title


Back to the Heaven

லெளகீக வாழ்க்கையின் எவ்விதமான சிக்கல்களும், நிர்பந்தங்களும் இல்லாமல், இலகுவான மனதோடு இருந்த நாட்களில் நமக்கு வாய்க்கும் உண்மையான நட்பு வட்டம் ஒரு வரம். என் பதின்ம வயதின் இறுதியில் எனக்கு வாய்த்ததோ வெறும் வரமல்ல; அது ஒரு பெரும்வரம். மனதில் தோன்றும் விசயங்களை ஒளிவுமறைவின்றி, சாதி, பால் பேதமின்றி கட்டற்று பேசும் சுதந்திரத்தை நமக்குத் தந்த நட்பு பெருவரமன்றி வேறென்ன. அதிலும், பொதுவாக எல்லாருக்கும் அவர்களுடைய நட்புவட்டம் சுருங்கிப்போய், அந்த இடத்தை பாடப்புத்தகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் உண்டான நட்பு எங்களுடையது என்பது தனிச்சிறப்பு.
*
நான் மேல்நிலை பள்ளிக்கல்வியை முடித்த ஆண்டு 2001.எங்கள் நண்பர் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் PSG Tech, அமிர்தா, PSG கலைக்கல்லூரி, நந்தா என திசைக்கொன்றாய் பிரிந்து போக, நான் கொங்கு கல்லூரியில் BSc சேர்ந்தேன். அதன் பிறகு ஒரிரு முறை ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்திருந்தபோதும், நாங்கள் பிரிந்த வருடம் என்றால் அது 2001தான்.
சமீபத்தில் முகநூல் வாயிலாக (ஒரு பதிவை தொடர்ந்து) பரஸ்பரம் ஒரு ”Hi”, “Hello”,”Hai, how are you ?” பரிமாறிக்கொண்டோம். அதன் பின்னர், ஒரு குழுவாய் அன்றாடம் குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சில Conference Callகள் மூலமாகவும் தொடர்பில் இருந்தோம். அதன் ஒரு பகுதியாகத்தான் திட்டமிட்டோம் ஒரு சின்ன சந்திப்பை. இந்த வாரம் Long Weekendஎன்பதால் சந்திக்கும் தேதி ”25-ஜூன்” என முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்த சந்திப்புக்காய் நாங்கள் உருப்படியாய் திட்டமிட்டதும், திட்டமிட்டபடி சரியாய் அமைந்ததும் சந்திக்கும் தேதி மட்டுமே. அப்படியே, சரியாக 16 வருடங்கள் கழித்து நாங்கள் 5 நண்பர்கள் நேற்று கோவையில் சந்தித்தோம்.
*
”நாம மீட் பண்ணலாம் அவ்வளவுதான் மத்ததெல்லாம் Runtimeல ப்ளான் பண்ணிக்கலாம்” என typical IT மொழியில் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், சந்திப்பைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் மனதில் இல்லை.
.
06-25-2017 ஞாயிறு – உத்தேசமாக காலை 10:30 மணி
-
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து துவங்கியது எங்கள் பயணம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்ததால் கார் முன் நோக்கி சென்றுகொண்டிருக்க, சிந்தனைகளும் காலமும் பின்நோக்கி சென்றுகொண்டிருந்தன. போகும் இடம் பற்றி எந்த ஒரு இலக்கும் இல்லாதபோதும் ஏதேனும் ஒரு திசையில் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் ஈஷாவுக்கு செல்லலாம் என முடிவெடுத்து R.Sபுரம்தாண்டி வடவள்ளி சாலையில் பயணிக்கத் துவங்கியிருந்தோம். வார்த்தைகளால், எண்ணங்களால், மனதில் நிறைந்திருந்த நினைவுகளால் மீண்டு வந்தது கடந்துபோன எங்கள் வசந்தகாலம். பெரும்பாலான சம்பவங்களை, அந்தந்த நேரத்து உணர்ச்சிகளுடன் துல்லியமாக மீட்டெடுக்க முடிந்ததில் தெரிந்தது, அந்த காலகட்டத்துக்கு / அந்த சம்பவங்களுக்கு நாங்கள் எங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்தது. இதற்கிடையே, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை “பார்த்து”விட்டு, பூண்டிக்கு சென்றோம் அங்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை “தரிசித்து”விட்டு கோவைக்கு திரும்ப காரில் ஏறினோம். அந்த நாளின் மகிழ்ச்சி பெருமகிழ்ச்சியாகும்படி பெய்தது மழை.
.
அடித்துப்பெய்யும் பெருமழையல்ல, மண்ணைக் கொஞ்சும் செல்ல மழை. நாசியை நிறைத்த மண்வாசத்துடன் பழங்கதைகள் பேசியபடியே சென்ற பயணத்தை அழகை உணரவேண்டுமானால் நீங்களும் அத்தகைய பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். மதிய உணவு அன்னபூர்ணா Peoples Parkல் முடித்துவிட்டு எங்கள் பயணத்தைத் (நினைவுகளை) தொடர்ந்தோம். எங்கள் சந்திப்பு அவிநாசியில் முடியும் போது மணி மாலை 6:30.
*
பல வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்தபோதும், அப்போது நாங்கள் விட்ட இடத்திலிருந்து எங்கள் உரையாடலைத் துவக்கமுடிந்ததும்… “நம்ம ப்ரண்டுடா...” எனும் உரிமை இன்றும் தொடர்வதும் அற்புதம்தான். இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் சிரிப்பால் நிறைத்துக்கொண்டோம். கண்ணில் நீர் வழிய சிரித்தும்; சிரித்து சிரித்தே வயிறு வலித்ததுமான இந்தப்பயணம் எங்கள் நினைவில் வெகுகாலம் நிலைத்திருக்கும்.
*
வாழ்வில் நூறானந்தம் :) வாழ்வே பேரானந்தம் :)
A Special Thanks to Facebook :)

No comments: