title


கூழாங்கல் நினைவுகள்

மிக நீண்ட நாட்கள் கழித்து
சாதாரணமாகத் துவங்கும்
ஒரு உரையாடலின் வழி
உயித்தெழுகிறது பள்ளிக்காலம்

*
சிரிப்பால் நிரம்பிய வகுப்பறைகள்
செல்லச் சண்டைகள் போட்ட மரத்தடிகள்
வேடிக்கை பார்த்திருந்த ஆய்வகங்கள்
வெறுமனே பேசித்தீர்த்த தனிப்பயிற்சி
மாலை நேரத்தின் பெருநடைகள்
மறக்கமுடியா சில நபர்கள்
விசனத்தில் கழித்த தேர்வறைகள்
விரும்பிச் சுமந்த சில வலிகள்
மானம் பறக்கும் மதிப்பெண்கள்
என
மனதை நிறைத்த நினைவலைகள்
*
முன்பொரு நாள் ஆற்றின் ஆழத்தில்
தனித்து விழுந்தது
ஒரு கனத்த கூழாங்கல்...


பின்பொரு தருணம் நினைவுகளின்
தீண்டலால்
அது தன் எடையிழந்து மேலெழுந்தது…
.
பள்ளியின் நினைவுகள் மீண்டெழுந்தோறும்
உடன் வருகிறது
ஒரு பிஞ்சுக்குழந்தையின்
மென்பாதம் முத்தமிடும் பரவசம்

No comments: