title


ஹி ஹி...

அருணாவுக்கு அன்றாடம் 8 மணி டியூட்டி. அம்மா உணவு தயாரிப்பார்கள்; அப்பா மாவு விற்பனை. பாத்திரம் துலக்கி, கிளம்புவே அருணாவுக்கு நேரம் சரியாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளை பல் துலக்கி, குளிப்பாட்டும் பொறுப்பு (சாப்பாடு ஊட்டுவது தனிக்கணக்கு) என்னுடையது. காலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புவதுபோல் டென்சனாக்கும் வேலை பிறிதொன்றில்லை. நாம் ”குளிக்க வாடா” என அவசரத்தில் கத்தும்போதுதான் கார்த்திக் மும்முரமாக ஏதாவதை ரசித்துக்கொண்டிருப்பான். ”பாப்பா, வாய திற பல்லு வெளக்கலாம்” என கதறும்போதுதான், மற்றெல்லா சமயத்திலும் வாய் மூடாது பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகா, ஃபெவி குயிக் போட்டதுமாதிரி வாயை மூடிக்கொண்டிருப்பாள். ஆக, இவிங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பறதும் பத்துப்பதினஞ்சு ராக்கெட் விடுறதும் கிட்டத்தட்ட ஒண்ணு.
*
இன்றும் வழக்கம்போலதான், 7:15 மணியளவில் கார்த்திக்கையும் கிருத்திகாவையும் எழுப்பினேன். அடுத்தகட்ட நடவடிக்கை பல்லு விலக்கிவிடுவது. இந்த இடத்துல முக்கியமான ஒரு குறிப்பு இருக்குது; கிருத்திகாவ பொருத்தமட்டில் இந்த மாதிரி விசயங்களில் ஓரளவு பரவாயில்லை; அதாவது பல் துலக்க வாய திறக்க வைக்கிறது மட்டும்தான் கஷ்டம்; அதுக்கப்புறம் இறக்கத்துல சைக்கிள் ஓட்டுற மாதிரி வண்டி ஓரளவுக்கு ஸ்மூத்தா போயிடும். ஆனா, பயபுள்ள கார்த்திக் இருக்கானே, அவன வாய திறக்கவைக்கறதும் கஷ்டம், பல்துலக்கி விடுறதும் கஷ்டம். வேறொன்னுமில்ல, கரெக்டா பல் விலக்க ஆரம்பிச்சா சொல்றதுக்குன்னே அவன்கிட்ட நிறைய விசயம் ஸ்டாக் இருக்கும்; ஒருவழியா அத எல்லாம் கவனிக்காம அவன டைவர்ட் பண்ணி பல் துலக்கி விடுறது பெரிய கலை. இன்னைக்கும் அப்படித்தான், கரெக்டா பல் விலக்க துவங்கும்போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். (உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல) அதிகாலையிலேயே எழுந்துவிட்டதால் எனக்கும் சற்று தூக்கக்கலக்கம், போதாதற்கு நம்மாளு ஹிஸ்டரிப்படி, பல் விலக்கும்போது சொல்லும் கதைதான் என்று, மீண்டும் மீண்டும் ஏதோ சொல்லவந்தவனை அதட்டி உருட்டி அடக்கி பல் துலக்கிவிடத் துவங்கினேன்.
.
இரண்டு தேய்ப்புதான் தேய்த்திருப்பேன், கையை தட்டிவிட்டான். எப்போதும் இது வழக்கமில்லை; ஆக, ஏதோ சீரியசான விசயம் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு வாயை ரிலீஸ் பண்ணினதுதான் தாமதம். வாய் நிறைய நுரையுடன் கதறும் குரலில் குழறலாகச் சொன்னான்
“அப்பாஆஆஆஆஆஆ, அது பாப்பா ப்ரஸ்சுப்பா…”
தகப்பனின் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா… :)

No comments: