title


தென்றலின் தேன்மலர்

சில பாடல்கள் முதல்முறை கேட்டவுடனே பிடித்துப்போய் நம் விருப்பப்பட்டியலில் நிரந்தர இடம் பிடித்துவிடும். சில பாடல்களோ வெளிவந்த புதிதில் நமக்கு மிகவும் பிடித்துப்போய் காலப்போக்கில் நம்மிடமிருந்து விலகிப்போய்விடுபவை. இன்னும் சில பாடல்களை, நாம் எப்படியோ தவறவிட்டிருப்போம்; ஒரு மாயம் போல் திடீரென ஏதேனும் ஒரு வகையில் (பெரும்பாலும் FM வாயிலாக) நம்முன் வந்து நம்மை நிறைத்து விடுபவை. வெகு சில பாடல்களின் பல்லவி நமக்கு மிகப்பிடித்திருக்கும் (யாருயா அது பல்லவி என்று பல்லிளிக்க வேண்டாம் மக்களே.. அது பாடலின் துவக்கம்) ஆனால் போகப் போக சரணத்தில் நம்முடைய ரசனைக்கு தோதுப்படாமல் சறுக்கியிருக்கும். இது எதிலும் அடங்காத சில பாடல்கள் உண்டு; சரணமோ அல்லது பாடல் துவங்கும் விதமோ நமக்குப் பிடிக்காமல் போய் நாம் அதை தவறவிட்டிருப்போம். ஊர் ஒலகமே அந்தப் பாட்டை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், நம்முடைய ரசனைக்கேறப இல்லாததால் நாம் அந்தப்பாடலில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம். பின்னர் அப்பாடல் நம்மீது கருணை கொண்டிருந்தால், என்றேனும் ஒருநாள் அதனடியில் நாம் இளைப்பாற அனுமதிக்கும்.
*
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் வந்த ஒரு பின்மதியப் பொழுது அது. கோடைகாலம் என்றபோதும், வெப்பம் இல்லாமல், கொஞ்சம் மேகமூட்டமாய் இருந்த சமயம். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நானும் என் நண்பனும் நடந்து வந்து கொண்டிருந்தோம். பேச்சு பலவிசயங்களை சுற்றிச்சுற்றி வந்தது. பேச்சின் காரணமாக, கடந்து செல்பவர்களை அசுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தேவகணத்தில், ஆற்றின் அடியாழத்தில் கிடக்கும் கூழாங்கல் தன் எடையிழந்து மேலெழும்புவதைப் போல, எழுந்து வந்தது அந்த வரி.
.
பாடலின் இடையில் வரும் வரிதான். பாடலும் நிச்சயம் நன்கு ஹிட்டான பாடலாகத்தான் இருக்கவேண்டும்; ஆனால் நான் அடிக்கடி கேட்கும் பாடல் அல்ல. எவ்வளவு யோசித்தும் அது எந்தப்பாடல் என்பது நினைவுக்கு வரவில்லை. அன்று முழுவதும், வழக்கம்போல வேலை செய்தபோதும், நண்பர்களுடன் கூடிப்பேசிக் களித்த தருணங்களிலும், மனதின் ஒரு மூலையில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தது அந்த வரி.
.
இரவில் வீடு திரும்பியபின்னர், கூகுளாண்வர் மற்றும் யூ-ட்யூப் துணையுடன் அந்தப்பாடலை கண்டுபிடித்தேன். அன்றிரவு மட்டும் குறைந்தபட்சம் ஒரு 5 முறையாவது கேட்டிருப்பேன். அதன்பின்னர் என் விருப்பப்பாடல் பட்டியலில் அந்தப்பாடலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டது. இன்றும் அப்பாடலின் பிற வரிகளைக் காட்டிலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான வரி அதுதான்.
*
ஒரு அழகான பாடலை நானடைய வழிகாட்டியாக இருந்த அந்த வரி
“தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…”
.
ஒற்றை வரியால் என்னை அலைக்கழித்து, பின்னர் என்னை விட்டு நீங்காதிருக்கும் அந்தப்பாடல் :

https://www.youtube.com/watch?v=D4DcyAl_tiM
:)

No comments: