title


தில்லு முல்லு

”பச்சைக் கிளிகள் தோளோடு”, கிருத்திகாவுக்கு மிகவும் பிடித்த பாடல்களுல் ஒன்று. அந்தப்பாடலின் இடையில் அப்பாவுக்கு மகள் “ஷேவிங்” பண்ணிவிடும் காட்சி வரும். அந்தப்பாடலை விரும்பி கேட்கத்துவங்கியதற்கு மறுவாரம் நான் ஷேவிங் பண்ணும்போது ஆசையாய் ஓடி வந்தவள் “அப்பா, நானு நானு” என கொஞ்சத்துவங்கினாள். ஆர்வத்துடன் நான் ப்ரஷை தந்தேன். நுரை நிரம்பிய ப்ரஷை, கையில் வாங்கியவள் என் முகமெங்கும் அப்பினாள், கிட்டத்தட்ட செவுத்துக்கு பெயிண்ட் அடிக்கறமாதிரின்னு வைங்க. நல்லவேளை வாயையும் கண்ணையும் முடீக்கொண்டிருந்ததால் தப்பினேன். அன்னிக்கு மட்டும் எம்பட மூஞ்சிய நீங்க பாத்திருந்தா, டெஸ்ட் கிரிக்கெட்ல வர பவுலர் ரேஞ்சுக்கு இருந்திருப்பேன். அதுக்கப்புறம், எம்மேல பரிதாபப்பட்டோ, இல்ல அவளுக்கே பாக்க சகிக்கலையோ என்னவோ, அந்தளவுக்கு பண்ணுறதில்லை. ஆனா, நான் எப்போது ஷேவிங் பண்ணத்துவங்கினாலும் அருகில் அமர்ந்து, ப்ரஷ், கிரீம் ஏதாவது எடுத்துக் கொடுப்பது அல்லது கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம்.
*
வூட்ல அம்மாவுக்கு நாம மீச இல்லாம இருந்தா ஆவாது. அருணாவுக்கு நாம கொஞ்சம் சுமார தெரியற எந்த கெட்டப்புமே ஆவாது. அதனால, மீச வக்காம இருக்கறதுக்கு, “வெள்ள முடி இருக்கு”, “ரொம்ப நேரமாகுது”, “ மீச, எச்சுக்கம்மியா போவுது” அப்படின்னு ஆயிரம் காரணம் சொன்னாலும் அத கேட்கறதேயில்லை. சரி, ஊரு ஒலகமே நமக்கு எதிரா இருப்பது வழக்கம்தானேன்னு நெனச்சுகிட்டு நானும் இப்பெல்லாம் மீச வச்சுக்கறது. சென்ற வாரம் அப்படித்தான், ஷேவிங் பண்ணிட்டு இருக்கும்போது வழக்கம்போல பக்கத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள் கிருத்திகா. திடீரென எதோ நினைத்துக் கொண்டவளாய் சொன்னாள்
“அப்பா, மீச வேணாம்பா”
பொங்கி வரும் சந்தோசத்துடன் கேட்டேன் “ஏம்பாப்பா ?”
“இல்லப்பா, முத்தா கொடுக்கயில குத்துதுப்பா”
சோகமாய் “இல்லமா, மீச வைக்காட்டி அம்மா திட்டுவாங்க” என்றேன்.
கொஞ்ச நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தவள், கேட்டாள் அந்த மில்லியன் டாலர் கேள்வியை
“ஏம்பா, மீச உங்களோடயது தானே…?”
”ஹீம் அதெல்லாம் ஒரு காலம் பாப்பா” என மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பரிதாபப் பார்வை பார்த்தேன்..
புரிந்தது போல ஒரு புன்னகை பூத்தாள் என் இளவரசி

No comments: