title


வால்பாறை



“ஒண்ணுமே சொல்லாம இருந்தா எப்படிப்பா ? நான் என்ன பண்ணுறது?” எனக் கேட்ட அருணாவை ஸ்டைலாக (பார்ப்பதாக நினைத்துக்கொண்டு) பார்த்துக்கொண்டே சொன்னேன், “உனக்கென்ன அதப்பத்தி, லீவு போடு; மத்தத நான் பாத்துக்கறேன்…” இப்படித்தான் துவங்கியது அருணாவின் பிறந்தநாள் Special Trip. நேற்றிரவு வரை எந்த இடத்துக்குப் போகிறோம் என்பதைகூட தெளிவாக முடிவு செய்திருக்கவில்லை. எல்லோரும் தெளிவாய் இருந்த ஒரே விசயம் நாளைக்கு அருணா பிறந்தநாள், எங்காவது Trip போறோம் என்பது மட்டுமே. ஏற்காட்டில் துவங்கி, புன்னகை மன்னன் அருவி, ஊட்டி, கொடிவேரி, பவானி சாகர் அணை என ஏதேதோ திட்டமிட்டு, இறுதியாக இன்று காலை 7:30 மணிக்கு நாங்கள் குடும்பத்துடன் கிளம்பியது வால்பாறைக்கு.

*

பூண்டியிலிருந்து மங்கலம், பல்லடம், பொள்ளாச்சி வழியாக ஆழியாறு அறிவுத்திருக்கோவிலை கடக்கையில் மணி 9:15 இருக்கும். நாங்கள் திட்டமிட்டிருந்த முதல் இடம் “Monkey Falls” வந்தது, எங்கள் கார் கொஞ்சம் Slowஆவது தெரிந்தவுடன், அருவி முன்பிருந்த கோவிலில் அமர்ந்திருந்த காவலாளி சொன்னார்; “ நிறுத்த வேண்டியதில்லைங்க… சொட்டுத் தண்ணியில்லீங்க சார்”. தன் பிறந்தநாளுக்கு Tripபோகும் அதிர்ச்சியிலிருந்தே மீளாத அருணாவுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி. என்னைப் பொருத்தமட்டில் அடியையும் சரி அதிர்ச்சியையும் சரி (வேறு வழியில்லாமல்!) அனுபவமாய் கருதுவதால், ”பயணம்தான் முக்கியம்; இலக்கில்லை” எனும் தத்துவத்தை (தூங்கிக்கொண்டிருந்த) எல்லோருக்கும் புரியும்படி சொல்லியவாறே, மலைப்பாதையில் கார் ஓட்டத்துவங்கினேன். 40 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதை, மிகவும் பொறுமையாகவே வண்டி ஓட்டினேன். 11ஆவது வளைவில் இருந்த View Pointல் நிறுத்தி ஆழியாறு அணையைப் பார்த்தோம். கொஞ்சமே தண்ணீர் இருந்த அணையும், சொட்டுத்தண்ணீர் இல்லாத குரங்கு அருவியும் நாம் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் சாட்சியாகத் தோன்றின. சங்கடம் நிறைந்த மனதுடன் மீண்டும் பயணம் துவங்கியது; வேறெங்கும் நிற்காமல், நாங்கள் செல்வதாய் திட்டமிட்டிருந்த “கூழாங்கல் ஆற்றை” அடையும் போது மணி 11 இருக்கும்.

.

வால்பாறை பஸ் டிப்போ தாண்டி சென்றால் கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவில் வரும் ஒரு பாலம்; பாலத்தின் அடியில் கூழாங்கல் ஆறு. பாலத்தில் இடப்புறம் அதிக ஆழமாக இருப்பதால்; வலப்புறம் ஆழம் மிகவும் குறைவாக இருந்த இடத்தில் நானும், கார்த்திக்கும், கிருத்திகாவும் அப்பாவுடன் இறங்கினோம். தண்ணீர் எங்கோ ப்ரீஸரில் இருந்து வருவதாகத் தோன்றுமளவு சில்லிட்டிருந்தது. கிருத்திகா முதலில் தண்ணீரில் இறங்க மறுத்ததும், பின்னர், கிளம்பும் தருவாயில் தண்ணீரை விட்டு எழ மறுத்ததும் என ஏக ரகளை. கார்த்திக் தண்ணீரைக் கண்டால் மீனாகும் ரகம். என்ன கரைக்கருகிலேயே நீந்தும் மீன். 2 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து ஏறத்தாழ 12 கி.மீ தொலைவில் இருக்கும் ”நீரார் அணைக்கு” பயணப்பட்டோம். அங்கும் தண்ணீர் குறைவுதான்; போதாததற்கு நாங்கள் அங்கு சென்று இறங்கவும், மழை மண்ணிறங்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் மட்டுமே அங்கிருந்தோம் பின்னர் வானிலை கொஞ்சம் இருட்டடிக்கத்துவங்கியதால், திரும்பலானோம். இந்த அணைக்கு வரும் வழியில் ரோடு இருந்ததை விட, குழிகளும், கற்களும் இருந்ததே அதிகம். கிட்டத்தட்ட ஒரு சாகசப்பயணம் செல்வதற்கிணையாய் இருந்த பயணம் அது.

.

கொஞ்சம் துளிக்கத் துவங்கியிருந்த மழை, இரவுக்குள் வீடு திரும்ப வேண்டிய சூழல் போன்ற காரணங்களால், வால்பாறையை விட்டு கிட்டத்தட்ட 3 மணியளவில் இறங்கத்துவங்கினோம். அணைக்கட்டை விட ஆற்றில் நாங்கள் மகிழ்ந்திருந்தோம்; அது ஒருவகையில் இந்த பயணம் மோசமில்லை என்ற நிறைவைத்தந்தது.

.

திரும்பி வரும் வழியில் விட்டு விட்டுப் பெய்த மென் தூரல், பயணத்தின் அழகை இரட்டிப்பாக்கியது. வால்பாறை மலையிறங்கி பொள்ளாச்சி ரோட்டில் விரைகையில் மணி 5 இருக்கும். பொள்ளாச்சிக்கு சற்று முன்னர் சுங்கத்தில் இருக்கும் “தாஜ் பிரியாணி” ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம்; இந்த நாளில் அடுத்த கொண்டாட்டம் “பிரியாணி”. அளவான மசாலா, அட்டகாசமான பிரியாணி கூடவே பெப்பர் சிக்கன் , மட்டன் கொத்து என ரகளையான கூட்டணி. நிறைவான உணவு.

*

அதுவரை இந்த நாள் சிறப்பாய்த்தான் இருந்தது. அதன் பின்னர்தான் வெகு சிறப்பாய் மாறியது. அதுவும் உணவகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்தவுடனே. வேறென்ன, மழைதான்; வெறும் மழையல்ல மாமழை. சுங்கம் துவங்கி, நெகமத்துக்கு சற்று முன்பு வரை பெய்தது பெருமழை. கொஞ்சம் இடி, மின்னல், கூடவே செமயான காத்து என பெய்யெனப் பெய்தது. முன்னால் செல்லும் ஓரிரு வண்டிகளில் Danger Lightன் ஒளியை மட்டுமே கணக்கிட்டு கார் ஓட்டியது ஏறத்தாழ 40 நிமிடங்கள்தான் என்றாலும், பெருமழை தந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது. நெகமம் தாண்டி மழை சுத்தமாய் இல்லை. களைத்துபோய் வீடு திரும்புகையில் மணி 7:40 ஆகியிருந்தது.

*

இன்றைய பயணத்தின் பெருஞ்சிறப்பே மழைதான் என்று தோன்றியது.


அருணாவும் நினைத்திருக்கக்கூடும், “கல்யாணமாகி இவ்வளவு வருசத்துல, என்னைக்குமில்லா திருநாளா திடீர்ன்னு, பொறந்தநாளைக்கெல்லாம் Tour கூட்டிட்டு போனா, மழை மட்டுமா வரும், வானமே இடிஞ்சு விழும்…”


மீண்டும் ஒருமுறை ”ஹேப்பி பொறந்தநாள் அருணா “ Aruna Kalees :)

No comments: