்டை கவனமாகத் தவிர்த்த பயணங்கள் அவை. வெய்யிலானாலும் மழையானாலும் சென்னை extremeதான். ஒரளவு தரமானவைதான் OMR சாலைகள், ஆனால் அந்நாட்களில், நான் இரு சக்கர வாகனம் ஓட்டியது தார் சாலையில் அல்ல; நீர் சாலையில். பழக்கப்பட்ட பாதை என்பதால் மேடு பள்ளங்களை மனதறியும்; கிட்டத்தட்ட தானே வீடடையும் மாட்டு வண்டியைபோல, Yamaha gladiator ஓடிக்கொண்டிருக்கும். மனதோ மழையில் லயித்திருக்கும். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த கதை.
***
கோவை வந்த இந்த ஐந்து வருடங்களில் பெருமழையில் நான் நனைந்த நாட்கள் கிட்டத்தட்ட ஏதுமில்லை. பொதுவாக, சிலசமயம் இரவில் அலுவலகம் விட்டு கிளம்பும்போது மென் தூரல் இருக்கும்; ஆனால் சரவணம்பட்டியில் பார்த்தால் மழை பெய்த சுவடே இருக்காது. கடந்த திங்கள் இரவு அந்த நம்பிக்கையில்தான், கொஞ்சம் வலுத்த மழையில் அலுவலகத்திலிருந்து வண்டியை கிளப்பினேன். சரவணம்பட்டி காவல் நிலையம் கடக்கும் வரை எந்த வேறுபாடும் காட்டாத மழை, அதன் பின்னர் ஆடியது ஒரு 20- 20 போட்டியின் இறுதி ஓவர்கள். பெருந்துளிகள் பாதையை மறைக்கலாயின; அணிந்திருந்த ஆடைகளைத் தாண்டி ஈரம் மெய் தீண்டலானது. ஆரம்பத்தில் இருந்தது மெல்லிய சில்லிப்பின் அசெளகரியம்; முழுவதும் நனைந்த பின்னர் அதுவே அழகானது. சித்ரா பேருந்து நிலையத்தில் இருந்த பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும் போது கிட்டத்தட்ட குளித்திரு்ந்தேன். பேருந்தில் பூண்டி வந்து சேரும்வரை, ஜன்னலில் தெரிப்புகளாய், மண் வாசமாய், காற்றில் ஈரமாய் உடன் வந்தது மழை.
*
மண் குளிர்ந்தது கூடவே மனமும்...

No comments: