title


4 ஜீன் - பாலு சார்

இந்தப் பாடலை பிறகொரு தருணத்தில்தான் பகிர்வதாய்த்தான் உத்தேசம்... ஆனால் இன்று ஒரு சிறப்பான நாள்... அதன் பொருட்டு இப்பாடல் குறித்த ஒரு சிறுகுறிப்பு மட்டும் இன்று ....
*
2007 ஜுலை 2ஆம் தேதி நொய்டாவில் துவங்கியது TCS training. அதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருந்த / படித்திருந்த, உணவில் துவங்கி உணர்வு /கலாச்சாரம் வரையிலான வட மற்றும் தென் இந்திய வேறுபாடுகளை நேரடியாக உணர்ந்த இரண்டு மாதங்கள் அவை. அந்த பயிற்சிக்காலத்தின் இரவுப்பொழுதுகளை விடுதியின் முன்பிருக்கும் புல்வெளியில் PSG Tech நண்பர்கள் கூடி உரையாடல்களால் கழிப்போம். சமயங்களில் அத்தகைய உரையாடல்களில் வட இந்திய மாணவர்களும் கலந்துகொள்வதுண்டு. வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இல்லாத போதும், சிந்தனையில், ரசனையில் அவர்களுடன் குறிப்பிடத்தகுந்த இடைவெளியை உணர்ந்த உரையாடல்கள் அவை. அன்றைய தினம் கொஞ்சம் சிறப்பானது. தன் வாழ்நாளில் தான் சந்திக்கவிருப்பும் ஒரு மனிதரைப் பற்றி பரவசமாக பேசிக்கொண்டிருந்தான் ஒரு வட இந்திய நண்பன். அவன் தான் சந்திக்க விரும்புவதாகச் சொன்னது ஒரு பின்னணிப் பாடகரை. அவர், ஆறு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்; இந்தியாவின் பல மொழிகளில் பாடும் புலமை பெற்றவர்; எல்லாவற்றும் மேலாக, ஒரு கின்னஸ் சாதனையாளர். முக்கியமாக ஒரு தென்னிந்தியர்.
*
மிகச்சிறந்த நடிகர், பெரும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் என சில பாடல்கள் வெகு புகழ் பெற்றிருக்கும்; நாமும் அதை தேடித் தேடிக் கேட்டிருப்போம். ஆனால், இத்தகைய அடையாளங்கள் ஏதுமற்றபோதும் நமக்கான சில பாடல்கள் நம்மைத்தேடி வரும். கொங்கு கல்லூரியில் படிக்கும் போது, அவினாசியில் இருந்து பெருந்துறை வந்த பேருந்தில் அப்படித்தான் இந்தப்பாடல் என்னைச் சேர்ந்தது. கேட்டவுடன் பிடித்துப்போன அந்த பாடல் ஒருவேளை மறந்துவிடக்கூடும் என்ற படபடப்பில் பெருந்துறையில் இறங்கியவுடன் நடந்து சென்றது நாதன் மியூசிகல்ஸ்க்கு. படம் பேர் தெரியாமல், இசையமைப்பாளரும் தெரியாமல், மனதில் (அப்போது) நின்றிருந்த முதல் இரண்டு வரிகளை மட்டுமே சொல்லிச் சொல்லி ஒருவழியாக அந்தப்பாடலை கண்டறிந்தேன். இன்றும் ஒலிக்கும்போது என்னை ஒப்புக்கொடுத்துவிடும் சில பாடல்களுல் அப்பாடலுக்குத்தான் முதலிடம். பின்னாளில் தேடிப்பிடித்து இந்தப்படம் பார்த்தேன். படமும் பிடித்தது. படம் மட்டுமல்ல படத்தின் அத்தனை பாடல்களும். (இன்றுவரை, இப்பாடல் பற்றி பலரிடம் சிலாகித்தாலும், நெருங்கிய நண்பன் ஒருவனைத்தவிர, மற்றெல்லாருக்கும் அப்படியொன்றும் விசேஷமாக தோன்றவில்லை என்பதுதான் இப்பாடல் குறித்த ஒரே வருத்தம்)
*
வட இந்திய நண்பன் தன் வாழ் நாளில் காண விரும்பிய அந்த பின்னணிப் பாடகர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். மேற்ச்சொன்ன என் வாழ்நாளின் சிறந்த பாடல்களுல் ஒன்றைப் பாடியவர்; பாடியவர் மட்டுமல்ல, அந்தப் படத்தின் நாயகனும் அவர்தான். பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் அமைந்த அந்தத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் அவரே.
*
நெல்லூரில் 4-June-1946ல் பிறந்து இன்று 71 வயதை நிறைவு செய்யும் அவர்தான் “சிகரம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் நாயகன்.
*
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் பாடும் நிலாவுக்கு…
*
தனிப்பட்ட முறையில், ஒரு பாடகர் என்பதை விடவும் ஒரு இசையமைப்பாளராய் அவரை நெருக்கமாக உணரவைத்த அப்பாடல் இதோ :
https://www.youtube.com/watch?v=a5ZXz4Hm6_o

No comments: