title


கலை - தட்சணை

அப்பாவுக்கும் கார்த்திக்கும் இருக்கும் நெருக்கம் சமயத்தில் எனக்கு பொறாமையை வரவழைக்கும். சாதாரணமா நான் ஒரு நாலு நாள் கஷ்ட்டப்பட்டு அனுமதி வாங்குற ஒரு விசயத்துக்கு அவன் அதிகபட்சம் அஞ்சு நிமிசம் எடுத்துக்குவான். ஒரு “ப்ளீஸ் தாத்தா” போதும்; ஒருவேளை அதுக்கு மசியாவிடில் கொஞ்சம் சோகமாக (நடிப்பாதான் இருக்கும்) உக்கார்ந்திருந்தால் போதும் கேட்டது தானே கிடைக்கும். வீட்டில் இருந்தால், பெரும்பாலும் அப்பா செல்லும் அனைத்து இடங்களுக்கும் தவறாமல் உடன் செல்வது கார்த்திக்கின் வழக்கம். இம்மாதிரியான விசயங்களில் ”ஓவர் செல்லம்” என அடுத்தவரை விமர்சிக்கும் அப்பாவும் “அவன் பாட்டுக்கு அமைதியா வரான்; அதுல என்ன பிரச்சனை” என அனுமதிப்பது வழக்கம். இன்றும் அப்படித்தான். மாலை ஒரு கல்யாணத்துக்கு அப்பா கருமத்தம்பட்டி சென்றிருக்கிறார்; உடன் நம்ம தலைவரும். திருமணம் முடிந்து வந்தவன் நான் வருவதற்காக காத்திருந்தான். 11:30 மணியளவில் நான் வந்தவுடன் சொக்கும் தூக்கத்திலும் வெகு உற்சாகமாக கையில் உள்ள தாளைக் காட்டினான்.
*
அந்தத் திருமணவீட்டார் நிச்சயமாக நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
ஆர்க்கெஸ்ட்ரா, பரத நாட்டியம், வீணை / வயலின் இசை, பாடல்கள் என ஏதாவது ஒரு கலைவடிவம் திருமணவீடுகளில் நிறைந்திருப்பது வழக்கம்தான். ஆனால் இன்றைய விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விசயம் நான் கேள்விப்படாத ஒன்று.
இரண்டு ஓவியர்களை வைத்து, விருப்பப்படும் அனைவரின் கோட்டோவியத்தை வரைந்து தர ஏற்பாடு செய்திருந்தார்களாம். பெரும் ஆர்வத்துடன் கூடியிருந்த திரளில் பெரும்பாலும் நிரம்பியிருந்தவர்கள் குழந்தைகள். கூட்டம் அதிகமாயிருந்தபோதும் நிச்சயம் வரைந்தே ஆகவேண்டும் என காத்திருந்து தன் ஓவியத்தை வாங்கி வந்திருந்தான் கார்த்திக். என்னிடன் அவன் காட்டிய தாளில் இருந்தது கார்த்திக்கை நகலெடுத்த அட்டகாசமான ஓவியம். அதை வரைந்து முடிக்க வெறும் 10 நிமிடங்கள் கூட ஆகவில்லை என அப்பா சொன்னார். <ஓவியத்தை பின்னர் பதிவேற்றுகிறேன்....>
*
நண்பர்களே, நம்மிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கக்கூடும்; பாட்டோ, இசையோ, எழுத்தோ, ஓவியமோ, கவிதையோ, நடனமோ.. இப்படி ஏதாவது ஒன்று. அடுத்தவர் ஏளனத்தின் பாற்பட்ட அச்சமோ அல்லது அன்றாட வாழ்வின் சுழலில் சிக்கிக்கொண்ட நியாயமான காரணமோ, இப்படி ஏதாவது ஒன்றால் நீங்கள் அந்தக் கலையை மறந்திருக்கவும் கூடும். உங்களிடம் சொல்லிக்கொள்ளவும் மன்றாடிக்கேட்கவும் என்னிடம் ஒரு விண்ணப்பம் உள்ளது….
.
மற்றவர்களுக்கு எப்படியோ, இன்று திருமண மண்டபத்தில் தன் கலை தந்த பரவசத்தில் குதித்தோடும் குழந்தைகளால் ஒரு கணமேனும் பெருமிதம் அடைந்திருப்பான் அக்கலைஞன். பணம், சொத்து, புகழ்வெளிச்சம் எல்லாம் கடந்து ஒரு அப்பழுக்கற்ற புன்னகையை அவன் நிச்சயம் பூத்திருப்பான். அது அவன் புன்னகை அல்ல; அவனது கலையின் புன்னகை. ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமிருக்கும் நாம் அனைவரும் செல்லவேண்டியது நம் கலையும் புன்னகைக்கும் அத்தருணம் நோக்கியே.
அந்தப்பயணத்தில் இருப்பதுதான் நம் வாழ்க்கையே அன்றி.. வெறுமனே வாழ்வதில் இல்லை,
எதன் பொருட்டும் வெறுமனே வாழ்வதில் இல்லை.

No comments: