title


பாகுபலி-2



சனிக்கிழமை இரவு திருப்பூர் டைமண்ட் தியேட்டரில் இரண்டாவது முறையாக “பாகுபலி-2” பார்த்தேன். இம்முறை குடும்பத்துடன். கதை, திரைக்கதை, இசை, பிரம்மாண்டம் என ஜாம்பவான்கள் பலமுறை விவாதித்த விசயங்களைப் பற்றியதல்ல இப்பதிவு. மாறாக, இப்படத்தில், என்னைக் கவர்ந்த ஒரு பாத்திரப்படைப்பு (Characterization) பற்றிய சிறு பகிர்வு. அது, தன் மகனுக்கும் மேலாக இன்னொருத்தி மகனைக் கருதிய ராஜமாதா சிவகாமியோ, அன்னை கற்றுத்தந்த தர்மத்தின் வழி நின்று அன்னையையே எதிர்த்து நின்ற பாகுபலியோ, எந்நிலையிலும் விசுவாசம் மாறாத கட்டப்பாவோ அல்ல; எந்நிலையிலும், யார் முன்னும், எதன் பெருட்டும் தன் சுயம் விட்டுத்தராத ”தேவசேனா”. அந்த பாத்திரப்படைப்பும், அவள் பேசும் வசனங்களும் அட்டகாசம்.

*

தன் மண்ணுக்கு நலம் பயக்கும் என்ற போதிலும், பொன் மலை குவித்து மணம் பேச வந்த போதிலும், தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் சிவகாமிக்கு பதில் மடல் எழுதும் தருணம்; என்னதான் தன் மனம் கவர்ந்தவனாக இருந்தாலும், அவனே மகிழ்மதியின் முடி இளவரசனாக இருந்தபோதிலும், போர்த்திறம் பொருந்திய மாவீரனான போதும், பாகுபலியுடன் கைதியாக செல்ல மறுக்கும் காட்சி, பெண்ணின் விருப்பம் அறியாமல், தன் மகனுக்கு வாக்கு தந்த சிவகாமியை, அவள் நாட்டு அரசவையிலேயே எதிர்த்துப் பேசுவது, தனிப்பட்ட வஞ்சத்தால் தன் கணவன் பதவி பறிக்கப்படும் போது, அதைக் கண்டு, தவறு எனத்தெரிந்தும் மெளனமாயிருக்கும் சிவகாமியை நோக்கி நேர்படப் பேசுவது என பல காட்சிகளில் தேவசேனையின் ஆளுமையின் காட்சியமைப்பு அட்டகாசம்.

*

அதே சமயம், மகிழ்மதி பேரரசின் ராஜமாதாவை கோவப்படுத்தும் விதமாய் தன் தங்கை மடல் எழுதும் போது, அதை தடுக்கக் கோருபவர்களிடம் குந்தல நாட்டு மன்னர் சொல்லும் “அது அவள் விருப்பம்” என்னும் ஒற்றை வசனத்தில் அவளின் ஆளுமைக்கு கிடைக்கிறது அங்கீகாரம். சமகாலத்தில் நாம் கடந்து வரும் ”கொஞ்சம், அனுசரிச்சு போம்மா”, “பொண்ணுக்கு இவ்வளவு திமிரு ஆகாது”, “எல்லாம் போக போக சரியாயிரும்; கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுங்க” தருணங்களால், தேவசேனையின் அண்ணன் characterம் அந்தக் காட்சியும் முக்கியமாய் தோன்றியது. அதைப்போலவே, என்னதான் பாசமான மனைவியாய் இருந்தாலும், பொது அரங்கில் தன் அன்னையை எதிர்த்துப் பேசுவதையும்; தன் தேசத்தின் சட்டதிட்டங்களை விமர்சிப்பதையும் தடுக்காமல் அதிலுள்ள நியாயத்தின் பொருட்டு அமைதிகாக்கும் பாகுபலியின் Characterம் அருமை.

*

சமீபத்தில் பார்த்த ”காற்று வெளியிடை” படத்தின் நாயகி அதிதீயின் பாத்திரப்படைப்பும் காதலனே ஆனாலும், தன் சுயமரியாதையை விட்டுத்தராத ஒரு பெண்ணாய் அமைக்கப்பட்டிருந்ததாலோ (தேவசேனையின் ஆளுமை அளவுக்கு காட்சிப்படுத்தப்படாத போதும்) என்னவோ, படம் பார்த்துமுடித்த பின் தேவசேனை குறிந்த காட்சிகளை நினைக்கும்போது அதிதீயின் பாத்திரமும் நினைவுக்கு வருகிறது

*

சரி, இப்ப நம்ம சோகக் கதைக்கு வருவோம்; நான் பாகுபலி-2 திரைப்படத்தை இரண்டாவது முறை பார்ப்பதால், அருகிருந்த அருணாவிடம் தேவசேனா வரும் மேற்சொன்ன காட்சிகளில், “ஹே, இப்ப ஒரு வசனம் வரும் பாரு; அவ கோவத்தை கவனி” ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டிருந்தேன். ஒரிரு காட்சிகளை மிக அமைதியாய் உற்று கவனித்தாள்; மூன்றாம் முறை அதைப்போலவே சொல்ல முற்பட்ட என்னை இடைமறித்து (படத்துக்கு கூட்டிட்டு வரதே எப்பயாவது ஒருக்கா, இதுலயும் பாக்கவுடாம தொண தொணன்னு பேசிட்டே இருக்கிறேன் என்ற கோபத்தில் ??) சொன்னாள், “அவ கட்டியிருக்கற சேலை சூப்பரா இருக்குல்ல, அத மொதல்ல Note பண்ணுங்க”


அந்த AC தியேட்டரிலும் எனக்கு குப்பென்று வியர்த்ததன் காரணம் கல்யாணமான பசங்களுக்கு மட்டும்தான் புரியுமுங்க :)

No comments: