title


11 ஜீன் 2017

2009 ஆம் வருட மத்தியில் ஒரு நாள்…
சென்னையிலிருந்து கோவை செல்லும் intercity ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பப்போகிறது... திருமணம் முடிந்து மறுவீடு வைக்கும் சடங்குக்காக சென்னை வந்திருந்த அத்தையையும் மாமாவையும் வழியனுப்ப நானும் அருணாவும் சென்னை சென்ட்ரலில் இருந்தோம். ரயில் கிளம்புவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. என் கைகளை பிடித்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் நெகிழ்ந்த குரலில் என் மாமனார் சொன்னார், "மாப்ள, அருணா கொஞ்சம் கோவக்காரி, சின்ன விசயத்துக்கு கூட சட்டுன்னு டென்சன் ஆகிடுவா... கொஞ்சம் பாத்துக்குங்க" என்றார். ”அதுக்கென்னங்க மாமா பாத்துக்கலாம்ங்க” என தைரியம் சொல்லி அனுப்பினேன். ஆனால், இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் நான் அடிக்கடி நினைத்துப்பார்க்கும் தீர்க்கதரிசி என் மாமனார்தான். அதுமட்டுமல்ல, அன்று அவர் கண் கலங்கியதும், கொஞ்சம் பாத்துக்கோங்க என சொன்னதும் என்னை நினைத்துத்தான் என்பது புரிய எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது :)
*
Jokes apart...
சனிக்கிழமை இரவு க்ளாசிக் சினிமாக்கள், வாசிப்பும் பகிர்தலும், இலக்கில்லாத பயணங்கள், எப்போதும் இசைமழை, ஓயாத நெடும்பேச்சு என திருமணம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் / கற்பனைகள் இருந்தன; அதில் சில விசயங்கள் நிறைவேறியிருக்கின்றன. சில விசயங்கள் கனவாகவே போயிருக்கின்றன. இதைப்போலவே, வேறு சில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் உனக்கும் இருந்திருக்கக்கூடும். நிராசையாய்ப் போன கனவுகளையும் தாண்டி இதுவரை நான் வாழ்ந்திருப்பது ஒரு சந்தோசமான வாழ்க்கையைத்தான். நன்றிகள் அருணா.
*
2009 – ஜீன் -11 அதிகாலை 5 மணியளவில், கரியகாளியம்மன் திருக்கோவிலில் உன் கழுத்தில் மங்கல நாண் அணிவித்த தருணத்திலும், கண்ணீர் வழிய உன் கரத்தை உன் பெற்றோர்கள் என் பெற்றோரிடம் ஒப்படைத்த தருணத்திலும், நான் நினைத்த ஒன்றுண்டு… “பெண் என்கின்ற ஒரே காரணத்துக்காகவோ அல்லது நீ என் மனைவி என்கிற சாக்கை முன்வைத்தோ, ஒருபோதும் உன் சுயத்தை நான் அழித்து விடக்கூடாது” என்பதுதான் அது. இந்த நாளிலும் நான் அதையே மீண்டும் ஒருமுறை எண்ணிக்கொள்கிறேன்.
*
வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப்போகும் வாழ்க்கைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் Aruna Kalees...

கூடவே இந்நாளுக்கான வாழ்த்துக்களும் :)
Happy wedding anniversary dear :)
May God save Me :) :)

No comments: