title


கேள்வியின் நாயகர்கள்

பேரன்புடையீர்,
சற்றே கருணை வையுங்கள்…
*
ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் சொல்ல
ஆயிரம் கதைகள் உண்டு
என்னிடம்
*
ஒற்றைக்கோப்பையில்
எச்சில் தேநீரை நாம்
பரஸ்பரம் பகிர்ந்து அருந்துவதில்
யாதொரு தயக்கமும் இல்லை
எனக்கு
*
வலி மிகுந்த உங்கள் துயரங்களை
எனதென எண்ணி மருகும் மனதும்
உங்கள் விழி நீர் துடைக்கும்
கரமும் என்னிடமுண்டு….
*
சொன்னவனை கருதாது
சொற்களைக் கருதும்
பகுத்தறியும் புத்தி
கொஞ்சம் உண்டு.
*
உங்களைப் போலத்தான் நானும்...
அடித்தால் எனக்கும் வலிக்கும்
என்னுடைய அன்பு வீணாகுந்தோறும்
கண்ணீர் சிந்துவேன்
பசித்தால் உண்பதும்
என்னுடலில் கீறினால் ரத்தம் வருவதும்
அப்படியே உங்களைப் போலத்தான்…
*
ஆகவே, தயவுசெய்து
என் முகத்தெதிரே நீட்டாதீர்
உங்கள் ஜாதியை…
.
அப்படியே அருள் கூர்ந்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ
கேட்காதீர் அந்தக் கேள்வியை….
.
“நீ என்ன ஜாதி ?” எனும்
அந்தக் கேள்வியை…

No comments: