மனதுள் வரைமுறையில்லாது
வன்மம் கட்டவிழ்ந்து
கொண்டேயிருக்கிறது !
என்ன மூலம்?
எவரெவர் பயனாளி?
எதுவும் எண்ணாது !
எது துவக்கப்புள்ளி ?
எப்படி முடிவுறும் ?
வரையறுக்கவியலாத
காட்டாறு போல்
பெருகி ஓடுகிறது !
அடிபட்ட பாம்பின்
சீற்றமா?
அணையப்போகும் விளக்கின்
பிரகாசமா?
வன்மத்தின் வரலாறு
வார்த்தைகளுல் அடங்காது!
பாலையின் சூறைக்காற்றென
மணல் மூடி மழுங்கடிக்கப்பட்டது
மனம் !
அறிவிற்கும் மனதுக்குமிடையே
ஆயிரமாயிரம் தர்க்கங்கள்
தர்க்கத்தில் தோற்றுப்போய்
சூதால் கவ்வப்படுகிறதென்
வாழ்க்கை !
நினைவிருந்த போதும்
வன்மத்தால் நிரம்பி
வழிகிறதென் மனம் !
அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சாகும்....
நஞ்சு அமுதாகுமோ?
விடையறிந்த காலதேவன்
விளையாட்டை தொடருகின்றான் !
No comments:
Post a Comment