title


துளிர்



எனக்கு “யாக்கை திரி, காதல் சுடர்” ரீதியிலான அதிரடிப்பாடல்கள் எவ்வளவு போதை தருமோ, அதற்கிணையாக… இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக “மலர்கள் கேட்டேன்; வனமே தந்தனை” என மனம் வருடும் பாடல்கள் மிகவும் நிறைவைத் தரும்.

*

அக்கா வீட்டில் நடைபெறும் ஒரு விசேசத்துக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க இன்று பொள்ளாச்சி சென்றிருந்தோம். காலை 10 மணியளவில் பூண்டியில் இருந்து கிளம்பி, காரணம்பேட்டை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியிலும் அதன் அருகிலும் பல உறவினர் வீடுகளை அழைத்து முடிக்கையில் மணி மாலை 5 இருக்கும். அடுத்து என் பெரியப்பா ஒருவரை அழைப்பதற்காக உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள ”கோமங்கலம் புதூர்”க்கு செல்வதாக திட்டம். பொள்ளாச்சி சுங்கத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு 15 கி.மீ சென்றபின் “கோமங்கலம்புதூர்” என வழிகாட்டப்பட்டிருந்த இடத்தில் இடப்புறமாக திரும்பி செல்லத்துவங்கினோம். கிராமங்களுக்கிடையே செல்லும் பாதை அது. ஒரு பேருந்து மட்டுமே செல்லுமளவு அகலம் கொண்ட அப்பாதை நீண்டது சற்றேறக்குறைய 8 கி.மீ.கள்.
.
சமீப காலங்களில் செல்லும் பயணங்களில் எல்லாம் நிறைந்திருக்கும் ஒரு பொதுவான அம்சம், நிலத்தில்.. செல்லும் இடங்களில் கண்ணுறும் வெம்மையும் வெறுமையும். அதன் பாதிப்பு மனதில் ஏற்படுத்தும் சலனங்களை, சமன்படுத்தும் விதமாக மழையோ, மழலையோ, நண்பர்களோ குறைந்தபட்சம் பாடல்களோ அந்தந்தப் பயணங்களில் அமைந்துவிடுவது என் நல்லூழ். இந்தப்பயணம் அப்படியல்ல, அவற்றைகாட்டிலும் மேம்பட்டது. மேற்சொன்ன 8 கி.மீ.களும் நாங்கள் மட்டும் பயணப்படவில்லை. எங்களுடன் பயணப்பட்டது பசுமை. சாலையின் இருமருங்கிலும் பெரும்பாலும் இருந்தவை தென்னைமரங்கள். தென்னைமரங்கள் குறையும் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவை கொய்யா மரங்கள், எள்ளுச்செடி மற்றும் தானியப் பயிர்கள்.
.
மொத்தத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருந்தது பசுமை. கடந்த ஓரிரு வாரங்களாக பொள்ளாச்சியின் சுற்றுப்புறங்களில் (மாலையில்) பெய்யும் நல்ல மழையின் தானம் இந்தப்பசுமை.
அகலம் குறைவான சாலையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மிக மெதுவாகத்தான் அந்த 8 கி.மீ.களும் கார் ஓட்டினேன். வேகமாக கார் ஓட்டும்போது கிடைப்பது ஒரு போதை; ஆனால் இன்று அமைந்தது போன்ற நிறைவான பாதைகளில் / தருணங்களில் கார் தானே ஓடுவதுபோல் மெதுவாக ஓட, மனம் லயிக்கும் பயணம் தருவது நிறைவு.
*
வறட்சி பற்றிய செய்திகளாலும், வெடித்துக்கிடக்கும் நீர் நிலைகளாலும் நிரம்பிய சமீப நாட்களின் சோகம் கொஞ்சம் மாற, இன்றைய பயணம் நம்பிக்கை விதைத்தது.


”நம்பிக்கையே நல்லது; எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது”

(“அகரம் இப்போ சிகரம் ஆச்சு” பாடல் வரிகள் – வைரமுத்து – படம்: சிகரம்)


:)

No comments: