title


ரெண்டோடும் சேராத பொன் நேரம்

அப்போது நான் படித்துக்கொண்டிருந்தது பதினொன்றாம் வகுப்போ, பனிரெண்டாம் வகுப்போ நினைவில்லை. ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப்பொழுது என்பது மட்டும் நினைவிருக்கிறது. காரணம் மத்தியானம் சாப்பிட்ட கறிக்கொழம்பு. உண்ட களைப்பில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினார் அப்பா. கொஞ்சம் பலமாகத் தட்டியதால் உடனே எழுந்துவிட்டேன். என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் டிவியை ஆன் செய்து சன் ம்யூசிக் சேனல் வைத்துவிட்டு, என்னை முறைத்தபடியே கடைக்குள் சென்றுவிட்டார். அந்த சேனலில் அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது எனக்கு மிகப்பிடித்த பாடல். இப்போது போல Youtubeம், தொடுதிரை கைப்பேசிகளும் இல்லாத காலம் அது; நமக்குப்பிடித்த பாடல்களை இந்தமாதிரியான தருணங்களில்தான் கேட்கமுடியும். அந்த extra மகிழ்ச்சியில் சட்டென்று தூக்கம் கலைந்தவனாக அந்தப்பாடலை மெய்மறந்து பார்க்கத் துவங்கினேன். பாடல் முடிந்த பின்னர்தான் எனக்கு அந்த முக்கியமான கேள்வி தோன்றியது. “ஆமா, நமக்கு அந்தப்பாட்டு புடிக்கும் செரி. அதெப்படி அப்பாவுக்குத் தெரியும் ?” எவ்வளவு யோசித்தாலும் விடை கண்டுபிடிக்க முடியாதிருந்த அந்தக்கேள்விக்கு பதில் அன்றிரவே எனக்குத்தெரிந்தது.
*
அப்பா எதற்குமே என்னை அடித்ததேயில்லை, திட்டிய சந்தர்ப்பங்களும் மிக மிகக் குறைவு. அதுதான் அப்பாவின் ஸ்டைல்; என்மீது ஏதாவது கோபம் என்றால் என்னிடம் பேசமாட்டார். ஒன்று நான் சமாதானப்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் அவரே தானாக சமாதானமடைய வேண்டும் அவ்வளவுதான். அன்றிரவு, கடை மூடியபின்னர் அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் என்னை எழுப்பி அந்தப்பாடலை பார்க்கவைத்த பின்னர் அப்பா என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என்மீது செம கோபத்தில் இருக்கிறார் எனப்புரிந்தது. அப்போதும் என்ன காரணத்தால் கோபம் என்பது தெரியவில்லை. சரி கொஞ்சமாவது நல்ல பேர் எடுக்கலாம் என்று பக்கத்து அறையில் நான் படிப்பதாக பாவ்லா காட்டிக்கொண்டிருந்தேன். கண் வெறுமனே புத்தகத்தில் நிலைத்திருக்க, என் உடம்பில் இருந்து காது மட்டும், அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்த விசயத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தது. என் பெயர் அதில் அடிபட்டதுதான் அத்தனை உன்னிப்புக்குக் காரணம்.
.
அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்…
“இவன் கூடப்படிக்கற பொண்ணு போன் பண்ணி, அங்கிள் காளீஸ் இருக்கானான்னு கேட்குது. நான் அவன் தூங்கறான்மான்னு சொல்றேன். அதுக்கு அந்தப்பொண்ணு சொல்லுது, பரவாயில்லை அங்கிள் அவனை எழுப்பி சன் ம்யூசிக் பாக்க சொல்லுங்க, அவனுக்கு புடிச்ச பாட்டு ஓடிட்டு இருக்குன்னு. கடை யாவாரத்தை உட்டுட்டு இவனை எழுப்பி அந்தப்பாட்டை போட்டுவிட்டு நான் கடைக்கு வந்திட்டேன். இவனெல்லாம் ஸ்கூல்ல என்ன லட்சணத்துல படிப்பான்னு பாரு”
.
வெகு வேகத்தில் பேன் சுத்திக்கொண்டிருந்த போதும், அந்த உரையாடலைக் கேட்டமாத்திரத்தில் குப்புன்னு வேர்த்திருச்சு எனக்கு. அதுவேற என் வீட்டுக்கு போன் வந்திருந்த புதுசு. ஆர்வக்கோளாறாய் ஒரு துண்டு சீட்ல போன் நம்பர் எழுதி, பள்ளிக்கூடத்தில எனக்குத் தெரிஞ்ச எல்லாத்துக்கும் பிரசாதம் போல கொடுத்திருந்தேன். அதனால் போன் பண்ணின தோழியை என்னால் உடனே கண்டுபிடிக்க முடியல. அத்தனை களேபரத்திலும் ஒரே ஆறுதல், நான் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்ததுதான். இல்லாவிட்டால் ஒன்று கறிக்கொழம்பை தியாகம் செய்திருக்கவேண்டும்; இல்லாட்டி சாப்பிட மீண்டும் முன்னறைக்கு செல்ல வேண்டிய தர்மசங்கடத்தை சமாளித்திருக்க வேண்டும். அப்போது இரண்டுமே தேவைப்படாததால் கொஞ்சம் ஆறுதல்தான். சற்று நேரம் ஆங்கிலம் படிப்பதாய் சத்தம் போட்டுவிட்டு ஒருவழியாய் தூங்கினேன்.
.
மறுநாள் பள்ளியில் சம்பந்தப்பட்ட தோழி “என்ன Jack, பாட்டு பாத்தியா ?” எனக்கேட்க, பதிலுக்கு நான் நடந்த கதை சொல்ல.. ஒரே சிரிப்புமயம்தான்.
இன்றும் அப்பாடலை நான் கேட்கும்போதெல்லாம், “உன்னையெல்லாம்,…“ என எண்ணியபடியே அப்பா என்னை முறைக்கும் காட்சியும் வந்துபோகும்
என் வாழ்வில், பல வகைகளில் நான் மறக்கவே முடியாத அப்பாடல் :
https://www.youtube.com/watch?v=12rHbb79J8s

No comments: