title


Speed - Limited :)



நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ அல்லது தனியாகவேயேனும் பயணங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமானது. உற்ற நண்பர்கள் துணையுடனோ, அந்நிலை வாய்க்காத போது மனம் கவர்ந்த பாடல்களின் தொகுப்பு நிரம்பி இருக்கும் “Pendrive”ன் துணையுடனோ நீண்ட பயணங்கள் சென்றிருக்கிறேன்.

*

”அண்ணா, படம் 4 மணிக்கு; டைமண்ட் தியேட்டர் வந்திருங்க, நாங்க ஊத்துக்குளியிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம்” ஹரீஷ் என்னிடம் சொன்னபோது பிற்பகல் 2:30 மணி இருக்கும். அலுவலக தோழர் ஒருவரின் புதுவீடு கெடா வெட்டுக்கு சென்றிருந்த நான் இருந்தது ஈரோட்டில். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது மணி 2:45 இருக்கும். நசியனூர் பைபாஸ்லில் இணைந்த சற்று நேரத்தில் மீண்டும் அழைப்பு ஹரீஷிடமிருந்து.
“அண்ணா நாங்க இப்பதான் கிளம்புறோம்; நீங்க எங்க இருக்கீங்க?”
“தம்பி, நான் வரதுக்கு நேரமாயிரும்ன்னு நினைக்கிறேன்; நீங்க போங்க நான் தியேட்டர்ல வந்து Joinபண்ணிக்குறேன்” என்றேன். அதன் பின்னர் ஓட்டு ஓட்டு என ஓட்டி ஒருவழியாக தியேட்டருக்குள் கார் நுழையும் போது மணி 3:55. அதுவல்ல விசயம். ஊத்துக்குளியிலிருந்து சகலைகளும், ஹரீஷ்ம் எனக்கு சற்று முன்னர்தான் வந்திருந்தார்கள். ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் நானும் என்னை உணர்ந்த தருணம் அது. என்னதான் வேகமென்றாலும் ஒருபோதும் நான் risk எடுத்ததில்லை. ஏன்னா, அடிப்படையில நான் கொஞ்சம் (அருணாவுக்கு?!) பயந்தவன்.
*
அதைபோலவேதான் நேற்று அலுவலக நண்பன் ஒருவன் திருமணத்துக்கு சேலம் சென்றிருந்த பயணமும். திருமணம் முடிந்த பின்னர் திரும்பி வரும் வழியில் கொஞ்ச நேரம் நானும் அலுவலக நண்பர் ஒருவரும் ரேஸ் விட்டோம். இந்த ரேஸ் கண்மூடித்தனமாக அல்ல; ஆங்கிலத்தில் “Calculative Risk” என்பார்களே, அவ்வகையில் சேர்ந்தது. முந்துவது அல்ல நோக்கம். “ஜி, நீங்க முன்னால போன லாரிய பாக்கவேயில்ல, கொண்டுபோய் மோதிருவீங்கன்னுதான் நினைச்சேன்”, அதுவரைக்கும் நன்றாக பேசிக்கொண்டுவந்த நண்பர் கார்த்திக்கின் குரலில் இருந்தது திகில். அப்போதுதான் இரண்டு லாரிகளுக்கிடையேயான இடைவெளியில் நுழைந்து திரும்பியிருந்தேன். அதைபோலவே சில பல ஜெர்க்குகளுக்குப் பிறகு ஒருவழியாக அவரை ஊத்துக்குளியில் இறக்கிவிட்டேன். எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை; அதிலும் Drive செய்வது இன்னும் இன்னும் பிடித்தது. அப்படித்தான் நேற்றைய பயணமும்.
*
இன்று காலை ஊத்துக்குளியிலிருந்து பூண்டி வரும்போது அருணாவிடம் இந்த கதையை சொன்னேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டவள், வழக்கம்போல இறுதியாக ஒரு சிக்ஸர் அடித்தாள் “சூப்பர், இந்த கதையை அப்படியே அத்தை (என் அம்மா)கிட்ட சொன்னா, அதுக்கப்புறம் கார் சாவியை நீங்க தொடக்கூட முடியாது”
.
என் முகத்தில் எப்போது பல்ப் எரிந்தாலும், அதை அக்கணமே ப்யூஸ் போக வைக்கும் வித்தை கற்றவள் அருணா :)

No comments: