title


பாதாம்...கூடவே ஒரு பல்டி



கோபம் இருக்கும் இடத்துலதான் குணம் இருக்கும். நம்மள ஒருத்தர் ரொம்பவும் திட்டினாலோ அல்லது அடிச்சாலோ, அவங்களுக்கு நம்ம மேல பாசம் அதிகமுன்னு அர்த்தம். எப்பயுமே அப்பாவே அம்மாவோ என்னை அடிச்சதோ, பெரிய அளவில் திட்டினதோ இல்ல. திரைப்படங்கள்ல வர மாதிரி தர்ம அடி வாங்குற அளவுக்கு நான் நடந்துகிட்டாலும் அருணா (இன்னும்) அந்த லெவலுக்கு போகல (பப்ளிக்ல அப்படித்தான் சொல்லமுடியும்கறது வேற விசயம்). என்னதான் கோவம் வந்தாலும் கார்த்திக்கும் நம்ம மேல கைவச்சதில்லை. அப்ப ”அடிக்கிற கைதான் அணைக்கும்”ன்னு பீலிங்க்ஸ் காட்டவைச்சது யாரு ?.
வேற யாரு என் மகள் கிருத்திகாதான்.
.
பாப்பா, (குறிப்பா என்னை) அடிக்கற விசயத்துல கிட்டத்தட்ட ஒரு விஜயசாந்தி மாதிரி. அதுலயும் அவள் ஏதாவது தப்பு பண்ணிட்டா, நாம அடிக்கறதுக்கு முன்னாடி நம்மள அடிச்சுட்டு, நாம் அந்த அதிர்ச்சில நிக்கும் போது, “அப்பா, திட்டிட்டாரு”ன்னு கண் நிறைக்கும் கண்ணீருடன் என் அப்பாவிடமோ, அம்மாவிடமோ குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பாள். அப்புறமென்ன, அடிச்சவள சமாதானப்படுத்த, வீடே சேர்ந்து என்னை கழுவிக் கழுவி ஊத்தும் கொடுமையும் நடக்கும். கோப ஸ்டோரி போதும், இப்ப குணத்துக்கு வருவோம். என்னதான் தர்ம அடி கொடுத்தாலும் , பாப்பாவுக்கு அப்பான்னா Specialதான். பல் விளக்கி விடுறதுல இருந்து, சாப்பாடு ஊட்டுற வரைக்கும் நான் செய்யும் போது கொஞ்சம் சமத்தா இருந்துக்கிறாள் என்பது வீட்டில இருப்பவர்கள் கண்டறிந்த உண்மை (அல்லது, அப்படி சொல்லியே எந்தலைல வேலைகளை கட்டுற வித்தையோ?!). அதை நானும் உணர்ந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் நடந்தது.
.
இரவில் ஊற வைத்த பாதாம் பருப்பை காலையில் கார்த்திக்கும், கிருத்திகாவுக்கும் தருவது வழக்கம். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு நாள் (அந்தனைக்கு பாப்பா, காலைல இருந்தே அப்பா, அப்பான்னு ஒரே கொஞ்சல்ஸ்), ஊற வைத்த பாதாம் பருப்பை கிருத்திகாவுக்கு ஊட்டினேன். இரண்டு முறை மென்ற பின் பாப்பா சொன்னாள்
“அப்பா, பாதாம் நீங்க ஊற வச்சதா?, ரொம்ப சூப்பரா இருக்கு”


“இல்ல பாப்பா, அம்மா ஊற வைச்சிருப்பாங்க” என்றேன். அட தர்மேந்திரா என அதிர்ச்சி reaction காட்டினவள்; அடுத்த நொடியிலேயே, அம்மாவிடம் சென்றவள், கொஞ்சம் கோவமாக கேட்டாள் “ஏம்மா, நீயா பாதாம் ஊற வச்ச?”. எங்கள் உரையாடலை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்த அம்மா ஒரு பாராட்டை எதிர்பார்த்தவாறே சொன்னார் “ஆமா, தங்கம்”;


“பாதாம் நல்லாவே இல்ல; நல்லா கலக்கி ஊற வைக்கோணூம்” என் மெல்லமாய் ஒரு அடி வைத்தாள், எப்போதும் நான் காட்டும் “அடிப்பாவி” reaction இப்போது அம்மாவிடம்.

:)

No comments: