title


மரகத நாணயம்

வேலை கொஞ்சம் சீக்கிரமாய் முடிந்துவிடும் தருணங்களில் பெரும்பாலும் கோவையிலேயே இரவுக்காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். என்னுடைய ரசனை புரிந்த காரணத்தால் (அல்லது, இவன் சொன்னாலும் கேட்கமாட்டான் என்பது புரிந்து, தண்ணி தெளிச்சு விட்டுவிட்டதால்) அப்பாவும் அருணாவும் எளிதில் அனுமதித்துவிடுவார்கள். பொதுவாக மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது அப்படி இரவுக்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வழக்கம் கடந்த 6 – 7 மாதங்களாக இல்லாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அலுவலக நண்பர்களுடன் இரவுக்காட்சிக்கு கோவை சத்யம் சினிமாஸ்க்கு சென்றிருந்தேன். படம் “மரகத நாணயம்”.
*
பேரழகியான நாயகி படம் முழுவதும் பேசுவதோ நாம் சற்றும் எதிர்பாரா விதத்தில், தமிழாசிரியர் பாத்திரம், ஒவ்வொரு நிகழ்வுக்கும் அட்டகாச ரியாக்ஷன் காட்டும் முனீஸ்காந்த், மற்றவர்களுடன் ஆனந்தராஜ் டீல் பேசும் வழிமுறை, அவரது அடியாட்கள் என படம் முழுவதும் சுவாரசியங்கள். ஆரம்பத்தில் சில காட்சிகள் தவிர, படம் எந்த இடத்திலும் தொய்வின்றி அற்புதமாக நகர்கிறது, இது ஒரு பேய்ப்படம். பொதுவாக ஏழுகடல் ஏழுமலை தாண்டி எவனாவது பேய்ப்படம் பாத்தாலே, கண்ணையும் காதையும் பயந்து மூடிக்கொள்ளும் தைரியசாலி நான். ஆனால், இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வாய்மூடாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக இப்படி சிரித்துகொண்டு (பயந்துகொண்டும்) பார்த்த ஒரு (பேய்ப்)படம் “யாமிருக்க பயமே”. இந்தப்படமும் அப்படியொரு ரகளையான காம்பினேசன்தான். அதிலும் குறிப்பாக முனிஸ்காந்த் வரும் காட்சிகளிலும், ஆனந்தராஜ் வரும் காட்சிகளிலும் கண்ணில் நீர்கோர்க்குமளவு, வயிறு வலிக்க வலிக்க சிரித்து மகிழ்ந்தோம்.
*
மரகத நாணயம் – தவறவிடவேண்டாம்; இன்புற்றிருக்க ஒரு நல்வாய்ப்பு  :)

No comments: